You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இயற்கையின் மகோன்னதம்: புற்களால் கட்டப்பட்ட 600 ஆண்டுகால பழமையான நடைப்பாலம்
இயற்கையின் மகோன்னதம் ஆச்சரியமளிக்கக்கூடியது. அதன் அற்புதம் சிலிர்ப்பை உண்டாக்கக் கூடியது. அப்படியானதுதான் இந்த புல் பாலமும்.
வெறும் புற்களை கைகளால் நெய்து செய்யப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையானது. பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ பகுதியில் ஓடும் அபோரிமாக் நதிக்கு குறுக்கே இது அமைந்துள்ளது.
இன்கா அரசில் இந்த பாலம் நகரங்களை இணைத்தது. யுனெஸ்கோவால் 2013ம் ஆண்டு உலக புராதான சின்னமாக அறிவிக்கப்பட்டது.
புல் பாலம்
புற்களால் செய்யப்பட்ட இந்த பாலத்தின் கயிற்றை ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்தி, புது கயிற்றை இரு பக்கமும் கட்டுவார்கள்.
பல தலைமுறைகளாக இந்த பழக்கம் தொடர்ந்து வருகிறது.
இந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் கூடி, சிதிலமடைந்த கயிற்றை அப்புறப்படுத்தி புது கயிற்றை கட்டி, இந்த பாலத்திற்கு உயிர் தருவார்கள்.
பாலம் கட்டும் பணியில் ஆண்கள் மட்டும்தான் ஈடுபடுவார்கள். பெண்கள் இந்த பாலத்திற்கான கயிற்றை புற்கள் கொண்டு நெய்து தருவார்கள்.
மூன்று நாட்கள் இந்த பாலம் கட்டும் பணி நடக்கும்.
முதல் நாள் ஆண்கள் எல்லாம் கூடி, புற்களால் நெய்யப்பட்ட சிறு கயிறுகள் அனைத்தையும் ஒன்றாக்கி பெரிய கயிறாக மாற்றுவார்கள்.
ஒவ்வொரு குடும்பமும் இதற்கான கயிற்றை வழங்க வேண்டும்.
கூட்டு முயற்சி
கயிறு உறுதியாக இருக்க இந்தப் புற்களை நன்கு அடித்து, பின் தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னே நெய்வார்கள்.
இந்த பாலம் கட்டும் பணி நடக்கும் மூன்று தினங்களும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கேயே சமையல் செய்வார்கள்.
பழைய கயிறு பாலத்தை ஆற்றில் தள்ளிவிடுவார்கள். மட்கும் பொருள் என்பதால் அது ஆற்றில் கலந்து மட்கிவிடும்.
இந்த பாலம் கட்டும் பணியில் எந்த நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட மாட்டாது. முழுக்க முழுக்க புற்கள் மட்டும் மனித ஆற்றலை கொண்டு மட்டுமே இந்தப் பாலம் கட்டப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்