You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: தூக்கத்திலிருந்து மகனை எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
’துப்பாக்கி தாய்’
அமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் ஒரு தாய் தன் மகனை தூக்கத்திலிருந்து எழுப்ப மின்சார துப்பாக்கியை பயன்படுத்தியதை தொடர்ந்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரது பெயர் ஷரோன் டாபின்ஸ். ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயம் செல்வதற்காக தன் 17 வயது மகனை இவ்வாறாக எழுப்பி இருக்கிறார் ஷரோன் டாபின்ஸ்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் துப்பாக்கியை இயக்கவில்லை என்றார். ஆனால், காவல் துறையினர் அவர் மகன் காலில் தழும்புகள் உள்ளன என்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுடன், ஷரோனை போலீஸ் காவலிலிருந்து விடுவித்தார்.
நிராகரித்த இஸ்ரேல்
இஸ்ரேலில் வசிக்கும் ஆஃப்ரிக்க குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக ஐ.நா முன்மொழிந்த திட்டத்தை நிராகரித்தார் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், இதனை கிடப்பில் போடுவதாக கூறிய அவர், ஆஃப்ரிக்க குடியேறிகள் அதிகளவில் வசிக்கும் தென் டெல் அவிவ் மக்களுடன் கலந்து ஆலோசித்த பின் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார்.
சாமானியர்களை கொன்ற ராணுவ தாக்குதல்
ஆஃப்கன் ராணுவம் தலிபான்களை குறிவைத்து, வடக்கு குந்தூஸ் மாகாணத்தில் மேற்கொண்ட ஒரு வான் தாக்குதலில் பொதுமக்கள் பலியாகி உள்ளனர். மதராஸாவில் கூடிய கும்பலை குறிவைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். இதில் 25 இஸ்லாமியவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று அரசு கூறுகிறது. ஆனால், படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக மருத்துவர் கூறுகிறார். போராளிகள் யாரும் அங்கு இல்லை. அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்கிறது தலிபான் அமைப்பு.
குழந்தைகள் விளையாட்டு - ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு
பிரிட்டனில் முன்னாள் உளவாளி மற்றும் அவரது மகள் மீது நச்சுப்பொருள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், பிரிட்டனும் அதன் மேற்கத்திய நண்பர்களும் ’குழந்தைகள் விளையாட்டை’ விளையாடுவதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லவ்ரோஃப் குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த நாடுகள் பொய்களை கட்டவிழித்துவிடுவதாகவும் அவர் கூறினார்.
வரி விதித்த சீனா
பன்றி இறைச்சி மற்றும் ஒயின் உட்பட பல பொருட்களுக்கு வரி விதித்த சீனாவை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதித்துள்ளது. அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்புகளில் ஏற்படும் இழப்புகளை சரி செய்வதற்கான முயற்சி இது என சீனா தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவுகள் ஏற்பட்டன.இருதரப்பிலும் மேற்கொள்ளபடும் நடவடிக்கைகள் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்