நடிகர் நாகார்ஜூனாவின் கட்டடம் இடிக்கப்பட்டது ஏன்? ஹைதராபாத்தில் என்ன நடந்தது?

நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான கட்டடம் இடிப்பு

பட மூலாதாரம், UGC and Akkineni Nagarjuna/Facebook

    • எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) ஹைதராபாத்தில் மடப்பூர் பகுதியில் உள்ள ‘என் கன்வென்ஷன்’ (N Convention Center) மையத்தை இடித்தது.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை ஆறு மணியளவில், ஹைட்ரா முகமை, ஹைதராபாத் பெருநகர வளர்ச்சிக் கழகம்- ஜிஹெச்எம்சி, நீர் வடிகால், நகரத் திட்டமிடல், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ‘என் கன்வென்ஷன்’ மையத்தை அடைந்தனர். ‘என் கன்வென்ஷன்’ மையம் குளத்தில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறி அதிகாரிகள் அதனை இடித்து அகற்றினர்.

இந்த பகுதி ஹைதராபாத் ஷில்பரம் எதிரே உள்ள சாலையில் உள்ளது. ‘என் கன்வென்ஷன்’ மையத்துக்கு சொந்தமான வளாகங்கள், விழாக் கூடம் மற்றும் இதர கட்டமைப்புகளும் இடிக்கப்பட்டன. இந்த பணி மதியம் வரை தொடர்ந்தது.

இதையொட்டி காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மையத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு யாரும் வராதவாறு தடுத்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘என் கன்வென்ஷன்’ மையம் இடிக்கப்பட்டதன் பின்னணி

நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான கட்டடம் இடிப்பு

பட மூலாதாரம், Akkineni Nagarjuna/Facebook

படக்குறிப்பு, நடிகர் நாகார்ஜுனா

செரிலிங்கம்பள்ளி மண்டலம் கானாமேட் வருவாய் துறைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 29.6 ஏக்கர் பரப்பளவில் தம்மிடிகுண்டா குளம் அமைந்துள்ளது.

ஆக்கிரமிப்புகளால் குளத்தின் பரப்பளவு சுருங்கிவிட்டதாக தெலுங்கானா நீர் வடிகால் துறை கூறுகிறது.

இந்த குளத்தை ஒட்டி சர்வே எண் 11/2ல் சுமார் மூன்று ஏக்கர் பட்டா நிலத்தில் ‘என் கன்வென்ஷன்’ கட்டப்பட்டுள்ளது. இங்கு நிகழ்ச்சி வளாகம், அலுவலகம், வைர மண்டபம் உள்ளிட்ட சில கட்டமைப்புகள் உள்ளன.

`என்’ கன்வென்ஷன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, இது N3 என்னும் நிறுவனத்தால் கட்டப்பட்டது.

N3 எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனம் அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் நல்லா ப்ரீதம் ரெட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. இருவரும் கூட்டாக `என்` கன்வென்ஷன் மையத்தை நடத்துகிறார்கள்.

தம்மிடிகுண்டா குளத்தின் எஃப்டிஎல் (முழு நீர்த்தேக்க மட்டம்) மற்றும் இடையக மண்டலத்திற்குள் (buffer zone), நிரந்தரக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ‘என் கன்வென்ஷன்’ நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இந்த சர்ச்சை நீண்ட நாட்களாக நீடித்தது. இதே விவகாரம் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஹைட்ரா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான கட்டடம் இடிப்பு

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ‘என் கன்வென்ஷன்’ இடிக்கப்பட்ட காட்சி

அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி கடிதம்

தெலங்கானா ஒளிப்பதிவு, சாலைகள்-கட்டிடங்கள் துறை அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி ஆகஸ்ட் 21 அன்று ஹைட்ரா கமிஷனர் ஏ.வி.ரங்கநாத்துக்கு கடிதம் எழுதினார்.

"தம்மிடிகுண்டா குளம் எஃப்.டி.எல் மற்றும் பஃபர் மண்டலத்திற்குள் ‘என் கன்வென்ஷன்’ மையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்மிடிகுண்டாவின் கிழக்குப் பகுதியில் ‘என் கன்வென்ஷன்’ கட்டப்பட்டது. இந்த கட்டமைப்பு முழு நீர்த்தேக்க மட்டத்தின் கீழ் வருகிறது. குளத்தின் ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது." என்று அவர் கூறியிருந்தார்.

அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி தன் கடிதத்தில் குளம் மணலால் மூடப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி எஃப்டிஎல் வரைபடம் மற்றும் கூகுள் எர்த் வரைபடத்தை ஹைட்ரா கமிஷனருக்கு அனுப்பினார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஹைட்ரா அதிகாரிகள் சனிக்கிழமை காலை கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ‘என் கன்வென்ஷன்’ மைய அலுவலகம் தவிர மற்ற அனைத்து கட்டடங்களும் இடிக்கப்பட்டன.

எஃப்டிஎல் (FTL), இடையக மண்டலம் என்றால் என்ன?

நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான கட்டடம் இடிப்பு
படக்குறிப்பு, தெலங்கானா ஒளிப்பதிவு, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி ஆகஸ்ட் 21 அன்று ஹைட்ரா கமிஷனர் ஏவி ரங்கநாத்துக்கு கடிதம் எழுதினார்

பொதுவாக ஒரு குளத்திற்கு தண்ணீர் சேமிக்கப்படும் பகுதி அல்லது தண்ணீர் பரவலாக நிற்கும் பகுதி `முழு நீர்த்தேக்க மட்டம்’ (Full Tank Level) எனப்படும். அதே போன்று குளத்தின் அளவைப் பொறுத்து சில மீட்டர்களுக்கு ஒரு இடையக மண்டலம் (buffer zone) அமைந்திருக்கும் .

ஹைதராபாத் நகரத்தில் உள்ள சில குளங்களின் எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலங்களில் பட்டா நிலங்களும் இருக்கும். தம்மிடிகுண்டா குளம் அருகே சில பட்டா நிலங்கள் உள்ளன. ‘என் கன்வென்ஷன்’ மையமும் அத்தகைய நிலத்தில் தான் அமைந்திருந்தது.

இருப்பினும், குத்தகைக்கு விடப்பட்ட நிலமாக இருந்தாலும், நீர் மற்றும் வடிகால் துறை விதிகளின்படி, எப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தில் நிரந்தர கட்டமைப்புகளை கட்டக் கூடாது.

குளம் இருக்கும் பகுதியில், தனியார் அல்லது பட்டா நிலமாக இருந்தாலும், விவசாயம் அல்லது நடவு மற்றும் நாற்றங்கால் அமைக்க மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. எந்த ஒரு கட்டமைப்பையும் நிரந்தரமாக அங்கு எழுப்பக் கூடாது.

எவ்வாறாயினும், தம்மிடிகுண்டா குளம் எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்திற்குள் `என்’ கன்வென்ஷன் என்ற பெயரில் நிரந்தர கட்டுமானங்களை உருவாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஹைட்ரா தற்போது இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த கால சர்ச்சைகள்

‘என் கன்வென்ஷன்’ மையம் தொடர்பான தகராறு பத்து ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

2014-ல் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, குருகுல அறக்கட்டளை நிலங்களில் ஐயப்ப சொசைட்டி கட்டப்பட்டதாகக் கூறி அங்குள்ள சில கட்டிடங்களை அரசு இடித்தது.

அதே நேரத்தில், "ஏரியின் முழு நீர்த்தேக்க பகுதியில் ‘என் கன்வென்ஷன்’ மையத்தின் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றும் புகார்கள் வந்தன.

அதே ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தம்மிடிகுண்டா குளம் சுற்றுவட்டாரத்தில் எச்.எம்.டி.ஏ., நீர் வடிகால் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

‘என் கன்வென்ஷன்’ மையத்தின் சில கட்டமைப்புகள் எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தின் கீழ் வரும் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டனர். இது தொடர்பாக அப்போது எல்லைகள் முடிவு செய்யப்பட்டன.

எச்எம்டிஏ நடத்திய சர்வே நடவடிக்கை மீது ‘என் கன்வென்ஷன்’ மைய நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை அணுகியது. அதன் பிறகு அப்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஹைட்ரா கமிஷனர் ரங்கநாத் கருத்து

ஹைட்ரா கமிஷனர் ஏ.வி.ரங்கநாத் தம்மிடிகுண்டாவில் நடந்த இடிப்பு பணிகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தம்மிடிகுண்டா எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தின் எல்லைகளுக்குள் ‘என் கன்வென்ஷன்’ கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, அவற்றுக்கு அனுமதி இல்லை, என்றார்.

2014 இல், எச்.எம்.டி.ஏ தம்மிடிகுண்டா குளம் தொடர்பாக எஃப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்தை அடையாளம் காணும் பூர்வாங்க அறிவிப்பை வெளியிட்டது. இறுதி அறிவிப்பு 2016ல் வெளியிடப்பட்டது.

"2014 இல் முதற்கட்ட அறிவிப்பு வழங்கப்பட்ட பிறகு, `என்’ கன்வென்ஷன் மைய நிர்வாகம் தெலங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியது. எஃப்டிஎல் நிர்ணயம் என்பது சட்டப்படி பின்பற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. அதன்படி, மீண்டும் ஒருமுறை அந்த ‘என் கன்வென்ஷன்’ மைய நிர்வாகத்தின் முன்னிலையில் குளத்தின் முழு நீர்த்தேக்க மட்டப் பகுதி அளவீடு நடத்தப்பட்டது. அந்த நிர்வாகத்திடம் ஆய்வு அறிக்கையும் கொடுக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், `என்’ கன்வென்ஷன் மையம் இந்த ஆய்வு அறிக்கை மீது மியாபூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகியது. வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் எங்கும் தடை ஆணை (ஸ்டே ஆர்டர்) கொடுக்கப்படவில்லை" என்றார் ரங்கநாத்.

"‘என் கன்வென்ஷன்’ நிர்வாகம் குளத்தின் எப்டிஎல் மற்றும் இடையக மண்டலத்திற்குள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், அங்கீகாரமற்ற கட்டுமானங்களை மேற்கொள்வதன் மூலமும் அரசு சட்டத்திட்டங்களை மீறப்பட்டுள்ளன." என்றார்.

"எஃப்டிஎல்லின் கீழ் 1.12 ஏக்கரிலும், இடையக மண்டலத்தில் 2.18 ஏக்கரிலும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) அனுமதி வழங்கவில்லை. அதன் பிறகு, கட்டிட ஒழுங்குமுறை திட்டம்-பிஆர்எஸ் கீழ் `என்’ கன்வென்ஷன் நிர்வாகம் விண்ணப்பித்தது, ஆனால் அதிகாரிகள் அதை நிராகரித்தனர்," என்று ரங்கநாத் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான கட்டடம் இடிப்பு

பட மூலாதாரம், UGC

நாகார்ஜுனா என்ன சொன்னார்?

"‘என் கன்வென்ஷன்’ மையத்தை இடிப்பது சட்டவிரோதமானது. இது வருத்தமளிக்கிறது." என்று திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"தடை உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கு மாறாக,N-Convention தொடர்பான கட்டுமானங்களை இடிப்பது வேதனை அளிக்கிறது. இது ஒரு பட்டா நிலம். குளத்தின் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை. ஒரு தனியார் நிலத்தில் கட்டப்பட்ட கட்டடம். இடிப்பதற்கு முன் வழங்கப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதை மீறி கட்டிடத்தை இடித்துள்ளனர். இது சட்டத்திற்கு எதிரானது" என்று நாகார்ஜுனா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு முன்னதாக எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது இப்படி செய்வது முறையல்ல. சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாக, நீதிமன்றம் எனக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தால், நான் அதை ஏற்றிருப்பேன்”என்று நாகார்ஜுனா ட்வீட் செய்துள்ளார்.

இடிக்கும் பணிகளுக்கு தடை ஆணை

ஒருபுறம், ‘என் கன்வென்ஷன்’ மையத்தில் கட்டடம் இடிக்கப்பட்டு வந்த நிலையில் மறுபுறம், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நாகார்ஜுனா சார்பில் ஹவுஸ் மோஷன் (house motion petition) மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்த நீதிபதி வினோத்குமார் அமர்வு, இடிக்கும் பணிகளை நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இருப்பினும், இந்த உத்தரவுகள் வருவதற்குள் `என்’ கன்வென்ஷன் மையத்தில் இருந்த கட்டுமானங்கள் ஹைட்ரா அதிகாரிகளால் இடிக்கப்பட்டுவிட்டன.

நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான கட்டடம் இடிப்பு

தம்மிடிகுண்டா கட்டடங்கள் இடிப்பு

ஹைட்ரா அதிகாரிகள் தம்மிடிகுண்டாவின் கிழக்குப் பகுதியில் உள்ள என் மாநாட்டு மையத்தின் மேற்குப் பகுதியில் உள்ள வேறு சில கட்டுமானங்களையும் இடித்துத் தள்ளினார்கள்.

அந்த பகுதியில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டிருந்தன. வேறு சில தனியார் கட்டடங்களும் இருந்தன. அவை அத்தனையும் இடிக்கப்பட்டன.

அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?

`என்’ கன்வென்ஷன் மையத்தை இடித்தது குறித்து தெலங்கானா துணை முதல்வர் பாட்டி விக்ரமார்கா செய்தியாளர்களிடம் பேசினார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை என்றும், குளங்களை பாதுகாப்பதே அரசின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

“அவை முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டன என்று யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் எனக்கு தெரிந்த வரையில் அரசு செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் நோட்டீஸ் கொடுத்து வருகிறார்கள். குளங்களில் நேரடியாக கட்டடங்கள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

"2014ஆம் ஆண்டுக்கு முன் எத்தனை குளங்கள் இருந்தன, 2014ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி மூலம் வரைபடத்தை எடுத்து வருகிறோம், அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்" என்றார்.

மறுபுறம், "குளங்களை பாதுகாக்க அரசு ஹைட்ரா முகமை அமைத்துள்ளது என்றால், கடந்த பத்து ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்யப்பட்டு இடிக்கப் பட வேண்டும். அரசு நேர்மையாக செயல்படுகிறது எனில் குளங்களின் பாதுகாப்பு மண்டலங்களில் முந்தைய கணக்கெடுப்பின்படி ஏற்கனவே இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருந்தால் இடித்து தள்ளப்பட வேண்டும்' என்றார் ரகுநந்தன ராவ்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)