You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியா மீது ஐ.நா. புதிய தடைகள்
அண்மையில் தனது 6-ஆவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மீது ஒருமனதாக புதிய தடைகள் விதிக்கும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்ந்துள்ளன.
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட வரைவில் கூறப்பட்ட தீர்மானங்களின்படி நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உணவு ஆகியற்றை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 15-0 என்று ஐ.நா. கவுன்சில் வாக்களித்துள்ளது.
அண்மையில், ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை தான்வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக வட கொரியாஅறிவித்தது.
மேலும், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் விதமாக தொடர்ந்து வடகொரியா அச்சுறுத்திய வண்ணம் உள்ளது.
முன்னதாக, கடந்த வாரத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சில கடுமையான தீர்மானங்களை அந்நாடு அகற்றிய பின்னர், இந்த புதிய தடைகளை ஐ.நா. கவுன்சிலில் நிறைவேற்ற கடந்த திங்கள்கிழமையன்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா முன்மொழிந்த கடுமையான தீர்மானங்களில் வட கொரியா மீது முழுமையான எண்ணெய் விலக்கு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகள் ஆகியவை உள்ளடங்கும்.
ஐநா அமைப்பு விதித்துள்ள தடைகளையும், சர்வதேச அழுத்தத்தையும் மீறி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ள வடகொரியா, அமெரிக்க பெருநிலப்பரப்பை சென்றடையக்கூடிய திறன் படைத்த ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
முன்னதாக, செப்டம்பர் முதல் வாரத்தில் ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :