உலகப் பார்வை: மிருகமாக மாறிய ஃபேஸ்புக் - ஐ.நா குற்றச்சாட்டு

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

மிருகமாக மாறிய ஃபேஸ்புக்

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்த்ததில் ஃபேஸ்புக்கிற்கு முக்கிய பங்கு உண்டு என்று ஐ.நா விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை விசாரித்து வரும் ஒரு விசாரணை குழு, ஃபேஸ்புக் ஒரு மிருகமாக மாறி உள்ளது என்று வர்ணித்துள்ளது. ஆனால், வெறுப்பு பேச்சுக்கு எங்கள் தளத்தில் இடமில்லை என்று ஃபேஸ்புக் கூறி உள்ளது.

மரண தண்டனை

ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் 17 மாணவர்களை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரிக்கு மரண தண்டனை அளிக்க கோரி இருக்கிறார்கள் அமெரிக்க அரசு தரப்பு வழக்குரைஞர்கள். இத்தாக்குதல் கடந்த மாதம் நடந்தது. துப்பாக்கிதாரியான நிக்கோலஸ் கிரஸ், இத்தாக்குதலை தாம்தான் மேற்கொண்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இத்தாக்குதல் அமெரிக்காவில் பரவி வரும் துப்பாக்கி கலாசாரம் குறித்து பரவலான விவாதத்தை எழுப்பியது.

நீக்கப்பட்ட அமெரிக்க அரசு செயலாளர்

அமெரிக்க டிரம்ப் அரசாங்கத்தின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்கு சி.ஐ.ஏ-வின் இயக்குநர் மைக் போம்பியோவை நியமித்துள்ளார். பதவி விலகல் உரையில் ரெக்ஸ், டிரம்ப்பிற்கு நன்றி கூறவுமில்லை, டிரம்ப்பின் கொள்கைகளை போற்றவும் இல்லை. அந்த உரையில், ரஷ்ய அரசாங்கத்தின் தொந்தரவு தரும் நடத்தைக்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய வேலை அப்படியே உள்ளது என்று கூறி உள்ளார்.

பிரதமரை குறி வைத்து தாக்குதல்

பாலத்தீனிய பிரதமர் ரமி ஹம்தல்லாவின் வாகன அணிவகுப்பை குறிவைத்து காஸாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலிலிருந்து அவர் தப்பி உள்ளார். இந்த தாக்குதலின் காரணமாக அணிவகுப்பில் சென்ற மூன்று கார்கள் சேதமடைந்தன. காஸாவில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்ற போது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஜப்பான் சட்டத் திருத்தம்

இனி 18 வயது நிரம்பினாலே வயது வந்தவராக கருதப்படும் சட்டத்திருத்தம் ஒன்றை ஜப்பான் அரசு கொண்டு வந்துள்ளது. இதுவரை 20 வயது நிரம்பினால் மட்டும் வயது வந்தவர்களாக அந்நாட்டு மக்கள் கருதப்பட்டு வந்தார்கள். இந்த முன்மொழிதல் நிறைவேற்றப்பட்டால், அந்நாட்டு மக்கள் 18 வயது நிரம்பினாலே திருமணம் செய்துக் கொள்ள, ஒப்பந்தங்களில் கையெழுத்திட போதுமானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: