You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி பிரச்சனை: திருச்சியில் நடந்த போராட்டத்தில் கல்வீச்சு; இளைஞர்கள் கைது
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் வேகமெடுத்தபோது திருச்சியில் நீதிமன்ற சாலையில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே சாலையில் இன்று (புதன்கிழமை) இரவு 8 மணி அளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னறிவிப்பின்றி திடீரென குவிந்தனர்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னறிவிப்பின்றி மாணவர்கள் குவிந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
மாநகர் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணத்திலிருந்து மைசூர் வழியாக கே.ஆர். நகர் செல்லும் பேருந்தை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். அதில் பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்தது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், "திடீர் திடீர் என மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதால் ஆங்காங்கே போராட்டத்தில் இறங்கினர். இதில் மாநகர் முழுவதும் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் மீது வழக்கு பதியபட்டால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். கைது செய்து அழைத்து சென்ற அரசு பேருந்தை சேதப்படுத்திவிட்டு ஓடிவிட்டனர்", என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்