கட்டபொம்மன் - ஜாக்சன் 'சந்தித்த' மாளிகையில் உள்ள ஓவியங்களும் சுரங்கப்பாதையும் உணர்த்தும் ரகசியம்

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்க விலாசம் மாளிகை, மிக அற்புதமான அழகை உடையது. இந்த மாளிகைக்குள் காணப்படும் ஓவியங்கள் அந்த காலகட்டத்தின் ஒரு பகுதி வரலாற்றைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன.
ராமநாதபுரம் அரண்மனை வளாகத்திற்குள் அமைந்திருக்கும் ராமலிங்க விலாசம் மாளிகை, அற்புதமான கட்டடக் கலை அம்சங்களையும் அந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓவியங்களையும் கொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தின் வாழ்க்கையைத் தெரிவிக்கும் இந்த ஓவியங்கள் மிகுந்த அழகுடைய வரலாற்று குறிப்புகளாகத் திகழ்கின்றன.
ராமநாதபுரம் கோட்டைக்குள் ஒரு மிகப் பெரிய அரண்மனையைக் கட்டியவர், ரகுநாத கிழவன் சேதுபதி என்ற கிழவன் சேதுபதி. ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த மண் கோட்டையையும் அரண்மனையையும் அகற்றிவிட்டு, புதிதாக ஒரு அரண்மனையைக் கட்டினார் கிழவன் சேதுபதி. இந்தக் கோட்டையும் அரண்மனையுமே இதற்குப் பின்னால் வந்த ராமநாதபுரம் மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும் பயன்படுத்தப்பட்டன.
இந்த அரண்மனை மிகவுமே பிரம்மாண்டமானதாக அமைந்திருந்தது. அதன் முக்கியப் பகுதியாக, அரசர் கொலு வீற்றிருக்கும் அத்தாணி மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டது. இந்த அத்தாணி மண்டபமே ராமலிங்க விலாசம் எனக் குறிப்பிடப்படும் கலையழகு மிக்க மண்டபம்.

கோயில் போன்ற அமைப்பை கொண்ட மாளிகை
அரசர் அத்தாணி மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போதுதான், குடிமக்களின் குறையை நேரில் கேட்டு அறியும் நடைமுறை இருந்தது. பிற சமயங்களில் மன்னரைத் தொடர்புகொள்ள வேண்டுமென்றால் கார்வார் என்ற அரண்மனை அலுவலரை மட்டும்தான் அணுக முடியும்.
கிழக்கு - மேற்காக 153 அடி நீளமும் 65 அடி அகலமும் கொண்டதாக இந்த மாளிகை கட்டப்பட்டிருக்கிறது. இந்த மாளிகை கி.பி. 1790க்கும் கி.பி. 1793க்கும் இடையில் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதுவதாக தனது 'சேதுபதி மன்னர் வரலாறு' நூலில் குறிப்பிடுகிறார் எஸ்.எம். கமால். இந்த மாளிகையின் அமைப்பைப் பொறுத்தவரை, ஒரு கோவிலை ஒத்ததாக இருக்கிறது. கோவில்களில் இருப்பதைப் போலவே முதலில் மகா மண்டபம், அதற்கடுத்ததாக அர்த்த மண்டபம், பிறகு கருவறை அமைப்பில் இந்த மாளிகை கட்டப்பட்டிருக்கிறது.
நுழைவாயிலில் படிகளுக்கு இரண்டு பக்கமும் ஒரே மாதிரியான யாழியின் சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன. படிகளைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் வரும் மகா மண்டபத்தில் 24 உயரமான தூண்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிரம்மாண்டமான இந்த தூண்களை அலங்காரமான வளைவுகள் இணைக்கின்றன. இந்தக் கட்டமைப்பு மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனையை நினைவுபடுத்துகிறது. இதற்கடுத்ததாக, 10க்கும் மேற்பட்ட தூண்களுடன் அர்த்த மண்டபத்தைப் போன்ற அமைப்பு இருக்கிறது. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் கருவறை போன்ற விசாலமான அறை இருக்கிறது.

பாதியில் முடியும் சுரங்கப் பாதை
இந்த விசாலமான அறையின் ஒரு மூலையில், சுரங்கப் பாதை ஒன்றும் இருக்கிறது. இப்போது இந்தச் சுரங்கப் பாதை பாதியோடு மூடப்பட்டிருந்தாலும், அது செயல்பாட்டில் இருந்த காலகட்டத்தில் அரண்மனையைவிட்டு வெளியேறுவதற்கான வழியாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த கருவறை போன்ற மண்டபத்திற்கு மேலே உள்ள மாடியில் அதே அளவிலான ஒரு அழகு மிகுந்த மண்டபம் அமைந்திருக்கிறது. அதற்கும் மேலே ஒரு மொட்டை மாடியும் அதில் ஒரு மேடையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இது அரசரும் அரசியும் நிலாக் கால இரவுகளை ரசிப்பதற்காக கட்டப்பட்டது என தொல்லியல் துறை குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த ராமலிங்க விலாசம் அரண்மனையின் முக்கியத்துவம் என்பது இதன் கட்டடக் கலையோ அல்லது இதில் உள்ள சுரங்கமோ அல்ல. மாறாக இந்த ராமலிங்க விலாசத்தின் சுவர் முழுக்கத் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள்தான் இந்த மாளிகையை பிற மாளிகைகளிலிருந்து தனித்துக் காட்டுகின்றன. இந்த மாளிகையின் கீழ் தளத்திலும் முதல் தளத்திலும் உள்ள சுவர்களில் ஒரு அங்குல இடைவெளிகூட இல்லாமல் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இடைவெளி இல்லாமல் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள்
இந்த ஓவியங்களின் பெரும் பகுதி முத்து விஜய ரகுநாத சேதுபதியின் (கி.பி. 1713 - கி.பி. 1725) காலத்தில் தீட்டப்பட்டதாகவே வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். "அரசியல், சமூகம், கல்வித் துறையில் பல நூற்றாண்டுகளாகப் பின்னடைவு பெற்றிருந்த மக்களுக்கு இந்த வண்ண ஓவியங்கள் மகத்தான கற்பனையும் எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சேதுபதி மன்னர் இந்த ஓவியங்களைத் தீட்டுமாறு செய்துள்ளார்" எனக் குறிப்பிடுகிறார் எஸ்.எம். கமால்.
இந்த ஓவியங்களைப் பொறுத்தவரை, அரண்மனையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கருத்தை மையமாக வைத்து தீட்டப்பட்டுள்ளன. மகாமண்டபத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னருக்கும் சேதுபதி மன்னருக்கும் இடையில் அறந்தாங்கிக்கு வடக்கே நிகழ்ந்த போரின் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
மற்றொரு பக்கம் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் உருவமும் பெருமாளின் பல தோற்றங்களும் தீட்டப்பட்டுள்ளன. தெற்குச் சுவற்றில் சைவ சமயக் காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன. அந்தச் சுவற்றின் மற்றொரு பகுதியில் ஆற்காடு நவாபின் பவனி, மன்னர் தன் மடியில் பெண் குழந்தை ஒன்றை வைத்துக்கொண்டு ஆங்கிலேயர் ஒருவருடன் உரையாடும் காட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அதேபோல, அர்த்த மண்டபம் போன்றுள்ள இடைப்பட்ட மண்டபத்தில் பல புராணக் காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, கிருஷ்ணனின் பிறப்பை விளக்கும் காட்சிகள், ஆயர்பாடியில் கிருஷ்ணன் புரிந்த வீரச் செயல்கள் ஆகியவை ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன. கருவறை மண்டபத்தில் பாகவதக் கதைக் காட்சிகள், ராமாயணக் காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை தவிர, பண்டிதர் ஒருவர் முன்பு அமர்ந்து ராமாயணம் விரிவுரை செய்வது, மன்னரிடம் அளிப்பதற்காக மூன்று வெளிநாட்டவர்கள் அன்பளிப்புத் தட்டுகளை ஏந்தி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ராமாயணக் காட்சிகளின் அடியில் பெரும்பாலும் தமிழிலும் சில இடங்களில் தெலுங்கிலும் விளக்கக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.
இந்த மண்டபத்தின் மேல் விதானங்களில் அந்தப்புர காட்சிகள், ராதஜராஜேஸ்வரியிடம் செங்கோல் பெறுவது, மதுரை நாயக்க மன்னரான முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கர், முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு ரத்தினாபிசேகம் செய்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் மாடியில் உள்ள மண்டபம் முழுக்க, மன்னரின் அக வாழ்க்கை தொடர்பான, அந்தரங்க வாழ்க்கை தொடர்பான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இசை கேட்டல், நடனம் காணுதல், தேவியர் குழாமோடு நீராடுதல், பல்வேறு வடிவம் கொண்ட குடுவைகளின் மத்தியில் சேதுபதியும் ராணியும் இருத்தல், தேவியரோடு கூடி மகிழ்தல் போன்ற காட்சிகள் இந்த மண்டபத்தில் இடம்பெற்றுள்ளன.

வெவ்வேறு காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள்
இந்த ஓவியங்கள் மூன்று காலகட்டங்களில் வரையப்பட்டிருக்கலாம் என்கிறார் எஸ்.எம். கமால். மகா மண்டபத்தில் இடம்பெற்றிருப்பவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான ஓவியர்களாலும் அர்த்தமண்டபம் போன்ற பகுதியிலும் கருவறைப் பகுதியிலும் வரையப்பட்டிருப்பவை வேறொரு வகையான ஓவியர்களாலும் மேல் மாடியில் தீட்டப்பட்டிருக்கும் கிளர்ச்சியூட்டும் ஓவியங்கள் வேறு வகையான ஓவியர்களாலும் வரையப்பட்டிருக்கலாம் என்கிறார் எஸ்.எம். கமால்.
இந்த ஓவியங்களில் தெலுங்கு மற்றும் முகலாய ஓவியங்களின் சாயல் தென்படுவதாக வெ. வேதாச்சலம் எழுதிய 'ராமநாதபுரம் அரண்மனை' நூல் தெரிவிக்கிறது.
"முகலாய ஓவியங்களில் இருப்பதைப்போல உள்ளாடைகள் தெரியும் வகையிலான மெல்லிய ஆடைகளை ஆண்களும் பெண்களும் அணிந்துள்ளனர். முகலாயர்களைப் போன்ற தலைப்பாகைகளையும் இவர்கள் அணிந்துள்ளனர். இதிலுள்ள பெண்கள் தெலுங்கு நாட்டு சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காணப்படுவதைப் போன்ற கொண்டையிட்டுள்ளனர்" என்கிறது இந்த நூல்.

ராமலிங்க விலாசம் மாளிகையில் கட்டபொம்மன் சந்திப்பு நடைபெற்றதா?
ராமலிங்க விலாசம் மாளிகையை வீரபாண்டிய கட்டபொம்மனோடு தொடர்புபடுத்தி சில வரலாற்றுச் செய்திகளும் சொல்லப்படுகின்றன. வரி பாக்கி தொடர்பாக பேசுவதற்காக 1798ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தன்னை வந்து சந்திக்கும்படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் அப்போது கலெக்டராக இருந்த காலின் ஜாக்சன். இந்தச் சந்திப்பிற்காக கட்டபொம்மன் வந்தபோதும், குற்றாலத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜாக்சனைச் சந்திக்க முடியவில்லை. இதற்குப் பிறகு 1798ஆம் ஆண்டு செப்டம்பரில் ராமநாதபுரம் கோட்டைக்குள் இந்த சந்திப்பு நடந்தது. ராமலிங்க விலாசத்தின் முதல் மாடியில்தான் இந்த சந்திப்பு நடந்ததாக வாய்மொழிக் கதைகள் இருக்கின்றன.

ஆனால், அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் கதைப்பாடல்களில் கட்டபொம்மன் நூலின் ஆசிரியரும் கட்டபொம்மன், ஊமைத் துரை குறித்து பல நூல்களை எழுதியவருமான பேராசிரியர் வே. மாணிக்கம். "ராமநாதபுரம் கோட்டைக்குள் வேறெங்காவது இந்த சந்திப்பு நடந்திருக்கலாம். ஆனால், ராமலிங்க விலாசத்தின் முதல் மாடியில்தான் இந்த சந்திப்பு நடந்ததா என்பது சந்தேகத்திற்குரியதுதான். காரணம், அந்த அறை மன்னரின் அகவாழ்வு குறித்த ஓவியங்கள் நிறைந்த அறை. அம்மாதிரி ஒரு அறையில், இப்படிப்பட்ட அதிகாரப்பூர்வ சந்திப்புகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு" என்கிறார் வே. மாணிக்கம்.
இருந்தபோதும் பலர், காலின் ஜாக்சனுக்கும் கட்டபொம்மனுக்கும் இடையிலான சந்திப்பு இந்த மாளிகையில்தான் நடந்ததாகவும் இங்கிருந்தே கட்டபொம்மன் கீழே குதித்துத் தப்பியதாகவும் நம்புகிறார்கள்.
ஆனால், ராமலிங்க விலாசத்தைப் பொறுத்தவரை அதிலுள்ள ஓவியங்களே, அந்த மாளிகையை தமிழ்நாட்டின் மிக முக்கியமான கலைப்பொக்கிஷமாக கருதவைக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












