You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமணமாகாத வெளிநாட்டு ஜோடிகள் இனி சௌதி விடுதிகளில் தங்கலாம் மற்றும் பிற செய்திகள்
சௌதியில் அரேபியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசா நடைமுறைகளின்படி, வெளிநாடுகளை சேர்ந்த திருமணமாகாத ஜோடிகள் அந்நாட்டின் விடுதிகளில் இனி தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, முன்னெப்போதுமில்லாத வகையில் பெண்கள் மட்டும் தனியே விடுதிகளில் தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு வரை ஜோடிகள் தங்களது திருமணத்தை தக்க ஆவணங்கள் மூலம் நிரூபித்த பிறகுதான் விடுதி அறைகளில் தங்க முடியும்.
சௌதி அரேபியாவில் சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்துவதற்காக அந்நாட்டின் விசா நடைமுறையில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், நாடு முழுவதும் மதுபானம் மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலில் வெங்காயம் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன?
இந்தியா முழுக்க வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வடக்கில் சில பகுதிகளில் கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 80 ரூபாயாக இருந்தது. முந்தைய மாதங்களில் இது கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது.
இப்போது, இது பெரிய விலை உயர்வாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வீடுகளுக்கு இது அதிகமான விலையாக உள்ளது. இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் அதிக வெங்காயம் கிடைக்கும்போது விலை குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க:இந்திய அரசியலில் வெங்காயம் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன?
எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு
மத்திய அரசிற்கு கீழ் இயங்கும் ஜிம்பர் மருத்துவமனை மற்றும் அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கையும் இனி நீட் நுழைவுத் தேர்வு வைத்தே நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுவரை ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அவர்களுக்கென தனி நுழைவுத்தேர்வு வைத்தே மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தன. இனி அடுத்த கல்வி ஆண்டில், அதாவது 2020ல் இருந்து நீட் நுழைவுத்தேர்வு வழியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
விரிவாக படிக்க:எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு
பிக்பாஸ் 3: இவர்தான் வெற்றியாளரா?
பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிக்பாஸ் வீட்டின் அன்பு, காதல், சண்டை, சூழ்ச்சி, கோபம், வெறுப்பு, பிரிவு உள்ளிட்டவை சமூக வலைத்தளத்தில் நூறு நாள்களுக்கு மேல் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளன.
சரி. கடந்த நூறு நாள்களாக இந்த நிகழ்ச்சியில் நடந்தவை என்ன? விவாதத்துக்கு உள்ளான விஷயங்கள் எவை? கமலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் அகத்திற்குள் செல்வோம்.
மரங்களைக் காக்க பா.ஜ.க அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்
மும்பையில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் அமைப்பதற்காக ஆரே எனும் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை முழுவதிலும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு சனிக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்