You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பன்றி ரத்தத்தில் நனைத்த தோட்டாக்கள்: டிரம்ப் சொன்னது கட்டுக்கதையா?
இஸ்லாமியவாத தீவிரவாதிகளைக் கொல்ல அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ தளபதி ஒருவர், பன்றியின் ரத்தத்தைப் பயன்படுத்திய கதை ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், அது ஒரு கட்டுக்கதை என்று ஏற்கனவே நிரூபணம் செய்யப்பட்டது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் 14 பேர் உயிரிழந்த மற்றும் ஏராளமானோர் காயமடைந்த வேன் தாக்குதல் சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கதையை பதிவிட்டுள்ளார்.
"பயங்கரவாதிகள் பிடிபட்டபோது ஜெனரல் பெர்ஷிங் என்ன செய்தார் என்பதைப் படியுங்கள்" என்று உண்மையற்ற கதையை தனது பதிவில் அதிபர் டிரம்பர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று அறிஞர்களும், செய்திகளின் உண்மைத் தன்மைகளைப் பரிசோதிப்பவர்களும் அந்த சம்பவம் உண்மையில் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
"உண்மைச் சம்பவம்" எனும் போர்வையில் இணையதளத்தில் உலவும் அந்தக் கதை, 1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பிலிப்பின்ஸ் நாட்டில் நடந்த அமெரிக்க போரில் ராணுவ தளபதி ஜெனரல் ஜான் பெர்ஷிங்கின் செயல்பாட்டை விளக்குவதாக கூறப்படுகிறது.
ஐம்பது இஸ்லாமியவாத பயங்கரவாதிகளை சுற்றிலும் நிற்க வைத்து, பன்றியின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களால், அவர்களில் 49 பேரைச் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டதாகவும், கொல்லப்படாத அந்த ஒரு நபர், நடந்த சம்பவத்தை மற்றவர்களிடம் சொல்ல அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இஸ்லாமிய வழக்கத்தின்படி, தூய்மையற்ற விலங்காக பன்றி கருதப்படுகிறது. ஜெனரல் பெர்ஷிங்கின் செயல், பின்னாட்களில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட நினைத்தவர்களைத் தடுக்கும் வகையில் இருந்ததாக டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, பார்சிலோனாவில் நடத்தப்பட்ட வேன் மோதல் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டிரம்ப் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இதே கதையைக் கூறிய டிரம்ப், தனது டிவிட்டர் பதிவில் தற்போது குறிப்பிட்டுள்ளது போல 35 ஆண்டுகளாக இஸ்லாமியவாத பயங்கரவாதம் இல்லை எனக் குறிப்பிடாமல், "25 ஆண்டுகளுக்கு அங்கு பயங்கரவாதம் தலை தூக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்தக் கதையை சொல்வதற்கு முரணாக, பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் முன்பு உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புவதாக டிரம்ப் கூறியிருந்தார்.
முன்னதாக, அமெரிக்காவின் சார்லட்ஸ்வீல் நகரில் நடந்த இன வெறிக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் குற்றம் உள்ளது என்று கூறியதால், அவர் சார்ந்த குடியரசு கட்சியினர் உள்பட பலராலும் டிரம்ப் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :