You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர சாதிய பாகுபாடு - பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம்
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இன்றும் சாதிய பாகுபாடுகள் நிகழ்ந்துவருவதும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் சாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளையே செய்து வருகின்றனர் எனவும் பிபிசி சிங்கள சேவையின் களச் செய்தி கூறுகிறது.
இலங்கையின் வட மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் இந்து ஆலயங்களுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவானது, 1956ம் ஆண்டு நீக்கப்பட்ட போதிலும், மத சுதந்திரம் இன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அத்துடன், குடியிருக்கவோ, விவசாயம் செய்யவோ விருப்பம்போல் நிலத்தை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும் அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை.
2022ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் மூலம், விவசாயத்திற்காக நீரைப் பெறுவதில் கூட பாகுபாடு காட்டப்படுவது தெரியவந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியொருவர், வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது பெற்றுக்கொண்ட தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வரும் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு அரசு அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆதிக்க சாதி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை காட்டிலும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் மிக மோசமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி குழந்தைகள் கல்விக்கு தேவையான சீருடை போன்ற அடிப்படை வசதிகளற்று உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குழந்தைகளை ஆசிரியர்களும் ஒதுக்குகின்றனர். சில பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குழந்தைகளுக்கு அரசு அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இருந்ததையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதேபோல ஆதிக்க சாதி பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியை காட்டிலும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் கல்வி தரம் சிறப்பானதாக இல்லை.
மற்றொரு பிரச்னை ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டவர்கள் சந்திக்கும் வன்முறைகள். பல சமயங்களில் இந்த குற்றங்களுக்கான நீதி மிக தாமதமாகவே வழங்கப்படுகின்றன
சமூக பாகுபாட்டு சட்டமூலமொன்று 1957ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போதிலும், அந்த சட்டம் திறன்பட அமலாக்கப்படுவதில்லை என யாழ்ப்பாணம் சிவில் சமூக கேந்திர நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவிக்கின்றார்.
'சட்டம் இருந்தும் பலனில்லை'
''1957ம் ஆண்டு சமூக பாகுபாட்டு சட்டம் என்ற சாதிக்கு எதிரான சட்டமூலமொன்று காணப்படுகின்றது. அவ்வாறான சட்டம் 60 வருடங்களாக காணப்படுகின்ற போதிலும், அந்த சட்டம் வடக்கு மாகாணத்தில் அமலாகவில்லை. 2021ம் ஆண்டு வட்டுக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட சாதி பிரச்னை தொடர்பில் போலீஸ் அறிக்கையில் தெளிவாக சாதி பிரச்னை என கூறப்பட்டுள்ளது. எனினும், அந்த பிரச்னையை கூட அந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை," என அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கோவில்களுக்கு தாம் தற்போது அனுமதிக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட சாதி என்ற அடிப்படையில் ஆதிக்கசாதியை சேர்ந்தவர்கள் பாகுபாடு காண்பித்து வருவதாக யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த கதிர்காமநாதன் வசந்தா தேவி தெரிவிக்கின்றார்.
''சிவன் கோவில் இருக்கின்றது. அங்கு போவதற்கு முடியும். ஆனால், எங்களோட சமூகத்துடன் அவர்கள் ஒன்றாக நின்றதில்லை. சமமான உரிமைகள் வழங்கப்படுவதில்லை. அன்னதானம் என்றால், எங்களோட சமூகம் மரக்கறி வெட்டிக் கொடுக்கவோ அல்லது வேலைகள் செய்யவோ கூடாது. சாப்பாட்டிற்கு மாத்திரம் அமர வைத்து சாப்பாடு கொடுப்பார்களே தவிர, மற்றப்படி எதுவும் நடக்காது. நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கோவிலுக்குள் விடுகின்றார்கள். எல்லாம் சமமாக வந்துட்டது. பிரச்னை இல்லை என்று. ஆனால் பிரச்னை நிறைய இருக்கின்றது. இனி தான் பிரச்னை கூட. எங்கட சமூகத்தை மதித்து, இந்த வேலையை செய்யுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். சாமியை தூக்குவதற்கு கூட எங்கட மக்களுக்கு உரிமை இல்லை." என கதிர்காமநாதன் வசந்தா தேவி குறிப்பிடுகின்றார்.
சாதிய பாகுபாடால் மதம் மாறும் மக்கள்
சாதி அடிப்படையில் மக்களை கோவில்களுக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கின்றமையினால், அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விபுலானந்தா சுவாமி கூறுகின்றார்.
''பல தசாப்த காலமாக எமது மக்களை கீழ்தரமாக நடத்தி, அவர்களை எமது சமய நிகழ்வுகளுக்கு கூட அனுமதிப்பதில்லை. எமது மக்கள் சிறிய சிறிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த காரணத்தினால் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறுகின்றார்கள்" என்கின்றார் விபுலானந்தா சுவாமி.
ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களே கள்ளு இறக்குதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருவதாக அந்த தொழிலில் ஈடுபடும் காங்கேசன்துறையைச் சேர்ந்த சுந்தரம் மெத்தானந்தம் குறிப்பிடுகின்றார்.
தங்களை ஒதுக்கி வைத்து, அவமானப்படுத்திய சந்தர்ப்பங்களும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.
தங்களை அழைத்து, உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களை கணக்கெடுக்க மாட்டார்கள் எனவும் சுந்தரம் மெத்தானந்தம் தெரிவிக்கின்றார்.
தமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும், அவர்களுக்கான மரியாதை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என திருநகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராசநாயகம் தெரிவிக்கின்றார்.
''இன்றைக்கும் திருநகர் மக்களை குறைத்து கதைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் இல்லாவிட்டால், மற்றவர்கள் வாழ முடியாது. அங்கு சூழலை துப்பறவு செய்வது இந்த ஊர் மக்கள் தான். அதை கொச்சைப்படுத்துவதற்கு யாராலும் முடியாது. அவரை (கடவுளை) தவிர. அது கூடாது. எந்த இடத்திற்கு சென்றாலும், எங்களுக்கான மரியாதையை கட்டாயம் தர வேண்டும்," என அந்தோணி ராசநாயகம் குறிப்பிடுகின்றார்.
மறுப்பு தெரிவிக்கும் அரசு அதிகாரிகள்
ஒடுக்கப்பட்ட சாதி என கூறப்படும் தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசியல்வாதிகளும், அரச நிர்வாகிகளும் மறுக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் அவ்வாறான பிரச்னைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அவ்வாறான பிரச்னை கிடையாது என அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில் அமைசசருமான டக்ளஸ் தேவானந்தாவிடம், பிபிசி வினவியது.
தாம் போராட்டங்களில் ஈடுபட்ட காலப் பகுதியில் அவ்வாறான பிரச்னைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த பிரச்னை கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் ஷெலி உபுல் குமாரவிடம் பதிலளித்தார்.
ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் அமைச்சர் நிராகரித்தார்.
சாதிய பாகுபாடு என்பது புதியதொரு பிரச்னையாக உள்ளது எனவும் அதை கேட்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர், இந்த' புதிய பிரச்னை' குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சாதிய பாகுபாடால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அதை வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர்.
சாதி பிரச்னை தொடர்பில் கருத்து வெளியிடும் பட்சத்தில், தாமும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என ஏனையோர் அடையாளம் கண்டுக்கொள்வார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் கருத்து தெரிவிக்க முன்வருவதில்லை.
வடக்கில் சாதிவாதம் மற்றும் வறுமை ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் உள்ளது.
விடுதலைப் புலிகளில் இருந்த உறுப்பினர்களில் பலர், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பது இரகசியமல்ல.
அதிகாரிகள் நிராகரித்த போதிலும், யாழ்ப்பாணத்தில் சாதி பிரச்னையை எதிர்நோக்கியுள்ள இந்த மக்கள் எப்போது அந்த பிரச்னையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்? என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.
செய்தியாளர் - ஷெலி உபுல் குமார, பிபிசி சிங்கள சேவை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்