You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
30,000 கோடி ரூபாய்க்கும் மேலான விவசாய கடனை தள்ளுபடி செய்தது உ.பி. மாநில அரசு
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னெளவில், நேற்று (செவாய்க்கிழமை) மாலை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், 30, 729 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உத்தரப்பிரதேசத்தில் 1 லட்சம் ரூபாய் வரையில் மாநில விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தங்களின் தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்களின் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பால், மாநிலத்தில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் சட்ட விரோதமாக செயல்படும் இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டு வருவது குறித்தும், பெண்களை கிண்டல் செய்யும் ரோமியோக்களுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் அமைக்கப்பட்டது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பெண்களை தொந்தரவு செய்வோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்ற நபர்கள் இந்நடவடிக்கைகளில் பாதிக்கப்படக்கூடாது என்றும் இக்கூட்டத்தில் பாதுகாப்பு படைக்கு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, கடந்த மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியமைத்தது.
புதிய முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத், சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் மூடல், பெண்களை கிண்டல் செய்யும் ரோமியோக்களுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் அமைத்தது போன்ற உத்தரவுகளை பிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்