You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் பதவி நீக்கம்: முக்கிய தீர்மானம் நிறைவேறியது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது,
டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எப்படி வெளிப்படையாகும் என்பது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்படுவது பற்றிய வாக்கெடுப்பு அல்ல இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனநாயக கட்சியினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள அவையில் ஆதரவு கிடைக்கும் என்பதை காட்டுக்கின்ற முதல் சோதனை முயற்சி இதுவாகும்.
கட்சி கொள்கை வழிமுறையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பை வெள்ளை மாளிகை கண்டனம் செய்துள்ளது.
விசாரணை நடைமுறைகளை தொடங்க ஆதரவாக 232 பேரும், எதிராக 196 பேரும் வாக்களித்துள்ளனர்.
நாடாளுமன்ற விசாரணையில் டிரம்பின் வழக்கறிஞர்களின் உரிமைகளை வழங்குவதற்கு சரியான நடைமுறைகளையும் இந்த தீர்மானம் விவரிக்கிறது.
முன்னதாக, தன் மீதான பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தியிருந்தார்.
இழிவான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி, ஜனநாயக கட்சி தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்த டிரம்ப், அவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தினார்.
ஆனால் இந்த விசாரணை நடப்பதை நியாயப்படுத்தியுள்ள ஜனநாயக கட்சியினர், நிச்சயம் ஒரு நேர்மையான நடைமுறையில் விசாரணை நடைபெறும் என்று நம்பிக்கை வெளிப்படுத்தியிருந்தனர்.
டிரம்ப் மீது விசாரணை ஏன்?
அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரைன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.
இவர்கள் இருவரும் தொலைப்பேசியில் என்ன பேசினார்கள் என்பது கூறப்படவில்லை, ஆனால் அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரேன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் , அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அழைத்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியின் குற்றம்சாட்டுகின்றனர்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசி, அதிபர் டிரம்ப் 'இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ''குப்பை'' என்று வர்ணித்துள்ளார்.
அதிபர் டிரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஜனநாயக கட்சியினர் மத்தியில் பலத்த ஆதரவு இருந்தாலும், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள செனட் சபையில் இது தொடர்பாக ஒப்புதல் கிடைக்காது என்றே கூறப்படுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்