You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் 7.9 அளவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் கடற்கரை பகுதிகளை 7.9 அளவிலான நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொடியாக் நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட அந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி செவ்வாய் நள்ளிரவுக்குப் பின் 12.31 மணிக்கு நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ்.ஜியாலஜிகல் சர்வே கூறியுள்ளது.
"உயிர் மற்றும் உடைமைகளுக்கு அளவுக்கும் அதிகமான பாதிப்பு ஏற்படலாம்," என்று ஆன்கரேஜில் உள்ள அதிகாரிகள் கற்கரையோரத்தில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளில் சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை மணி ஒலிப்பதை ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தின் ஆரம்பநிலை அளவீடுகளின்படி, "மிகவும் பரவலான தாக்கம் நிறைந்த, ஆபத்தான சுனாமி அலைகள் வரும் சாத்தியம் உள்ளது" என்று என்.டபிள்யூ.எஸ் பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
ஹவாய் தீவிலும் சுனாமி தாக்குதல் நிகழலாம் என்பதால், அந்த தீவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு வசிக்கும் மக்களும், பேரிடர் கால உதவி அதிகாரிகளும் அங்கு தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவை அங்கு உருவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையத்திலிருந்து ஹவாய் தீவு நெடுந்தொலைவில் இருந்தாலும், சுனாமி ஏற்பட்டால் அழிவு அதிக அளவில் இருக்கும் என்று ஹவாயில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தா மற்றும் அந்நாட்டிலுள்ள ஜாவா தீவையும் செவ்வாயன்று 6 அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. எனினும், இதுவரை அதில் பெரிய அளவிலான சேதங்களோ, உயிரிழப்பவுகளோ உண்டானதாக செய்திகள் இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்