'இயற்கையின் மர்மம்': ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களில் 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. உயிரிழந்த ஒட்டுமொத்த திமிங்கலங்களும் குறுகிய தடுப்பு கொண்ட பைலட் வகை ஆகும்.

கடற்கரையில் ஒதுங்கி உயிரோடு இருக்கும் திமிங்கலங்களை காப்பாற்றி மீண்டும் கடலுக்குள் அனுப்ப கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், மோசமான வானிலை காரணமாக இரவுக்குள் 140 திமிங்கலங்கள் உயிரிழந்தன. கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலங்களை மீட்க நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் போராடினர்.

"இதுமாதிரி இவ்வளவு திமிங்கலங்கள் ஒன்றாக கரை ஒதுங்கியதை இதுவரை பார்த்ததில்லை" என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் சுற்றுலா வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "வியாழக்கிழமை ஒரே இரவில் அவ்வளவு திமிங்கலங்களலும் கடற்கரை ஓரத்தில் ஒதுங்கியதால், அவை பிழைக்கவில்லை" பார்க்ஸ் மற்றும் வனத்துறை சேவையின் செய்தி தொடர்பாளர் ஜெரெமி சிக் தனது அறிக்கையில் தெரிவத்தார்.

குறுகிய தடுப்பு கொண்ட பைலட் வகை திமிங்கலங்கள் பொதுவாக 5 மீட்டர் அளவில் இருக்கும். இவை வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல கடல் பகுதிகளில் காணப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாறை மிகுந்த கரை, சுற்றிலும் உயிரழந்த திமிங்கலங்கள், மோசமான கடல்அலைகள் மத்தியில் உயிர் பிழைத்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்புவது மிகவும் கடினமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'இயற்கையின் மர்மம்'

இத்திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்குவதற்கான காரணங்கள் என்ன என்று விஞ்ஞானிகளுக்கு தெரிய வரவில்லை.

திமிங்கலங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, காயமடைந்தாலோ அல்லது தவறான வழியில் சென்றாலோதான் இப்படி கரை ஒதுங்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"இது இயற்கையின் மர்மம். திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்க, இங்கு விரைவாக அவை மிக விரைவாக சீர்குலைந்து விடுகின்றன" என மீட்பு ஒருங்கிணைப்பாளர் ஒருவர் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: