You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜாசாப் விமர்சனம்: பிரபாஸ் நடித்த 'திகில் காமெடி' படம் எப்படி உள்ளது?
- எழுதியவர், ஜி.ஆர். மகரிஷி
- பதவி, பிபிசிக்காக
இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு, பிரபாஸ் 'ராஜாசாப்' திரைப்படத்தின் மூலம் புதிய தோற்றத்திலும், புதிய கதைக்களத்திலும் மீண்டும் வந்துள்ளார். நகைச்சுவைப் படங்களை இயக்குவதில் பெயர்பெற்ற இயக்குனர் மாருதி மற்றும் பிரபாஸ் கூட்டணியில் உருவான இந்த 'ராஜாசாப்' ரசிகர்களைக் கவர்ந்ததா? இல்லையா?
படத்தின் கதைப்படி கங்காமா (ஜரினா வஹாப்) ஒரு வயதான பெண். அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் அவரது பேரன் ராஜு (பிரபாஸ்) இருக்கிறார். ராஜுவின் சிறுவயதிலேயே அவரது பெற்றோர் இறந்துவிடுகின்றனர். கங்காமா ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தனது கணவர் கனக ராஜுவை (சஞ்சய் தத்) மட்டும் மறக்காமல் நினைவில் வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டுச் சென்ற தனது கணவரை, வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்துவிட வேண்டும் என்பதே அந்த மூதாட்டியின் தீராத ஆசையாக உள்ளது.
தனது தாத்தாவை தேடி ராஜு ஐதராபாத் செல்கிறார். அங்கு தங்குமிடத்தில் ஒரு கன்னியாஸ்திரியை (நிதி அகர்வால்) சந்திக்கும் அவர், கண்டதும் காதல் கொள்கிறார். இதற்கிடையில், எதிர்பாராத விதமாக பைரவியை (மாளவிகா மோகனன்) சந்திக்கிறார்.
தாத்தா நர்சாப்பூர் காட்டில் இருப்பதை அறிந்த ராஜு, அங்கு செல்கிறார். அங்கிருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில் தாத்தா ஏன் வசிக்கிறார்? அந்தப் பங்களாவிற்கும் அங்குள்ள பேய்க்கும் நாயகனுக்கும் இடையிலான மோதல் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு காலத்தில் இளவரசியாக வாழ்ந்த கங்காமா, எப்படி ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார்? போன்ற பல மர்மமான கேள்விகளுக்கான விடைகளே படத்தின் மீதிக் கதையை நகர்த்திச் செல்கின்றன.
ஹாரர் சினிமா என்றால் திரையில் இருக்கும் நடிகர்களும், பார்க்கும் பார்வையாளர்களும் சேர்ந்து பயப்படுவார்கள். ஹாரர்-காமெடி என்றால் அவர்கள் திரையில் பயப்படும்போது, அதைப் பார்க்கும் நாம் சிரிப்பது.
நகைச்சுவையைச் சிறப்பாகக் கையாண்டு திரைக்கதை எழுதுவதில் மாருதிக்கு நல்ல பெயருண்டு. பிரபாஸிடமும் சிறந்த 'காமெடி டைமிங்' உள்ளது. அதனால், இந்தக் கூட்டணியின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. படத்தின் டிரெய்லரும் அந்தப் பரபரப்பை அதிகப்படுத்தியது. இருப்பினும், படத்தில் ஹாரர் காட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பயமுறுத்துகின்றன, நகைச்சுவை எங்கோ ஓரிடத்தில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. இதற்குக் காரணம் பலவீனமான திரைக்கதைதான். மாருதியின் தோல்விப் படங்கள் அனைத்திற்கும் கதையிலும் திரைக்கதையிலும் உள்ள குறைகளே காரணம். 'ராஜாசாப்' படத்திலும் அதுவே நடந்துள்ளது.
பிரபாஸ் போன்ற ஒரு வலிமையான நாயகன் இருக்கும்போது, கதை மற்றும் திரைக்கதை அடுத்த கட்டத்தில் இருக்க வேண்டும். ஆனால் இது வழக்கமான பாணியில் இருப்பதோடு, சலிப்பை ஏற்படுத்துகிறது.
பாட்டிக்காகப் பேரன் படும் தவிப்பில் போதுமான உணர்ச்சிகள் நிறைந்துள்ளது. இருப்பினும், கதைக்குள் செல்லாமல் பிரபாஸுக்கு இரண்டு சண்டைக் காட்சிகள், மூன்று பாடல்கள் என முதல் பாதி முடிந்து இடைவேளை வந்துவிடுகிறது.
இரண்டாம் பாதி முழுவதும் பங்களாவிற்குள் நடக்கும் கிராபிக்ஸ் காட்சிகளும், அங்கிருப்பவர்கள் பயப்படுவதுமே மீண்டும் மீண்டும் வருகின்றன.
பிரபாஸ் மற்றும் ஜரீனா வஹாப் கதாபாத்திரங்களைத் தவிர மற்ற யாருடைய கதாபாத்திரத்திலும் வலிமை இல்லை. கனகராஜுக்கு ஏன் அவ்வளவு பேராசை? தனது மனைவியையும், பேரனையும் சித்திரவதை செய்து அவர் என்ன சாதிக்க விரும்புகிறார் என்றும் புரியவில்லை. அவர் உயிரோடு இருந்தபோது கூட எதையும் அனுபவித்ததாகத் தெரியவில்லை.
பிரபாஸ் போன்ற கதாநாயகர்களுக்குப் பலமான எதிரி இருக்க வேண்டும். இங்கே எதிராளியோ சொந்தத் தாத்தா. அவரை எதிர்ப்பதற்கு நாயகனுக்கு சக்தி இல்லை. இப்படியிருக்க, ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மாஸ் ஹீரோயிசமும், புல்லரிக்க வைக்கும் காட்சிகளும் எங்கிருந்து வரும்?
சரி, நகைச்சுவை சிறப்பாக வந்திருக்கிறதா என்று பார்த்தால், பிரபாஸ், ஜித்தேந்திர சீனு, சத்யா, சப்தகிரி, விடிவி கணேஷ் என இவ்வளவு பேர் இருந்தும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. வசனங்களும் எடுபடவில்லை.
பழைய பாணியிலான நகைச்சுவை சிரிக்க வைக்கத் தவறிவிட்டது. சமுத்திரக்கனி போன்ற ஒரு சிறந்த நடிகரும் இதில் வீணடிக்கப்பட்டுள்ளார். பொம்மன் இரானி சிறப்பாக நடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு ஒரு முறையான முடிவு இல்லை.
மந்திர தந்திரங்கள், ஹிப்னாடிசம், அறிவியல் என ஏதேதோ குழப்பங்களால், பார்வையாளர்களுக்குத் தான் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றே புரியவில்லை. மாளவிகா மோகனனுக்குக் கதையில் ஓரளவிற்கு வாய்ப்பு உள்ளது. மற்றவர்கள் பாடல்களுக்கு மட்டுமே வந்து போகிறார்கள்.
நிறைகள் மற்றும் குறைகள்:
பிரபாஸ் பல காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஜரீனா வஹாப்பும் தனது கதாபாத்திரத்தின் எல்லைக்குள் நின்று அற்புதமாக நடித்துள்ளார். இருப்பினும், கதை மற்றும் திரைக்கதை பலவீனமாக இருப்பதால் படம் எடுபடாமல் போய்விட்டது.
தமனின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய அளவில் இல்லை. ஒரு அரை மணி நேரமாவது குறைத்திருந்தால் எடிட்டிங் நன்றாக இருந்திருக்கும். வி.எஃப்.எக்ஸ் (VFX) சில காட்சிகளில் தரம் குறைவாக உள்ளது. படத்தின் பட்ஜெட் தாராளமாக செலவிடப்பட்டுள்ளது என்பது அதன் பிரமாண்டத்தில் தெரிகிறது
நிறைகள்
- பிரபாஸ் மற்றும் ஜரீனாவின் நடிப்பு
- அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் சில நகைச்சுவைகள்
குறைகள்
- படத்தின் நீளம்
- பின்னணி இசை
- வலுவான வில்லன் இல்லாதது
- இரண்டாம் பாதி
இந்தப் படத்தில் 'உணர்ச்சிகள்' என்ற வார்த்தை மூன்று நான்கு முறை இடம்பெற்றுயிருந்தது. ஆனால், அதே உணர்ச்சிகள்தான் ராஜாசாப் படத்தில் இல்லாமல் போய்விட்டன.