12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி: யார் இந்த ஈஸ்வரி ராவ்?

கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு மூலம் தமிழ் சினிமாவில் காலா படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ். குறிப்பாக, மிகப் பெரிய இடைவெளிக்கு பிறகான இந்த முதல் படத்திலேயே ரஜினியின் மனைவியாக நடித்து பாராட்டுகளையும் பெற்று வருகிறார் ஈஸ்வரி. அவரது திரைத்துறை பயணம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.

1. ஈஸ்வரி ராவ் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.

2. ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 வெளியான கவிதை பாடும் அலைகள். ஆனால், அந்த திரைப்படம் கடைசிவரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.

3. இரண்டாவதாக, நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

4. அதைத்தொடர்ந்து, குரு பார்வை, சிம்மராசி, அப்பு, குட்டி, தவசி போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் சுசி கணேசன் இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் சினேகா நடிப்பில் 2002இல் வெளியான 'விரும்புகிறேன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார்.

5. அடுத்ததாக, 2004ஆம் ஆண்டு வெளியான 'சுள்ளான்' படத்தில் தனுஷின் அக்காவாகவும், கடைசியாக 2006ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'சரவணா' படத்தில் நடித்தார். பிறகு இடைப்பட்ட காலத்தில் திரைப்படங்கள் எதிலும் நடிக்காத அவர் 'கஸ்தூரி', 'கோகிலா எங்கே போகிறாள்' போன்ற தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுமார் 12 வருட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்துள்ள ஈஸ்வரியின் நடிப்பை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :