You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நியூயார்க் தாக்குதல்: இறந்தவர்களில் 5 பேர் அர்ஜென்டீனாவைச் சேர்ந்த நண்பர்கள்
நியூ யார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில், சய்ஃபுல்லோ சாய்போவ் என்ற 29 வயது நபர், சைக்கிள் ஓட்டுநர்கள் செல்லக்கூடிய பாதையில், டிரக்கை இயக்கி நடத்திய தாக்குதலில், எட்டு பேர் கொல்லப்பட்டதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபரை, நியூ யார்க் காவல்துறையினர் வயிற்றிற்கு மேல் சுட்டு, கைது செய்துள்ளனர்.
இது குறித்து அர்ஜென்டீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவர்களில் ஐந்து பேர் தங்களின் நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் பத்துபேர் கொண்ட குழுவாக இருந்தனர் என்றும், பட்டம் பெற்று 30 ஆண்டுகள் கடந்துள்ளதை அவர்கள் கொண்டாடிக்கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக அட்ஜென்டீனா ஊடகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரும் கூறியுள்ளார்.
நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
ஏ.பி.சி சேனல் 7இல், யூஜீன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட நபர், சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். ஒரு வெள்ளை நிற டிரக், வெஸ்ட் சைட் நெடுஞ்சாலையை ஒட்டியவாறு அதிவேகத்தில் பலரின் மீது மோதி சென்றது என்றார். மேலும் 9 அல்லது 10 முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது என்றார்.
ஃப்ராங்க் என்பவர், அந்த சாலைகளின் சந்திப்பில் ஒருவர் ஓடுவதை பார்த்ததாகவும், ஐந்து அல்லது ஆறு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், என்.ஒய் 1 என்ற உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
`அவர் கையில் எதையோ வைத்திருந்ததை நான் பார்த்தேன். ஆனால், அது என்ன என்பதை என்னால் சரியாக கூற முடியவில்லை. ஆனால் அவர்கள் அதை துப்பாக்கி என்று கூறினார்கள்.`
`காவல்துறையினர் அவரை சுட்டவுடன், எல்லோரும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். ஒன்றுமே புரியாத நிலையில் அந்த இடம் இருந்தது. நான் மீண்டும் அங்கு என்ன நடக்கிறது என பார்க்க முயன்ற போது, அந்த நபர் ஏற்கனவே கிழே விழுந்து கிடந்தார்.`
காவல்துறையால் சுட்டு, கைது செய்யப்பட்டுள்ளவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :