ஈரோட்டில் சுகாதாரத் துறை தேடிய பழங்குடி கர்ப்பிணி பெண் சொந்த ஊர் திரும்பினார் - என்ன நடந்தது?

தேடப்பட்டு வரும் கர்ப்பிணி பெண்
படக்குறிப்பு, பழங்குடி கர்ப்பிணி சேவந்தி
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

ஈரோட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு சுகாதாரத்துறையும் காவல்துறையும் சேர்ந்து தேடி வந்த சேவந்தி என்ற பழங்குடி கர்ப்பிணி பெண் வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு பிரசவ வலி இன்னும் வரவில்லை. மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவர்களுக்கு‌ அவர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக குடும்பத்தார் கூறியுள்ளனர்.

அவரை சுகாதாரத்துறையினர் தேட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

இடம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா, சோளகர் தொட்டி கிராமம்

தேதி : ஜூலை 05-ஆம் தேதி, மாலை 5மணி.

அழகான மலைப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

அந்த கிராமத்தில் இருந்த சேவந்தி என்ற 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஜூலை 7-ஆம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. அவருக்கு இது இரண்டாவது பிரசவம்.

ஒரு வாரம் முன்பே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கிராம சுகாதார செவிலியர் ஜோதி வலியுறுத்தியிருந்தார். ஆனால் சேவந்தி மற்றும் அவர் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

ஜூலை 5-ஆம் தேதி சேவந்தியை சந்திக்க சென்ற போது, ஜூலை 7-ஆம் தேதி மருத்துவமனைக்கு வருவதாக சேவந்தி கூறியிருந்தார். ஆனால் ஜூலை 7-ஆம் தேதி காலை ஜோதி அங்கு சென்ற போது, சேவந்தியின் வீடு பூட்டியிருந்தது. அவர் வீட்டிலிருந்த அவரது கணவர் சந்திரன், அவரது 3 வயது குழந்தை, அவரது மாமியார் நான்கு பேரும் காணவில்லை. அந்த கிராமத்தில் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

தேடப்பட்டு வரும் கர்ப்பிணி பெண்
படக்குறிப்பு, சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

பத்து நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் கர்ப்பிணி

தமிழ்நாடு பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் மாநிலமாகும்.

தேசிய குடும்ப நல ஆய்வு (2020-2021) தரவுகள் படி 99.6% பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation (PICME) திட்டத்தின்படி, ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் பிரசவமும் கண்காணிக்கப்படுகிறது, குறிப்பாக கிராமங்களில் இந்த கண்காணிப்பு தீவிரமாக உள்ளது.

செவிலியர் ஜோதி மட்டுமல்லாமல், பிளாக் மருத்துவ அலுவலர், விவசாய சங்கத் தலைவர் என பலர் முயற்சி எடுத்தும் சேவந்தி எங்கு இருக்கிறார் என்று கண்டறியமுடியவில்லை.

அவரின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை, சேவந்தியை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

ஜூலை 16-ஆம் தேதி மாலை வரை சேவந்திக்கு பிரசவம் நடைபெற்றதா இல்லையா, அவர் எங்கு உள்ளார் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்தினருக்கு கிடைக்கவில்லை.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஜூலை 14ம் தேதி கர்ப்பிணியை காணவில்லை என்று சுகாதாரத்துறை புகார் அளித்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண் அணைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் ஒத்துழைக்கவில்லை" என்றார்.

சேவந்தி, சோளகர் தொட்டி, தமிழ்நாடு, பழங்குடி கர்ப்பிணி
படக்குறிப்பு, சேவந்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது.
தேடப்பட்டு வரும் கர்பிணி பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகாவில் அமைந்துள்ளது சோளகர் தொட்டி கிராமம். சோளகர் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொதுவாக பிரசவங்களை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள்.

"அவர் முதல் பிரசவத்திலேயே மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டினார். பிறகு அவரிடம் பேசி அவரை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைத்தோம். அவருக்கு சுகபிரசவம் ஆனது. எனவே இந்த முறை அவரை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கண்காணித்து வந்தோம்.

மகப்பேறு பரிசோதனைகளுக்கு அவர் தவறவிடாமல் வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை காண இயலவில்லை. இவரை போன்ற பலர் பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்வதில்லை. பல மணி நேரங்கள் உட்கார்ந்து பேசி பல பெண்களை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கூட்டி வந்துள்ளோம். ஆனால் அவரை காணவேயில்லை என்பதுதான் இதில் எங்களுக்கு சவால்" என்கிறார் இதில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் ஒருவர்.

சேவந்தியை தேடும் பணியில் பல தரப்பினர் உதவியையும் சுகாதாரத்துறை நாடியுள்ளது. முதல் பிரசவத்தின் போதும் சுகாதாரத்துறையினரின் மிகுந்த வற்புறுத்தல், காவல்துறையினர் தலையீட்டுக்கு பிறகே சேவந்தி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

தாளவாடி விவசாய சங்கத் தலைவர் கண்ணையன், "முதல் பிரசவத்தின் போது சேவந்திக்கு ரத்த சோகை இருந்தது. வேறு சில உடல் நல பிரச்னைகளும் இருந்தது. எனவே மருத்துவ நிபுணர்களை நேரில் சென்று ஆலோசனைப் பெற வேண்டும் என்று சுகாதார ஊழியர் கூறியிருந்தார்.

அவரை அழைத்துச் செல்ல வாகனம் வந்திருந்தது, ஆனால் அவர் அதில் ஏற மறுத்துவிட்டார். உதவிக்காக நான் கொடுத்த காசையும் வாங்க அவரது மாமியார் மறுத்துவிட்டார். பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவரிடம் பேசி, மருத்துவரே காரை எடுத்துக் கொண்டு வந்த அவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். நானும் உடன் சென்றிருந்தேன். அப்போது அவரது மாமியார், 'இவர்களுக்கு என்ன தெரியும்? நான் எத்தனை பிரசவங்கள் பார்த்திருக்கிறேன்' என்றார்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சோளகர் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொதுவாக பிரசவங்களை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும் என்கிறார் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். (கோப்புப்படம்)

சோளகர் தொட்டி அருகில் இருக்கும் மருத்துவ நிலையம் 4 கி.மீ தொலைவில் இருக்கும் பைனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம். அடுத்து கிராமத்திலிருந்து 20 நிமிடத்தில் செல்லக் கூடிய தாளவாடி மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம். அங்கு பிரசவம் பார்ப்பதற்கான வசதி உண்டு என்றாலும், அவருக்கு ரத்த சோகை இருந்ததால் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

"பிரசவத்தின் போது கடைசி நேர சிக்கல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நடந்தது. ஆனால் அதையே காரணம் காட்டி அவரது மாமியார், எந்த பிரச்னையும் இல்லாத போதே பல கிலோ மீட்டர் தள்ளியுள்ள மருத்துவமனைக்கு தேவையில்லாமல் எங்களை அழைத்துச் சென்றீர்கள், எங்களுக்கு ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவாகிவிட்டது என்று கூறுகிறார்" என்கிறார் கண்ணையன்.

"அவருக்கு முதல் பிரசவத்திலேயே ரத்த சோகை இருந்தது. இந்த முறையும் அவருக்கு ஹீமோகுளோபின் அளவு 8 மட்டுமே இருந்தது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததால், தேவையான இரும்புச் சத்து கொடுத்து அவரது ஹீமோகுளோபின் அளவு 11.2 ஆக உயர்ந்திருந்தது." என்கிறார் சேவந்தியை கண்காணித்து வந்த கிராம சுகாதார ஊழியர் ஒருவர்.

சேவந்திக்கு அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் கிடைத்துள்ளன. மேலும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.14 ஆயிரத்தின் முதல் தவணை கிடைத்துள்ளது என்கிறார் கிராம சுகாதார ஊழியர்.

ஏன் பழங்குடியினர் மருத்துவமனை வர தயங்குகின்றனர்?

சோளகர் தொட்டி கிராமம் வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்ட கிராமம்.

"அவரது மாமியார் காவல்துறை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் தான் அரசின் இழப்பீட்டை பெற்றிருக்கிறார். இந்தப் பகுதியில் அவரைப் போன்று மேலும் சிலர் உள்ளனர். எனவே இப்பகுதியினருக்கு அரசு மீதான நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது. தாளவாடியில் தாலுகா மருத்துவமனை வேண்டும் என்பது இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கை," என்று கூறும் கண்ணையன் சோளகர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சிலர் கல்வி பயில உதவி வருகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பழங்குடியின பெண்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர்.

"பழங்குடி பெண்களிடம் பிரசவ தேதி வந்துவிட்டது, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வலி வந்தால்தான் பிரசவத்துக்கு உடல் தயாராகிறது என்பது அவர்களின் புரிதலாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் குடும்பங்களில் அந்த வழக்கத்தையே அவர்கள் பார்த்திருப்பார்கள்." என்கிறார்.

பழங்குடியின பெண்கள் மத்தியில் ரத்த சோகை பரவலாக காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

"பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் வசிக்கும் பகுதியை பொறுத்து அதிக புரதம், அதிக கொழுப்பு இருக்கலாம். செருப்பு இல்லாமல் நடக்கும் பழக்கம் இருந்தால் கொக்கிப்புழு தொற்று ஏற்படலாம். அதுவும் ரத்த சோகைக்கு காரணமாகலாம்" என்றார்.

மேலும் அவர், "கர்ப்பிணி பெண்ணுக்கு அனைத்தும் இலவசம் என்றாலும், அவருடன் இருப்பவருக்கான தங்கும் செலவு, உணவு செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை அதிகரிக்கிறது. இந்த பெண்ணின் மாமியார் கூறியது போல, கையிலிருந்து செய்ய வேண்டிய செலவு அதிகரிக்கிறது. தேவைப்படும் இடங்களில், நோயாளியுடன் வருபவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல தனி படுக்கை, உணவு ஆகியவற்றை வழங்க ஆலோசிக்க வேண்டும்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு