சீனர்களின் 19ஆம் நூற்றாண்டு வாழ்வை பதிவு செய்த புகைப்பட கலைஞர்

பிரிட்டனின் ஓர் அங்கமான ஸ்காட்லாந்தின் புகைப்படக் கலைஞர்களின் முன்னோடியான ஜான் தாம்சன் சீனாவைப் பதிவு செய்த ஆரம்பகால படங்கள் பலவற்றை எடுத்தவர்.

எடின்பரோவில் 1837ஆம் ஆண்டு பிறந்த இவர் 1862ஆம் ஆண்டு புவியின் கிழக்குப் பகுதியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

1862ஆம் ஆண்டு லெய்த்திலிருந்து இவர் தமது பயணத்தை தொடங்கினார். முதலில் சிங்கப்பூர் சென்ற ஜான் தாம்சன் சீனாவின் பழமையான நாகரிகம், அப்பொழுது சயாம் என்று அழைக்கப்பட்ட தாய்லாந்து, கம்போடியா ஆகிய பகுதிகளுக்கு மிகவும் விரிவாகப் பயணம் மேற்கொண்டார்.

அடுத்த 15 ஆண்டுகளை அந்த பயணத்தில் கழித்த அவர், அப்பகுதி மக்கள் வாழ்வின் பல்வேறு தருணங்களை புகைப்படமாகப் பதிவு செய்தார்.

கம்போடியாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற அங்கோர்வாட் கோயிலை 1866ஆம் ஆண்டு இவர் எடுத்த படம்தான் அந்த கோயில் முதல் முதலில் புகைப்படமாக பதிவு செய்யப்பட்ட படமாக அமைந்தது.

19ஆம் நூற்றாண்டில் இவர் எடுத்த படங்கள் அந்த காலகட்டத்தில் உலகின் ஒரு பகுதியை மிகவும் விரிவாக பதிவு செய்த புகைப்படங்களைக் கொண்டுள்ளவை.

1876 - 1877 கால கட்டத்தில் லண்டன் திரும்பிய அவர் அடால்ஃப் ஸ்மித் எனும் சோசியலிச இதழியலாளர் ஒருவருடன் இணைந்து பணியாற்றினார்.

அப்போது லண்டன் நகர வாழ்க்கை மற்றும் நகர்புற வறுமை ஆகியவற்றை புகைப்படமாக பதிவு செய்தார்.

1886ஆம் ஆண்டு பிரிட்டன் அரச குடும்பத்தின் புகைப்படக் கலைஞராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

பிரிட்டன் அரசி விக்டோரியாவை இவர் எடுத்த படங்கள் மற்றும் அரச குடும்பத்தினரை இவர் எடுத்த படங்கள் ஆகியவை இன்னும் ராயல் கலெக்சன் டிரஸ்ட் வசம் உள்ளன.

பயணப் புகைப்படக் கலைஞர்களின் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்கிய ஜான் தாம்சன் 100 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

ஹெராய்ட் வாட் பல்கலைக்கழகத்தில் மார்ச் 25,2022 வரை ஜான் தாம்சனின் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :