அதானி, செபி தலைவரை குறி வைக்கும் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் குழுமத்தின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் அறிக்கை வெளியிட்டு அதானி குழுமத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த ஹிண்டன்பர்க் குழுமம் இப்போது மற்றோர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை செபி அமைப்பின் தலைவர் மாதபி புச்-ஐ குறி வைக்கிறது. ஆனால், இதிலும் அதானி குழுமம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை கூறும் குற்றச்சாட்டுகளை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத் தலைவர் மாதபி புச்சும், அவரது கணவரும் மறுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு “பங்குச் சந்தையில் திருகு வேலை செய்து மோசடியில் ஈடுபட்டதாக” அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றம் சாட்டியது.
இம்முறை அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.
மாதாபி புச்-ஐ குறிவைக்கும் ஹிண்டன்பர்க்கின் இந்த அறிக்கைக்கு அதானி குழுமம் பதிலளித்துள்ளது. இந்த அறிக்கை தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறி இந்தக் குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஹிண்டன்பர்க் குழுமம் மற்றும் அதன் வேலைகள் என்ன பற்றிய கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. ஹிண்டன்பர்க் குழுமம் மற்றும் அதன் பின்னணி குறித்தும், கடந்த ஆண்டு வெளியான அறிக்கையால் அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.
அதானியின் வாழ்வைப் புரட்டிப்போட்ட நாள்

பட மூலாதாரம், Getty Images
ஜனவரி 24, 2023. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் கௌதம் அதானியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட நாள் இது. அன்றுதான் அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது.
இந்த அறிக்கையில், அதானி குழுமம் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் முன் 88 கேள்விகள் வைக்கப்பட்டன. ஆனால், இந்த அறிக்கையை அதானி குழுமம் நிராகரித்தது.
இந்த அறிக்கை வெளிவந்ததில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமப் பங்குகள் விலை சரியத் தொடங்கியது. அந்த அறிக்கை வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்தவர் கெளதம் அதானி.
ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கை வந்த 10 நாட்களுக்குள், முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் கூட இவர் பெயர் இல்லை. இது தவிர ரூ.20,000 கோடி மதிப்பிலான எஃப்பிஓ பங்கு வெளியீட்டையும் கெளதம் அதானி ரத்து செய்தார். நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தசந்தித்தது.
ஹிண்டன்பர்க் - பெயர் காரணம்

பட மூலாதாரம், BRITISHPATHE
1937 ஆம் ஆண்டு - ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் ஹிண்டன்பர்க் என்ற ஒரு விண்கலம் இருந்தது.
விண்கலத்தின் பின்புறம் நாஜி சகாப்தத்தை குறிக்கும் ஒரு ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்சியில், பூமியிலிருந்து இந்த விண்கலத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அப்போதுதான் அசாதாரணமான காட்சி ஒன்றைக் கண்டனர்.
ஒரு பெரும் வெடி சத்தத்துடன் வானத்தில் ஹிண்டன்பர்க் விண்கலம் தீப்பிடித்தது. மக்களின் அலறல் சத்தம் கேட்டது. விண்கலம் தரையில் விழுந்தது. 30 வினாடிகளுக்குள் பெரும் அழிவு.
உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிலர் காப்பாற்றப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர்.
எரியும் விண்கலத்தின் புகை வானத்தை சூழ்ந்து, பகலில் இரவை உருவாக்கியது. இப்போது எஞ்சியிருப்பது விண்கலத்தின் எச்சங்கள் மட்டுமே.
இந்த விண்கலத்தில் 16 ஹைட்ரஜன் வாயு பலூன்கள் இருந்தன. விண்கலத்தில் ஏறக்குறைய 100 பேர் கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு முன்பும் ஹைட்ரஜன் பலூன்களால் விபத்துகள் நடந்துள்ளன என்றும், அவற்றிலிருந்து பாடம் கற்றிருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
பங்குச் சந்தை பாடம் கற்றதா?

பட மூலாதாரம், Getty Images
கௌதம் அதானி குறித்த அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையது தான்.
“ஹிண்டன்பர்க் சம்பவத்தின் அடிப்படையில், பங்குச் சந்தையில் ஏற்படும் முறிவுகள் மற்றும் இடையூறுகளை நாங்கள் கண்காணிக்கிறோம். அவற்றை அம்பலப்படுத்தி உண்மையை வெளிக்கொணர்வதே எங்களின் நோக்கம்.
ஹிண்டன்பர்க் விபத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதால், இது போன்ற நிதி விபத்துகள் அல்லது பங்குச் சந்தையில் ஏற்படும் ஆபத்துகள் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கச் செயல்படுகிறோம்” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் அச்சமயத்தில் கூறியிருந்தது.
அதானி மீதான அறிக்கை போன்ற ஓர் அறிக்கை ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் எப்படித் தயார் செய்யப்படுகிறது? இது குறித்த தகவல்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ளன. தனது முறைகளை இந்நிறுவனம் பின்வருமாறு விளக்குகிறது:
- பகுப்பாய்வின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகள் வழங்கப்படுகின்றன
- புலனாய்வு செய்யப்படுகிறது
- பெறப்பட்ட ரகசியத் தகவல்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது
ஹிண்டர்ன்பர்க் தனது நிறுவனம் குறித்துக் கூறுவது என்ன?

பட மூலாதாரம், NURPHOTO
தங்களுக்கு பல தசாப்தங்களாக முதலீட்டு அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் கூறுகிறது.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதன் அறிக்கைகள் மற்றும் பிற வகை நடவடிக்கைகளின் மூலம் முன்னரும் பல நிறுவனங்களின் பங்கு விலைகளை விழச் செய்ததாகத் தனது இணையதளத்தில் கூறுகிறது.
அதானிக்கு முன், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட பெரிய நிறுவனம் டிரக் நிறுவனமான நிகோலா. இந்த விவகாரம் நீதிமன்றத்தை அடைந்தபோது, நிகோலா நிறுவனத்தின் நிறுவனர் குற்றவாளி என தீர்ப்பானது.
ஹிண்டன்பர்க், 2020 ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.
அடுத்த ஆறு மாதங்களில் இந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26 சதவீதத்துக்கும் மேல் சரிவைப் பதிவு செய்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் தனது இணையதளத்தில் செப்டம்பர் 2020 முதலான தனது அறிக்கைகளின் பட்டியலையும் வழங்கியது.
ஹிண்டன்பர்க் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஒரு நிறுவனத்தைப் பற்றி விசாரிக்கிறது:
- கணக்கியலில் முறைகேடுகள்
- முக்கியமான பதவிகளில் 'தகுதியற்ற' நபர்கள்
- வெளிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகள்
- சட்டவிரோத/ நெறிமுறையற்ற வணிகம் அல்லது நிதி அறிக்கையிடல் நடைமுறைகள்
ஹிண்டன்பர்கின் பின்னணியில் யார்?

பட மூலாதாரம், THE WASHINGTON POST/GETTY
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் நேதன் எனப்படும் நெட் ஆண்டர்சன் ஆவார்.
ஆண்டர்சன் இந்த நிறுவனத்தை 2017 இல் நிறுவினார். அவர், அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
ஆண்டர்சன் சர்வதேச வணிகம் பயின்று, ஃபேக்ட்-செட் ரிசர்ச் சிஸ்டம்ஸ் என்ற தரவு நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தில், ஆண்டர்சன் முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களுடன் பணிபுரிந்தார்.
2020 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில், ஆண்டர்சன், "இவர்கள் மேலோட்டமான பகுப்பாய்வு செய்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்." என்றார்.
ஆண்டர்சன் இஸ்ரேலில் சிறிது காலம் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்ததாக, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
ஆண்டர்சனின் லிங்க்ட்இன் சுயவிவரத்தில், "ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரியும் போது, மிகுந்த அழுத்தத்தில் எப்படி வேலை செய்வது என்று கற்றுக்கொண்டேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சுயவிவரத்தில் அவருக்கு 400 மணிநேர மருத்துவ அனுபவம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நேர்காணல்களில், ஆண்டர்சன் அமெரிக்க கணக்காளர் ஹாரி மோர்கோபௌலோஸை தனது முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார்.
ஆண்டர்சனின் முன்மாதிரியான ஹாரி 2008 பெர்னார்ட் மடோஃப் போன்சி திட்டத்தின் ஊழலைப் பற்றி மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
நெட்ஃபிளிக்ஸில் த மான்ஸ்டர் ஆஃப் வால் ஸ்ட்ரீட் என்ற தொடர் வெளியானது. இது இவரைப் பற்றிய கதை தான்.
ஆனால், அதானி விவகாரம் எழுந்த சமயத்தில், இவரது சீடர் நெட் ஆண்டர்சனால், பங்குச் சந்தையில் சலசலப்பு ஏற்பட்டு, அது நேரடியாக கௌதம் அதானியை பாதித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












