'போருக்கு அருகில் இந்தியா, பாகிஸ்தான்' - பதற்றத்தைக் குறைக்க வழி என்ன?

    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, ஆசிரியர், தெற்காசிய பிராந்தியம்

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மோசமடைந்து வரும் நிலையில், உலக நாடுகள் பலவும் இரு நாடுகளும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன.

ஆரம்பத்தில், இந்தியா வான்வழித் தாக்குதலை நடத்தியது, பதிலுக்கு டெல்லி தரப்பு உறுதி செய்யவில்லை என்றாலும், பாகிஸ்தானும் சில இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது. இதைத் தொடர்ந்து, இரு தரப்புமே இதை வெற்றியாகக் கருதி, போர்ப் பதற்ற சூழல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பழிக்குப் பழி என்ற ரீதியில் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் இரு தரப்பிலும் மோசமான சேதங்கள் ஏற்படக்கூடிய நிலை உருவாகி வருகிறது.

கடந்த 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றத்தின்போது அமெரிக்கா உள்படச் சில உலக நாடுகள், டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்தன. அதன் பின்னரே இவ்விரு நாடுகளும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பதற்றமான சூழல் குறைக்கப்பட்டது.

ஆனால் தற்போது உணர்ச்சிக் கொந்தளிப்பு நிலவுகிறது. தேசிய உணர்வு இரண்டு பக்கங்களிலும் புதிய உயரத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளாக இல்லாத வகையில் இந்த இரு அண்டை நாடுகளும் முழு வீச்சிலான போருக்கு மிகவும் அருகில் உள்ளன.

சர்வதேச சமூகம் அமைதி காப்பது ஏன்?

பிரிட்டனில் உள்ள லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு வரும் பாகிஸ்தானை சேர்ந்த ஆயிஷா சித்திக்கா, "சர்வதேச சமூகம் அமைதி காக்கிறது. அது ஆபத்தானது," என்று கூறுகிறார்.

"இரு நாடுகளுக்கும் இடையே பல பத்தாண்டுகளாக அவ்வப்போது சிறு சிறு உரசல்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. ஆனால் தற்போது கண்காணிக்கவும், நிறுத்துங்கள் என்று கூறவும் யாருமின்றி, இவ்விரு நாடுகளும் முதல்முறையாக மோதலில் ஈடுபடுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றால், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பது தொடரும்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ இவ்விரு நாடுகளும் பதற்றமான சூழலைக் குறைக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தான் தலைவர்களை அறிவுறுத்தினாலும், மற்ற அமெரிக்கத் தலைவர்களின் கருத்து இந்த விவகாரத்தில் வேறாக இருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சாத்தியமான போர்ச் சூழல், "எங்கள் பிரச்னை இல்லை," என்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.

"எவ்வளவு விரைவாக இயலுமோ, அவ்வளவு விரைவாக இயல்பு நிலைக்கு இவர்கள் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனாலும், இந்த நாடுகளை நம்மால் கட்டுப்படுத்த இயலாது," என்று அவர் தெரிவித்தார்.

வான்ஸ் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தபோது, இந்தியா நிர்வாகிக்கும் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் அதிகரிப்பது 'வெட்கக்கேடானது' என்று குறிப்பிட்டார்.

தற்போதைய மோதலின் தீவிரம் வேறுபட்டது

இதற்கு முந்தைய காலகட்டங்களில் நிலவிய பதற்றமான சூழல் உடனே தணிக்கப்பட்டது. உதாரணத்திற்கு, 2019ஆம் ஆண்டு நிலவிய பதற்றமான சூழல், இந்தியாவின் 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு' பிறகு தணிந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் செயல்பட்டு வந்ததாக இந்தியா கூறிய தீவிரவாத முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது இந்தியாவின் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டார். அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளின் தலையீட்டைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் தற்போதைய மோதலின் தீவிரம் வேறுபட்டது. இரு தரப்பிலும் உணர்ச்சி மேலோங்கியுள்ளது.

டிரம்பின் நிர்வாகம் சுங்கவரி, சீனா, யுக்ரேன் - ரஷ்யா விவகாரங்களுக்கு முன்னுரிமை வழங்கி வரும் நிலையில், இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலைக் குறைக்க சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது.

தெற்காசியாவில் செயல்பட்டு வரும் மற்றொரு வலிமை பொருந்திய நாடான சீனா, பாகிஸ்தானுடன் பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) ஒரு பகுதியாக சீனா பாகிஸ்தானில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளைச் செய்துள்ளது.

மேலும் இந்தியா, சீனா இடையே ஒரு தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னையும் உள்ளது. கடந்த 2020ஆம் அண்டில், இவ்விரு நாடுகளும் இமாலய பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது.

"இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா விரும்பாத பட்சத்தில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான பி5 நாடுகள் இதில் தலையிட வேண்டும். இது அவர்களின் பொறுப்பும்கூட," என்று பிபிசியிடம் கூறினார், ஷாங்காயில் செயல்படும் சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணரான ஷேன் டிங்க்லி.

கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய காஷ்மீரி பிரிவினைவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பி5 உறுப்பு நாடுகள் நியாயமான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்யஸ்தம் செய்ய முன்வரும் நாடுகள்

கத்தார், சௌதி அரேபியா, எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால் மத்யஸ்தம் செய்ய இந்த நாடுகள் முன்வரலாம்.

சௌதி அரேபியாவின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அதெல் அல்-ஜூபைர் மே 7 அன்று டெல்லிக்கு வருகை புரிந்தார். இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் அவரது வருகை ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.

அவருடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், "அதெல் அல்-ஜுபைருடனான சந்திப்பு நல்லவிதமாக அமைந்தது. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தையே அவரும் கொண்டிருக்கிறார்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் பயணத்தை முடித்துக் கொண்ட அதெல், மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் தலைவர்களைச் சந்திக்கச் சென்றார்.

வளைகுடா நாடான சௌதி அரேபியாவில் 2.6 மில்லியன் பாகிஸ்தானியர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். பாகிஸ்தான் மத்தியில் ரியாத் குறிப்பிட்ட அளவு செல்வாக்கைக் கொண்டிருக்கிறது.

பல்வேறு காலகட்டங்களில் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சௌதி அரேபியா பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதியை அந்நாட்டிற்குக் கடனாகக் கொடுத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலைத் தடுக்க, இரண்டு நாடுகளும் தத்தம் நாட்டு மக்களின் திருப்திக்காக, இதுவரை நடைபெற்ற தாக்குதலில் வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று கூறலாம்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடமாகக் கருதப்பட்ட இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. கடந்த மாதம் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பேற்க வைக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறுகிறது.

"இந்தியா தன்னுடைய நோக்கத்தில் வெற்றி அடைந்துவிட்டதாக ஏற்கெனவே கூறியுள்ளது. தற்போது பாகிஸ்தான் கையில்தான் அனைத்தும் உள்ளது. அவர்கள் பதில் தாக்குதல் நடத்த விரும்பினால் இந்தியா தரப்பில் இருந்தும் கடுமையான பதிலடி எழலாம்," என்று ஓய்வுபெற்ற லெஃப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களின்போது, "இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஐந்து போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக," பாகிஸ்தான் கூறுவதை இந்தியாவுக்கு எதிரான தனது சாதனையாக, அந்நாட்டு ராணுவம் தனது மக்களிடம் காட்டிக் கொள்ளலாம்.

இதுவரை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக இந்தியா தரப்பில் இருந்து எந்த விதமான அதிகாரபூர்வ தகவல்களும் வழங்கப்படவில்லை.

இந்தியாவின் நோக்கங்களைப் பொறுத்துதான் தற்போதைய சூழல் முடிவுக்கு வரும் என்று கூறுகிறார் சித்திக்கா. இந்தச் சூழலில் தண்டனையைத் தருவது எனத் தொடங்கிய இந்தியாவின் நோக்கம், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு