ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கு பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன?

கொலை குற்றத்திற்காக ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சனா நகரில் சிறையில் இருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.
நிமிஷாவுக்கு முன்னதாக ஜூலை 16ஆம் தேதி, மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அது கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு நிமிஷா பிரியாவுக்கு உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
கடந்த 2017ஆம் ஆண்டில் தன்னுடைய தொழில் கூட்டாளியான தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்ததாக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
மஹ்தி ஒரு ஏமன் குடிமகன். ஏமன் தலைநகர் சனாவில் அவருடன் இணைந்து நிமிஷா பிரியா கிளீனிக் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில், மஹ்தியின் உடல் பாகங்களின் சில துண்டுகள் தண்ணீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
நிமிஷா பிரியா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த வழக்கு ஏமன் மற்றும் அரபு ஊடகங்களிலும் விவாதிக்கப்படுகிறது.
ஏமனின் அரபு செய்தி இணையதளமான அல்-மஹிரா தனது செய்தியில், "ஏமனின் இஸ்லாமிய சட்டப்படி, கொலையுண்டவரின் குடும்பத்தினர் சம்மதித்தால் மட்டுமே நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்க முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-ஏமன்-அல்-காட் இணையதளம் தனது செய்தியில், "நிமிஷாவுக்கு ஜூலை 16 மரண தண்டனை நிறைவேற்றப்பட தேதி நிர்ணயிக்கப்பட்டதாக, ஜூலை 9 அன்று நிமிஷாவின் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்தனர். ஏமனின் ஷரியா சட்டப்படி நிமிஷாவின் குடும்பம் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ஒரு மில்லியன் டாலர்கள் வரை அந்நாட்டு வழக்கப்படி குருதிப் பணம் (blood money) எனப்படும் இழப்பீட்டுத் தொகையைத் தர முன்வந்தனர். ஆனால் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, "நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற பல முக்கிய மதத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏமனின் சூஃபி அறிஞர் ஷேக் ஹபிப் உமர் பின் ஹஃபீஸும் இதில் அடங்குவார். இந்திய அரசு ராஜ்ஜீய ரீதியில் முயன்று வருகிறது. ஆனால், ஹூத்திகளுடன் இந்திய அரசுக்கு நல்லுறவு இல்லாததால், அதில் வெற்றி கிடைக்கவில்லை" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்-ஏமன்-அல்-காட் எழுதுகையில், "நிமிஷா பிரியா வழக்கு ஒரு சாதாரண குற்றச் சம்பவம் அல்ல. சட்டம், பண்பாடு, அரசியல், மதம் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. மரண தண்டனையை ஒத்தி வைத்திருப்பது நிச்சயமாக நம்பிக்கையை அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியாகும் கல்ஃப் நியூஸ் இதுகுறித்த செய்தியில், "ஏமனில் ராஜ்ஜீய விவகாரங்கள் தொடர்பாக இந்தியா செயலாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் இந்த வழக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஹூத்தி ஆட்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை. எனவே இந்தியா இதில் தலையிடுவதற்கு மிகவும் குறைவான வாய்ப்புகளே உள்ளன.
பழங்குடி மற்றும் மதத் தலைவர்கள் மூலமாக நிமிஷாவை காப்பாற்ற இந்தியா முயல்கிறது. கடைசி நிமிடத்தில் இந்தியாவை சேர்ந்த மதகுரு கிராண்ட் முஃப்தி மூலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், இன்னும் ஆபத்து முடியவில்லை" என எழுதியுள்ளது.

அரபு செய்தி இணையதளமான அல்-குட்ஸ், மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபதா மஹ்தியின் ஃபேஸ்புக் பதிவை குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று அல் குட்ஸ் வெளியிட்ட பதிவில் மஹ்தியின் சகோதரர், "மத்தியஸ்தம் அல்லது பேச்சுவார்த்தையில் புதிதாகவோ அல்லது ஆச்சர்யப்படுவதற்கோ ஒன்றுமில்லை. பல ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும், எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் கோரிக்கைகள் நியாயமாக உள்ளன. குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். அதைத் தாண்டி எங்களுக்கு வேறொன்றும் வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, "மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை ஒத்தி வைத்தது துரதிருஷ்டவசமானது, அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எந்தவித சமரசத்தையும் நாங்கள் மறுத்திருக்கிறோம் என்பது நீதிமன்றத்திற்குத் தெரியும். மரண தண்டனை நிறைவேற்றப்படும் வரை எங்கள் முயற்சிகள் தொடரும். எந்தவித அழுத்தத்திற்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். நீதி கிடைக்க அதிக காலமாகும், ஆனால் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
அல்-குட்ஸ் செய்தியின்படி, "மஹ்தி நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும் நிமிஷாவை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை. இத்தகைய புகார்களை எந்த நீதிமன்ற விசாரணையிலும் நிமிஷா கூறவில்லை, அவரது சட்டக் குழுவும் இதைத் தெரிவிக்கவில்லை. இந்திய ஊடகங்கள் உண்மையைத் திரித்துக் கூறுகின்றன" எனவும் மஹ்தியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
நிமிஷா பிரியாவின் தண்டனையை ஒத்திவைப்பதில் பங்காற்றிய மதகுரு

பட மூலாதாரம், Imran Qureshi
நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து மீட்பதற்காகச் செயல்பட்டு வரும் 'சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்', ஜூலை 14 அன்று பெரிதும் மதிக்கப்படும், செல்வாக்குமிக்க கேரள மதத் தலைவரான 'கிராண்ட் முஃப்தி' ஏபி அபுபக்கர் முஸ்லியார், நிமிஷா பிரியா வழக்கு குறித்து 'ஏமனில் சில ஷேக்குகளிடம் பேசியதாக' கடந்த ஜூலை 15ஆம் தேதி தெரிவித்தது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் அந்த கவுன்சிலின் உறுப்பினரான சுபாஷ் சந்திரா பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "இந்த கவுன்சிலின் உறுப்பினர்கள் கிராண்ட் முஃப்தியை சந்தித்தனர். அதன்பின், ஏமனில் உள்ள செல்வாக்குமிக்க ஷேக்குகளிடம் அவர் பேசினார்" எனத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சிலர் உள்பட செல்வாக்கு மிக்கவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
ஜூலை 16 அன்று நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக, முஸ்லியாரின் தலையீடு இறந்தவரின் குடும்பத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு உத்வேகம் அளித்தது.
இந்தியாவின் 'கிராண்ட் முஃப்தி' என அழைக்கப்படும் முஸ்லியார், சுன்னி சூஃபிசம் மற்றும் கல்விக்கு அளித்த பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். ஆனால், பெண்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துகளுக்காகப் பலமுறை கண்டனங்கள் எழுந்தன.
கேரள பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாறு பேராசிரியர் அஷ்ரஃப் கடக்கல் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "அவரை பின்பற்றுவோருக்கு அவர் நபியைப் போன்றவர். அவருக்கு மந்திர சக்தி உள்ளதாகவும் சிலர் நம்புகின்றனர்" என்றார்.
"அவர் பரேல்வி பிரிவைச் சேர்ந்தவர். சூஃபி மாநாடு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி அவரை கௌரவித்தார். ஆனால், பெண்கள் மீதான முஸ்லியாரின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












