பாலத்தீனர்களுக்கான உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு
உலகப்பார்வை : கடந்த சில மணிநேரங்களில் உலகில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் குறித்த செய்திகளின் தொகுப்பு

பட மூலாதாரம், Anadolu Agency
பாலத்தீனர்களுக்கான 200 மில்லியன் டாலர் உதவி - அமெரிக்கா ரத்து
மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள பாலத்தீனர்களுக்கான 200 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான உதவியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
டிரம்பின் வழிகாட்டலின்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பணமானது வேறு எங்கேனும் அதிக முன்னுரிமை தேவைப்படும் திட்டங்களுக்கு பயன்படுத்தபடவுள்ளதாக கூறியுள்ளார்.
டிரம்பின் நிர்வாகம் ''அரசியல் ஆயுதமாக ஒரு மலிவான அச்சுறுத்தலை பயன்படுத்துவதாக'' ஒரு மூத்த பாலத்தீன அதிகாரியான ஹனான் அஷ்ராவி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக டிரம்ப் அறிவித்ததில் இருந்து அமெரிக்காவின் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பாலத்தீன தலைமை நிராகரித்து வருகிறது.

பட மூலாதாரம், The Washington Post
இனி சிகிச்சை எடுக்கப்போவதில்லை - மெக்கைன் புது முடிவு
கடுமையான மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் வேட்பாளரும், குடியரசு கட்சியின் செனட்டருமான ஜான் மெக்கைன், இனி சிகிச்சை எடுத்துக்கொள்ளப்போவதில்லை என முடிவு செய்துள்ளார்.
1987-ல் இருந்து அரிஸோனா மாகாண பிரதிநிதியாக அவர் பணியாற்றிவந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னதாக, அவர் கடுமையாக உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
வியாட்நாம் போரின் போது பல வருடங்களை சிறையில் கழித்த முன்னாள் ராணுவ வீரான மெக்கைன் அடுத்த வாரம் 82 வயதை எட்டவிருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தவர்களுக்கு அவரின் குடும்பம் ஒரு அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளது.
முன்னதாக 2008-ல் அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவிடம் மெக்கைன் தோற்றார்.

பட மூலாதாரம், FRANKLIN DE FREITAS
ஒரே நாளில் ஆயிரம் பேரை கைது செய்த பிரேசில் காவல்துறை
பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களின் ஈடுபவர்களை கைது செய்யும் நோக்கத்துடன் நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை கைது செய்துள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளார்.
இதில் 275 பேர் சந்தேக கொலை குற்றவாளிகளாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் போலீசார் நடத்திய இந்த ரெய்டில் ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பங்கெடுத்தனர். பிரேசிலில் வன்முறை குற்றங்கள் அதிகரித்ததால் அதிகாரிகளுக்கு அழுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

பட மூலாதாரம், Win McNamee
மைக் பாம்பியோவின் வட கொரிய பயணம் ரத்து
அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பாம்பியோ முன்னரே திட்டமிட்டிருந்த வட கொரிய பயணத்தை அதிபர் டிரம்ப் கைவிடுமாறு கூறியதால் அவர் வட கொரியாவுக்கு செல்லமாட்டார் என்று தெரிகிறது.
கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் இல்லை என்று டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.
அதே போல், அமெரிக்காவுடனான வணிக ரீதியான உறவுகள் சரியில்லாத காரணத்தால், சீனாவும் வட கொரியாவுக்கு போதுமான அழுத்தத்தை தரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பிபிசி தமிழின் சிறப்பு தொகுப்பு
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













