You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுக அமைச்சர்கள் மீது பாயும் ஊழல் வழக்குகள்: கட்சிக்கு என்ன நெருக்கடி?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, திமுகவில் மாநில துணை பொதுச் செயலாளர்களில் ஒருவர். அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இது மட்டுமல்லாமல் வேறு சில மூத்த அமைச்சர்கள் மீதும் ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் உள்ளன. சுமார் 10 அமைச்சர்கள் மீது மத்திய அரசின் விசாரணை முகமைகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
திமுகவின் தூண்களாகவும் வியூகங்களை வகுப்பவர்களாகவும் களத்தில் இறங்கி பணியாற்றுபவர்களாகவும் இருக்கும் இத்தகைய அமைச்சர்கள் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்கள்.
ஆளுங்கட்சியான திமுக இப்போது எந்த அளவுக்கு ஆபத்தில் இருக்கிறது?
இதுவரை நடந்தது என்ன?
2006-2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக 1.73 கோடி சொத்து சேர்த்ததாக, அடுத்த வந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 2016ம் ஆண்டு அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அப்போதே மேல் முறையீடு செய்திருந்தனர்.
நிலுவையில் இருந்த மேல் முறையீட்டு வழக்கு, தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றம் அவரை தண்டித்துள்ளதால் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் படி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், அதன் மூலம் அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்துள்ளார்.
அடுத்தடுத்து பாயும் வழக்குகள்
திமுக ஆட்சியில் தற்போது அமைச்சரவையில் உள்ள சுமார் பத்து பேர் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளனர். அதில் பெரும்பாலும் மத்திய விசாரணை முகமைகள் எடுத்தவை.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் வருமானவரித்துறையினர் சோதனைகள் நடத்தியுள்ளனர்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது மணல் கடத்தல் வழக்கு உள்ளது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஜூன் மாதத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்த பல மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக இல்லை. அவரை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தக்க வைத்துக் கொண்டாலும், இந்த வழக்கில் இருந்து விடிவு பிறக்கவில்லை.
அதே போன்று இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மூத்த தலைவருமான ஜெகத் ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகள் நடத்தினர்.
மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சோதனை வட்டத்தில் இருக்கின்றனர். இதில் பொன்முடி மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு பதவியை இழந்துள்ளார்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலையும் அவை எந்தெந்த நீதிமன்றங்களில் எந்த கட்டத்தில் உள்ளன என்ற தகவல்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
இது போன்ற வழக்குகளை கண்காணிக்க சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வி கங்கபுர்வாலா தலைமையிலான அமர்வு இந்த வழக்குகளை கண்காணித்து, கீழமை நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கும்.
இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுகவின் அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக வழக்குகளில் சிக்குவது வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதிலும் மக்களிடம் கட்சியின் செல்வாக்கை காப்பாற்றுவதிலும் திமுகவுக்கு என்ன விதமான சிக்கலை உருவாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஊழல் வழக்குகள் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
வழக்கில் சிக்கியவர்கள் தற்போது பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் என்பதால், திமுகவின் பிம்பத்தை இது கண்டிப்பாக பாதிக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன். “தமிழ்நாட்டில் தேர்தல் வாக்களிப்பு என்பது தரவுகளின் அடிப்படையில் அமைவதில்லை, மாறாக மக்களுக்கு ஏற்படும் பிம்பத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஊழல் கட்சி என திமுகவை விமர்சிக்கும் பாஜகவின் வாதத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கும். திமுக இதனை சமாளிப்பது எளிதானதாக இருக்காது” என்கிறார் அவர்.
ஆனால், இது போன்ற ஊழல் வழக்குகளினால் தேர்தல் களம் பெரிதும் பாதிக்கப்படாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜென் ராம்.
"இது போன்ற வழக்குகள் வரும் போது அந்த கட்சிக்கு ஒரு நெருக்கடி இருப்பது போலவே தோன்றும். ஆனால், ஊழல் வழக்கில் தண்டனைப் பெற்று சிறை சென்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அடுத்த தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் என்பது நினைவில் இருக்க வேண்டும். ஒரு வழக்கில் வரும் தீர்ப்பினால் மக்களிடம் உள்ள செல்வாக்கு குறையாது" என்கிறார் அவர்.
அதே சமயம், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற வாதத்தை இனி திமுக வைக்க முடியாது என்கிறார் பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன், " பொன்முடி மீது ஏற்பட்ட கறை, அறிவாலயத்தின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் ஏற்பட்ட கறையாகும். உச்சநீதிமன்றத்தில் பொன்முடி குற்றமற்றவர் என்று நிரூபித்தாலும் இந்த கறை மறையாது."
"திமுக மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி தண்டிக்கப்பட்ட போதும், செந்தில் பாலாஜி மீது வழக்கு வந்த போதும், அவை அவர்கள் அதிமுகவில் உறுப்பினர்களாக இருக்கும் போது நடந்தவை என்று திமுக கூறியது. ஆனால் பொன்முடியின் வழக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. இதன் மூலம் நாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று உரக்க சொல்லும் தகுதியை திமுக இழந்து விட்டது." என்றார்.
அமைச்சர்கள் தண்டிக்கப்பட்டு வெற்றிடம் ஏற்பட்டால், தேர்தல் களம் மட்டுமல்லாமல் கட்சி ரீதியாகவும் திமுகவுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறும் மாலன், "திமுகவின் நிதியாதாரம் பாதிக்கப்படும்" என்கிறார்.
"அமைச்சர் நிரபராதி என்று கூறிய மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. எனவே இனி வரும் நாட்களில், கீழமை நீதிமன்றங்களும் இது போன்ற வழக்குகளில் மிகவும் கவனமாக இருக்கும். அதனாலும் திமுகவுக்கு சிக்கல் வரலாம். பொன்முடி, செந்தில் பாலாஜி இருவருமே அவரவர் மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு பெற்றவர்கள், கட்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கு நிதி வழங்குபவர்கள். இவர்கள் இல்லாவிட்டால், அந்த பகுதியில் பணிகளை மேற்கொள்வதில் திமுகவுக்கு சிக்கல் ஏற்படலாம்" என்றார்.
அதிமுகவால் பலனடைய முடியுமா?
அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, “திமுக ஊழல் கட்சி, இப்போது ஒரு அமைச்சர் தான் தண்டிக்கப்பட்டுள்ளார். இன்னும் எத்தனை பேருக்கு இதே நிலைமை ஏற்படுமோ” என்றார்.
பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், அதிமுக திமுகவை விமர்சித்தாலும், இதன் பலனை அரசியல் ரீதியாக அதிமுகவால் பெற முடியாது என்று கூறப்படுகிறது.
"இந்த சூழலை அதிமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது" என்றார் பத்திரிக்கையாளர் மாலன்.
"ஏற்கெனவே அவர்கள் தலைவர் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் கூறியதாலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வளர்மதி ஆகியோர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், அதிமுக இந்த தீர்ப்பை கொண்டாட முடியாது. ஆனால் பாஜக இந்த வாய்ப்பை கண்டிப்பாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். எனினும் இவை எல்லாம் வாக்குகளாக மாறுமா என்பது தெரியாது" என்கிறார்.
பாஜகவின் நிலைப்பாடுகளை மக்கள் அறிவார்கள் என்கிறார் பத்திரிக்கையாளர் எஸ்.பி.லக்ஷ்மணன்.
"திராவிட இயக்கங்கள் ஊழல் இயக்கங்கள் என பாஜக கூறும். எனினும், தனது கூட்டணியில் அதிமுக இடம் பெறலாம் என்று எண்ணுவதால், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க ஆளுநர் அனுமதி அளிக்காததை பாஜக தலைவர் அண்ணாமலை கண்டிக்கவில்லை. எனவே அவரும் ஊழலுக்கு எதிரானவர் அல்ல, அரசியல் செய்ய தான் பார்க்கிறார் என்பதை மக்கள் அறிவார்கள்" என்கிறார் அவர்.
மேலும், "தேர்தலில் வாக்குகள் பெறுவது என்பது கட்சியின் மீது மக்களின் பார்வை, மதிப்பீடு, உள்ளூர் சூழல் என பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டது" அதில்தான் அதிமுக கவனம் செலுத்தும் என்கிறார் அவர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவில் 11 அமைச்சர்கள் மீது இதே மாதிரியான வழக்குகள் நடைபெறுகின்றன என சுட்டிக்காட்டினார்.
“அமைச்சர் துரைமுருகன் மீது வேலூரில் வழக்கு நடைபெறுகிறது. கே என் நேரு மீது இரண்டு வழக்குகள் உள்ளன, ஐ. பெரியசாமி மீது நான்கு வழக்குகள் நடைபெறுகின்றன, எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன, அதே போன்று ரகுபதி, பெரியகருப்பன், டி எம் அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளன. அமைச்சர் கீதா ஜீவன் 2022ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கில் மேல் முறையீட்டுக்கு அரசு செல்லவில்லை. மேல் முறையீட்டுக்கு செல்ல வேண்டும். இப்போது கிடைத்த ஒரு தீர்ப்புடன் நின்று விடக் கூடாது. இது காலம் கடந்த தீர்ப்பு ஆகும். மற்ற வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இப்படி வழக்குகள் தொடுப்பது ஒரு வேளை திமுகவிற்கு சாதகமாகவும் முடியலாம் என்கிறார் பத்திரிக்கையாளர் ஜென்ராம், "நாங்கள் ஊழலற்றவர்கள் என்று வாதம் முன்வைத்து வந்த திமுகவின் அறநிலைப்பாடு சரிவை கண்டுள்ளது. எனவே, இதை கண்டிப்பாக பாஜக, நாம் தமிழர் கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக்கூடும். ஆனால் மக்களிடம் அது எடுபடுமா என்பது தெரியாது.
ஊழல் செய்பவர்களில் ஒரு சிலருக்கே ஏன் தண்டனை வழங்கப்படுகிறது என்ற கேள்வி இயல்பாக மக்களுக்கு வரும். இதனால் நிலைமை நேர்மாறாகக் கூட ஆகலாம்." என்கிறார்.
திமுக என்ன சொல்கிறது?
பொன்முடி மீதான வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் சென்று வெல்ல முடியும் என்றே திமுக கருதுகிறது. இது பற்றி திமுக வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ பேசுகையில், “ பொன்முடியின் மனைவிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வருமானம் கிடைக்கும் லாபகரமான தொழில் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால் வருமான வரியினை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாததாலேயே சந்தேகம் எழுந்துள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சென்று இந்த வழக்கை கண்டிப்பாக வெல்வோம்" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)