புனித் ராஜ்குமார் 46 வயதில் மறைவு, கலங்கும் பிரபலங்கள்: “உடற்பயிற்சி செய்வதில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்”

கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 46.

ராஜ்குமார் இன்று காலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கொண்டுசெல்லும் வழியிலும் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விக்ரம் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார் - பர்வதம்மா தம்பதியின் ஐந்தாவது மற்றும் இளைய மகனான புனித் ராஜ்குமார் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே பிரேமதா கனிகே படத்தில் புனித் தோன்றியிருக்கிறார்.

2002ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகனாக நடித்துவரும் புனித்தின் முதல் படமான அப்பு அவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களுக்காக சமூக வலைதளங்களில் பெரிதும் அறியப்பட்டவர் புனித். ஆனால், உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவர் சேர்க்கப்பட்டிருந்த விக்ரம் மருத்துவமனைக்கு முன்பாக பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

புனித் ராஜ்குமார் இதுவரை 29 திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் அதிக சம்பளம் பெற்ற ஒரு நடிகர் அவர். கோடீஸ்வரர் நிகழ்ச்சியை கன்னடத்தில் தொகுத்து வழங்கியவர்.

"அவர் வயதுக்கு அவர் மிகுந்த ஆரோக்கியமாக இருந்தார். எளிதாக கரணம் அடித்து நடனக் கலைஞர்களை அசத்துவார். உடல் உறுதியில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தார்" என திரைப்பட இயக்குநர் கே.எம். சைதன்யா பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

கொடூரமான விதி ஒரு திறமைவாய்ந்த நடிகரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. உலகைவிட்டு செல்வதற்கான வயது இது இல்லை. புனித்தின் சிறந்த பணிகளுக்காகவும், சிறப்பான குணத்திற்காகவும் அவர் வருங்கால தலைமுறையின் நினைவில் தொடர்ந்து நிற்பார் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புனித் ராஜ்குமாரின் மரணம் குறித்து கேள்வியுற்று தான் அதிர்ச்சி அடைந்ததாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பமும் தங்களது குடும்பமும் நல்ல உறவில் இருந்ததாகவும் இது தனக்கு தனிப்பட்ட இழப்பு எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் வருவாய் துறை அமைச்சர் ஆர். அஷோகா , புனித்தின் உடல் பெங்களூருவில் உள்ள அரங்கத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புனித் ராஜ்குமாரின் இறப்புக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படத்துறையைசேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புனித்தின் இறப்பு திரையுலகுக்கு பெரிய இழப்பு என பிரபல மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

தனது சிறப்பான பணிகளால் பல இதயங்களை வென்ற ஒரு வலிமைவாய்ந்த நடிகர் புனித் ராஜ்குமார் என பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல அரசியல் தலைவர்கள், விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள் புனித் ராஜ்குமார் என்ற ஹாஷ்டேகில் டிவிட்டரில் தங்களின் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மிக இளம் வயதில் அவர் உலகைவிட்டு சென்றுவிட்டார் எனவும் பலர் தங்களின் துயரத்தை பதிவு செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :