செயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், BRIAN LAPOINTE, FLORIDA ATLANTIC UNIVERSITY
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பரந்து மிதந்து கிடக்கும் கடற்பாசி பரப்பே உலகின் மிகப்பெரியது என்று விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் கூறுகின்றன.
அட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப் பரப்பு இதற்கு முன் இருக்காத வகையில் புதிதாக உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இப்பாசி பரப்பு அதிமாக வளர்வதற்கு, காடுகளை அழிப்பதும், உரங்களை பயன்படுத்துவதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், BRIAN COUSIN, FLORIDA ATLANTIC UNIVERSITY'S HARBOR
கடற்கரைகளில் அதிகளவு கடற்பாசி இருப்பது சுற்றுச்சூழலை பாதிக்கிறது.
மேற்கூறப்பட்டுள்ள இந்த கடற்பாசி 8,850 கிலோ மீட்டர் தூரம் பரந்திருக்கிறது. அதன் எடை 20 மில்லியன் டன்கள் ஆகும்.

மகாராஷ்டிரா கனமழை: அணை உடைந்து பெரும் பாதிப்பு

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் திவாரே அணை கடந்த செவ்வாயன்று உடைந்தது. கொங்கன் பகுதியில் சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்துள்ளது. ஆனால் செவ்வாயன்று பெய்த கனமழை காரணமாக நீரோட்டம் அதிகமாகி அணையில் விரிசல் விழுந்தது.
அடுத்து சில தருணங்களில் அங்கிருந்த அனைத்தும் அழிந்துவிட்டது. அங்கு வாழ்ந்த 14 குடும்பங்களும் வெள்ள பெருக்கால் அழிந்தன.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காணாமல் போயினர்.
திவாரே அணை மிகவும் அழகான இயற்கை அமைப்பை பெற்றது. சுற்றிலும் எங்கும் பசுமையை கொண்டிருக்கும். அந்த அணைக்கு அடியில் வஷிஷ்டி என்னும் ஆறு இருக்கும். நீரோட்டத்தின் அழகான ஒளியை கேட்கும் இடத்தில் தற்போது மக்களின் அழுகுரல் கேட்கிறது.

உதயநிதி ஸ்டாலின்: தயாரிப்பாளர் - கதாநாயகன் - தி.மு.க இளைஞரணி செயலாளர்

பட மூலாதாரம், FACEBOOK
தி.மு.கவின் புதிய இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
1977ல் பிறந்த உதயநிதி ஸ்டாலின் டான் பாஸ்கோ பள்ளியில் பள்ளிக்கல்வியையும் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பையும் முடித்தார்.
இதற்குப் பிறகு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படங்களைத் தயாரித்துவந்தார். 2009ஆம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு கிருத்திகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
விரிவாக படிக்க: தயாரிப்பாளர் - கதாநாயகன் - தி.மு.க இளைஞரணி செயலாளர் - உதயநிதி ஸ்டாலின் கடந்துவந்த பாதை

ஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பிணை மீதான கோரிக்கையும் அன்றைய தினத்தில் நீதவானினால் ஆராயப்படவுள்ளது.
இந்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் எதிராக தண்டனை சட்ட கோவையில் வழக்கு தொடரப்பட்டுள்ள சட்ட சரத்துக்கள் தொடர்பான விளக்கத்தை சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே தெளிவூட்டினார்.

'டிக்டாக்' மூலம் காணாமல்போன கணவரை கண்டுபிடித்த மனைவி

விழுப்புரம் மாவட்டத்தின் வழுதரெட்டியை சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரை கண்டுபிடித்து மீண்டும் ஒன்றுசேர டிக்டாக் செயலி உதவியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரதா, கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் என்பவரை திருணம் செய்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சுரேஷ் ஒருநாள் வீட்டுக்கு வரவில்லை.
கணவரை தேடிய ஜெயபிரதா தனது முயற்சிகள் அனைத்து பயனளிக்காததால், விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை (ஃஎப்ஐஆர்) பதிவு செய்துள்ளார்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், இந்த டிக்டாக் காணொளியை பார்த்த ஜெயபிரதாவின் உறவினர்கள், அந்த காணொளியில் இருப்பவர் சுரேஷ் என இனம் கண்டுள்ளனர்.
விரிவாக படிக்க: ‘டிக்டாக்’ மூலம் காணாமல்போன கணவரை கண்டுபிடித்த மனைவி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












