உலகப் பார்வை: கற்கால மனிதர்களைத் தேடி கடலில் ஒரு பயணம்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

கற்கால மனிதர்களைத் தேடி கடலில் ஒரு பயணம்

இங்கிலாந்தின் நார்த்ஃபோல்க் கடற்படுகை அருகே கற்காலத்தில், அந்தப் பகுதி வறண்ட நிலமாக இருந்தபோது அங்கு மனிதர்கள் வாழ்ந்தனரா என்பதை அறிவதற்கான ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், கடலில் பிரிட்டன் மற்றும் பெல்ஜிய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.

சமீப ஆண்டுகளில், மீன்பிடிக் கப்பல்களின் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த விலங்குகளின் எலும்புகள் மற்றும் அடிப்படையான கல் ஆயுதங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.

சிரியா: அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பிரிட்டன் ஆதரவு?

சிரியாவில் அரசு ஆதரவு படையினரால் ரசாயன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விவாதிக்க பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இன்று, வியாழக்கிழமை, நடைபெறவுள்ள அந்தக் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால், சிரியாவில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு ஆதரவு தருவது பற்றி முடிவெடுக்கப்படும்.

நான் பேசியதை நினைத்து வெட்கப்படுகிறேன்: போப் பிரான்சிஸ்

சிலியில் கத்தோலிக்க மதகுரு ஒருவரால் குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளான விவகாரத்தில் தாம் பெரும் தவறிழைத்துவிட்டதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கத்தோலிக்க பிஷப்புகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாதிக்கப்பட்டவர்கள் அவதூறு பரப்புவதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாம் கூறியதை நினைத்து 'வருத்தப்படுவதாகவும் வெட்கப்படுவதாகவும்' அவர் கூறியுள்ளார்.

எந்த உதவியும் தேவையில்லை: ரஷ்ய உளவாளியின் மகள்

பிரிட்டனில் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் ரஷ்ய உளவாளியின் மகள் யூலியா ஸ்கிர்பால் ரஷ்ய தூதரகத்திடம் இருந்து 'தற்போதைக்கு' எந்த உதவியும் தேவையில்லை என்று மறுத்துள்ளார்.

திங்களன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர், தனது தந்தை செர்கெய் ஸ்கிர்பால் இன்னும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாகக் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: