இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு தடை - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
காஸாவில் இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிராக மாலத்தீவில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இஸ்ரேலிய மக்கள் மாலத்தீவுக்குள் வருவதற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மாற்ற அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. அமைச்சரவை பரிந்துரையின் பேரில் அதிபர் முய்சு இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த செயல்முறையை மேற்பார்வையிட துணைக் குழுவொன்றை அமைக்கவும் தீர்மானித்துள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் அலி இஹ்சானும் அறிவிப்பு வெளியிட்டார்.
உள்துறை அமைச்சர் அலி இஹ்சானுடன், இஸ்லாமிய அமைச்சர், அட்டர்னி ஜெனரல், பொருளாதார அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரும் இந்த துணைக்குழுவில் இடம்பெறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய குடிமக்களுக்கு தடை விதிப்பது மட்டுமின்றி, பாலத்தீனம் தொடர்பான முக்கிய முடிவுகளையும் மாலத்தீவு எடுத்துள்ளது.
பாலத்தீன மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு

பட மூலாதாரம், MALDIVES PRESIDENT OFFICE
மாலத்தீவு அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, அதிபர் முகமது முய்சு பாலத்தீனர்களின் தேவைகளை மதிப்பிடும் ஒரு சிறப்பு தூதரை நியமிப்பார், மேலும் அவர்களுக்காக நிதித் திரட்டுவதற்கான பிரசாரத்தையும் தொடங்குவார்.
இந்த நிதி இடம்பெயர்ந்த பாலத்தீனர்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படும். இது தவிர பாலத்தீனர்களுக்கு எந்தெந்த பகுதிகளில் உதவிகள் தேவை, என்ன மாதிரியான உதவிகள் தேவை என்பது குறித்தும் இந்த தூதுவர் மாலத்தீவு அதிபருக்கு ஆலோசனை வழங்குவார்.
'மாலத்தீவு மக்கள் பாலத்தீனத்துக்கு ஆதரவாக நிற்கிறார்கள்' என்று பெயரிடப்பட்ட தேசிய அணிவகுப்பை நடத்தவும் மாலத்தீவு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், பாலத்தீன விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய நாடுகளுடன் சந்திப்பை ஏற்பாடு செய்து, முன்மொழிவை வெளியிடவும் மாலத்தீவு திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலிய குடிமக்கள் மாலத்தீவுக்குள் நுழையத் தடை விதிக்கும் இந்த அரசாங்கத்தின் முடிவு எதிர்க்கட்சித் தலைவர் மேற்கொண்ட முயற்சிக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்.டி.பி) தலைவரான மைக்கேல் அகமது நசீம், இஸ்ரேலிய குடிமக்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையில் குடிவரவுச் சட்டத்தில் திருத்தத்தை கடந்த வாரம் அறிமுகப்படுத்தி இருந்தார். மாலத்தீவில் புதிய பாராளுமன்றம் கடந்த வாரம் பொறுப்பேற்றது, அதன் இரண்டாவது கூட்டம் இன்று தொடங்கியது.
மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், பிரதான ஆளும் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) 93 தொகுதிகளில் 75 இடங்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அமோக பெரும்பான்மையை பெற்றது.
இதனிடையே தலைநகர் மாலே நகரில், காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக பொது மக்கள் பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மற்றும் இஸ்ரேலிய குடிமக்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் சட்டத்தை கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்ரேலின் எதிர்வினை என்ன?
இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடுக்கும் மாலத்தீவின் முடிவைத் தொடர்ந்து இஸ்ரேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மாலத்தீவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் மக்களுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்களுக்கும் வெளியுறவு அமைச்சகம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.
மாலத்தீவுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள், அவர்களில் சுமார் 15 ஆயிரம் பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு, சுமார் 11 ஆயிரம் இஸ்ரேல் குடிமக்கள் மாலத்தீவுக்கு வருகை தந்துள்ளனர். இது மாலத்தீவின் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 0.6 சதவீதம் ஆகும்.
மாலத்தீவு முடிவுகள் பற்றி சமூக ஊடக எதிர்வினைகள் என்ன?

பட மூலாதாரம், @MALDIVES
மாலத்தீவு அரசின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல இஸ்ரேலிய குடிமக்கள் மாலத்தீவு அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.
மாலத்தீவு அரசின் இந்த முடிவுக்கு இஸ்ரேலியரும் சமூக ஆர்வலருமான யூசுப் ஹடாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், 'அக்டோபர் 7இல் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு, பாலத்தீனர்கள் நுழைவதற்கு எந்தத் தடையும் இல்லை' என்று பதிவிட்டுள்ளார்.
அதில், "மாலத்தீவை பொறுத்தவரை, நீங்கள் இஸ்ரேலியர்களை பாலியல் வன்புணர்வு, கடத்தல் மற்றும் இனப்படுகொலை செய்தால், நீங்கள் அந்நாட்டுக்கு விடுமுறையை கொண்டாட வரவேற்கப்படுவீர்கள், ஆனால் பயங்கரவாத அமைப்பிலிருந்து உங்கள் நாட்டைப் பாதுகாத்தால், உங்களை அனுமதிக்க மாட்டார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
"இரான், வட கொரியா, சிரியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் நுழைவதை அவர்கள் தடை செய்யவில்லை. இஸ்ரேலியர்களை மட்டுமே தடை செய்துள்ளனர். ஒருவகையில் இது இனவெறியின் வரையறையாகும். மாலத்தீவில் அழகான தீவுகள் இருக்கலாம் ஆனால் அவர்களின் கொள்கைகள் அருவெறுப்பானவை. அவர்கள் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள்" என்று யூசுப் ஹடாத் காட்டமாக தெரிவித்துள்ளார்.
உஸை புலுட் என்ற எக்ஸ் தள பயனர் இதுகுறித்த பதிவில்,
"மாலத்தீவின் இனவெறி அரசாங்கம் இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது. இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. மாலத்தீவின் இஸ்லாமிய ஷரியா சர்வாதிகாரம் கிறித்தவர்களை இப்படித்தான் நடத்தும். மாலத்தீவு 100 சதவிகிதம் முஸ்லிம்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கிறிஸ்தவர்களுக்கு இடமில்லை என்று அர்த்தம்."
"மாலத்தீவின் குடிமகனாக இருக்க வேண்டும் என்றால் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும். நாட்டிற்குள், மிகவும் நெருக்கமான சமூகங்களுக்குள், யாரேனும் இஸ்லாமிய விழுமியங்களிலிருந்து விலகினால் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் அல்லது முஸ்லிம் தலைவர்களிடம் தெரிவிக்கப்படும். இதன் காரணமாக இதனால்தான் இஸ்லாத்தை கைவிடுபவர்கள் தங்கள் நம்பிக்கையை ரகசியமாக வைத்துள்ளனர். யாராவது கண்டுபிடிக்கப்பட்டால், ஷரியாவை மீறும் கிறித்தவர்களின் குடியுரிமை மற்றும் சலுகைகள் பறிக்கப்படும்.” என்று பதிவிட்டுள்ளார்.
அசோக் குமார் என்ற பயனர் எக்ஸ் தளத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) நடந்து வரும் இனப்படுகொலை வழக்கில் மாலத்தீவுக்கும் தொடர்பு இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மாலத்தீவு மற்றும் இஸ்லாம் மதம்
மாலத்தீவு ஒரு இஸ்லாமிய நாடு. 1965 இல் பிரிட்டனிடம் இருந்து மாலத்தீவு அரசியல் ரீதியாக முற்றிலும் சுதந்திரமடைந்தது. சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மாலத்தீவு ஒரு இஸ்லாமிய குடியரசானது.
சுதந்திரம் பெற்றதில் இருந்து, மாலத்தீவு மக்களின் அரசியலிலும், வாழ்விலும் இஸ்லாம் முக்கியப் பங்காற்றியுள்ளது. 2008 இல் மாலத்தீவில் அரசு மதமாக `இஸ்லாம்’ மாறியது.
மாலத்தீவில் நில உரிமையும் குடியுரிமையும் சன்னி முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மாலத்தீவின் அதிபர் மற்றும் அமைச்சர்கள் சன்னி முஸ்லிம்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசியலமைப்பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு சட்டப்படி, இஸ்லாத்தை விமர்சிப்பது குற்றமாக கருதப்படுகிறது. மாலத்தீவு உலகின் மிகச்சிறிய இஸ்லாமிய நாடு.
அதிபராக பதவியேற்ற பிறகு முகமது முய்சு முதல் வெளிநாட்டுப் பயணமாக துருக்கிக்கு சென்றார். முன்னதாக, மாலத்தீவின் புதிய அதிபரின் முதல் வெளிநாட்டு பயணம் எப்போதும் இந்தியாவாக தான் இருக்கும். ஆனால் முய்சு இந்த பாரம்பரியத்தை உடைத்துள்ளார்.
துருக்கி ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாடு மற்றும் ஒட்டோமான் சுல்தானகத்தின் மரபுகளுடன் தொடர்புடையது. எனவே இந்த பாரம்பரியத்தின் அடிப்படையில், துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் துருக்கியை இஸ்லாமிய நாடுகளின் தலைவராக முன்வைக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு
காஸாவில் நடந்த படுகொலைகள் தொடர்பாக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில், காஸாவில் பாலத்தீன மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு நீதிமன்றம் தற்காலிக தீர்ப்பை வழங்கியது.
அக்டோபர் 7 அன்று, இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பணயக் கைதிகளாக காஸாவிற்கு பிடித்துச் சென்றனர்.
இதற்குப் பிறகு, இஸ்ரேல் காஸாவில் தன் தாக்குதலைத் தொடங்கியது, இதில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












