ஏ.ஆர். ரஹ்மான்: ஜிங்கிள்ஸ் முதல் ஆஸ்கார் வரை - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

ஏ.ஆர். ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏ.ஆர். ரஹ்மான்
    • எழுதியவர், வெ. வித்யா காயத்ரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உலகளவில் புகழ்பெற்ற தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 53ஆவது பிறந்தநாளான இன்று (திங்கள்கிழமை). அவர் குறித்த முக்கிய தகவல்களை தொகுத்தளித்துள்ளோம்.

தமிழ், மலையாள திரைப்படங்களுக்கு குழு இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சேகர் என்பவரின் மகன்தான் ஆஸ்கார் விருது வென்ற ஏஆர் ரஹ்மான்.

சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

அம்மா, அக்கா, தங்கைகள் எனப் பெண்கள் சூழ்ந்த உலகம் ஏஆர் ரஹ்மானுடையது.

சிறுவயதில் இசையை தவிர்த்து காத்தாடி விளையாடுவது இவருக்குப் பிடித்தமான ஒன்றாம்.

தன்னுடைய தந்தையின் இறப்பினால் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமாக இசை உலகிற்குள் நுழைந்திருக்கிறார்.

திலீப் குமார் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் பின்னாளில் ரஹ்மானாக மாறினார்.

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுவில் பணியாற்றியிருக்கிறார்.

பள்ளிக்கல்வி கூட முடிக்காதவர், தன்னுடைய இசைப் புலமையால் பின்னாளில் லண்டன் இசைக்கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்று இசை கற்றிருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டுக் கொண்டிருந்தவர், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அவருடைய கூடுதல் பலம்.

1992 முதல் 2000ஆம் ஆண்டு வரை அவர் இசையமைத்த படங்கள் அனைத்துமே அவருக்கு ஃப்லிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது.

கடைக்கோடி ஏழைச் சிறுவனைப் பற்றிய திரைப்படம் 'ஸ்லம்டாக் மில்லியினர்'. இந்தப் படத்திற்கு இசையமைத்ததற்காக உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருதை தன்னுடைய இரண்டு கைகளாலும் உயர்த்திப் பிடித்து 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார்.

ஆஸ்கார் விருது மட்டுமில்லாமல் கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் வென்றிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இறை பற்றுதல் கொண்டவர். தன்னுடைய சந்தோஷ தருணங்களிலும் , துக்கமான தருணங்களிலும் இறை நம்பிக்கையை இறுக்கமாகப் பிடித்துக் கொள்வது இவர் வழக்கமாம்.

பெரும்பாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விரும்புவார்.

கச்சேரி நேரங்களில் வெளிநாடு செல்ல நேரிட்டால் தன்னுடைய குழந்தைகளை பிரிந்து செல்வதற்கு கஷ்டப்படுவார் என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர். ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

ரஹ்மானுக்கு அவர் தாயாரின் மீது அதிகமான அன்பு உள்ளது. அவருக்கு இசைப்பிரியம் உள்ளதை அடையாளம் கண்டுபிடித்து அவரிடம் சொன்னதே அவர் அம்மா தானாம்.

தனக்கு கிடைக்காதது பிறருக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்.

இலவச இசைப் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். அங்கு விலை அதிகமான இசைக் கருவிகளைக் கொண்டு தான் பயிற்றுவிக்கிறார் என செய்திகள் கூறுகின்றன

இசையைத் தவிர்த்து வீடியோ கேம்ஸ் விளையாடுவதில் ரஹ்மானுக்கு ஆர்வம் அதிகம்.

பிஎம்டபிள்யூ இவருக்கு பிடித்தமான கார்களுள் ஒன்று என்று கூறப்படுகிறது.

இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

அரசியல் தொடர்பான கருத்துகளை அவ்வப்போது பதிவிடுவார்.

டெக்னாலஜி தொடர்பாக தன்னை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருப்பது இவர் வழக்கம்.

சகோதரிகளின் திருமணத்தின் போது தன்னுடைய தந்தையை அதிக அளவில் மிஸ் பண்ணியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

புதியதாக சந்தையில் வந்திருக்கும் இசைக் கருவிகளை உடனே வாங்கிவிடுவது இவரது வழக்கம்.

இவர் மெதுவாக இசையமைக்கும் பழக்கம் கொண்டவர்.

எப்பொழுதும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே சிந்திப்பார்.

"Notes of a Dream: The Authorized Biography of AR Rahman" என்ற தனது சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவின் போது, திரைத்துறையில் சரியான அங்கீகாரம் கிடைக்காத வரையில் தோல்வியை சந்தித்ததாகவும், அப்போதெல்லாம் தனக்குள் தற்கொலை எண்ணம் உருவானதாகவும் பகிர்ந்திருந்தார்.

தன்னுடைய உண்மையான பெயரான திலீப் குமாரை வெறுத்திருக்கிறார். புதியதொரு மனிதனாக உருமாற விரும்பியிருந்திருக்கிறார். அதன் காரணமாக இஸ்லாமிய மதத்தை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.

பெரும்பாலும் அவருடைய வீட்டினுள் அவர் அமைத்துள்ள ஸ்டுடியோவில் தான் இசையமைப்பாராம். சில சமயங்களில் மும்பை சென்று அங்குள்ள ஸ்டுடியோவில் வாசிப்பாராம்.

தேசியகீதம் முதல் தமிழ் செம்மொழி மாநாடு பாடல் வரையில் இவருடைய இசை பரவியிருந்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: