You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி, 20 பேர் காயம்
இரானில் தென் மேற்கு நகரமான அஹ்வஸில் ராணுவ அணிவகுப்பின் போது துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில், பொதுமக்கள் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அணிவகுப்பு நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள பூங்காவில் இருந்து துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ராணுவ சீருடைகள் அணிந்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலுக்கு பின்னால் இஸ்லாமிய போராளிகள் இருக்கக்கூடும் என அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இராக்குடன் 1980-88 போர் தொடக்கத்தின் ஆண்டினை குறிக்கும் வகையில், அந்நாடு முழுவதும் ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளூர் நேரப்படி 9:00 மணிக்கு தொடங்கிய இத்தாக்குதலில் குறைந்தது நான்கு துப்பாக்கிதாரிகள் ஈடுபட்தாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்நிலையில், இரண்டு துப்பாக்கிதாரிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் துணை ஆளுநர் அலி ஹொசைன் தெரிவித்தார்.
இரான் புரட்சிக்கர படை என்று அழைக்கப்படும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த எட்டு பேர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடக்கம். பொதுமக்களை நோக்கி சுட்ட அவர்கள், பின்பு மேடை மீது இருந்த ராணுவ அதிகாரிகள் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்து காயமடைந்த ராணுவ வீரர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சிகளும் காண முடிந்தது.
சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்