You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் சேதுபதி: எளிய தோற்றம், வித்தியாசமான கதாபாத்திரங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்
எளிமையான பேச்சு, இயல்பான தோற்றம் என சமீபக் காலங்களில் அதிக ரசிகர்களை பெற்ற ஒரு நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவருக்கு பிறந்தநாள். அவர் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் காட்டும் நடிகர் பட்டியலில் முக்கிய இடத்தில் இவர் உள்ளார்.
- 2010ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முதலாக படத்தின் கதாநாயகனாக நடித்தார். தென்மேற்கு பருவக்காற்று சிறந்த படத்திற்காக தேசிய விருதை பெற்றது.
- சீனு ராமசாமி இயக்கம், தேசிய விருது படம் என்றாலும் விஜய் சேதுபதியை பெரிதும் கவனிக்க வைத்தது 2012ஆம் வெளிவந்த பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படங்களே ஆகும்.
- நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படம் நண்பர்களின் கூட்டு முயற்சியாக மிக குறைந்த பணச்செலவில் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். அதில் ஞாபகங்களை மறந்த கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதியின் ’பா’ என்னும் வசனம் அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தது என்று சொல்லலாம்.
- வயதான கேரக்டர், நடுத்தர வயது நபர், மருத்துவக் கல்லூரி மாணவர், வில்லன், போலீஸ் என எந்த கதாபாத்திரத்திலும் அப்படியே பொருந்தி போவார் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்த ’96’ படத்தில் ராமாகவே வாழ்ந்திருப்பார். பலரும் தங்கள் பள்ளி காதல் குறித்து அசைப்போட வைத்தது. இம்மாதிரியான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்வதில் திறமையானவர் விஜய் சேதுபதி.
- விஜய் சேதுபதி, நளன் குமாரசாமி, அருண் குமார், கார்த்திக் சுப்புராஜ் என குறும்படங்கள் மூலம் சினமாவுக்குள் நுழைந்த இயக்குநர்களுடன் கைகோர்த்து பெரும் வெற்றிகளை கொடுத்துள்ளார்.
- பலதரப்பட்ட கேரக்டரில் அசத்திய விஜய் சேதுபதி, ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ’பேட்டை’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பார். பேட்டை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி ’தான் காணாத கனவு ஒன்று நினைவானதாக’ ரஜினியுடன் நடித்தது குறித்து பேசியிருந்தார்.
- சமீபத்தில் ஃபிலிம் கம்பானியன் சவுத்தில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், நீங்கள் பாலிவுட்டில் நடிப்பதில் உள்ள சிக்கல் என்ன என்று கேட்டபோது, மொழி மற்றும் அங்குள்ள கலாசாரம் எனக்கு தெரியாது, நான் பெரிதும் இந்தி படங்கள் பார்த்ததில்லை, அங்கு நடிக்க வேண்டும் என்றால் அங்குள்ள கலாசாரம் எனக்கு புரிந்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
- தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கப்பட்ட ஆரஞ்சு மிட்டாய் படத்தில் கதாநாயகன் மட்டுமின்றி வசனகர்த்தா அவதாரமும் எடுத்தார். நடிகர் விக்ராந்த் நடிக்கும் படம் ஒன்றிற்கு வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதவுள்ளார் விஜய் சேதுபதி.
- விஜய் சேதுபதியின் அடுத்த படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முதல் போஸ்டர் நேற்று பொங்கலன்று வெளியாகியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: