நேபாள விமான விபத்து- 19 பேர் பயணித்த விமானத்தில் ஒரே ஒரு விமானி உயிர் தப்பியது எப்படி?

பட மூலாதாரம், Nepali Police
- எழுதியவர், டாம் பென்னட் மற்றும் அசோக் தஹல்
- பதவி, பிபிசி செய்தியாளர்கள்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில், ஒரு விமானி உயிர் தப்பியது எப்படி என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விமானத்தின் மற்ற பகுதிகள் தீப்பிடித்து நொறுங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு ஒரு சரக்கு கண்டெய்னரில் மோதி விமானி அமர்ந்திருக்கும் 'காக்பிட்' பகுதி தனியாக வெட்டப்பட்டதால் விமானி உயிர்பிழைத்தார்.
காத்மாண்டு விமான நிலையத்தில் பதினெட்டு பேரின் உயிரைப் பறித்த கோர விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர், கேப்டன் மனிஷ் ரத்னா ஷக்யா.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி வருவதையும், நன்றாக பேசுவதாகவும், குடும்ப உறுப்பினர்களிடம் தான் நலமாக இருப்பதாக சொல்லும் அளவுக்கு உடல் நலம் முன்னேறி இருப்பதாகவும் பிபிசி நேபாள சேவை உறுதிப்படுத்தி உள்ளது.
பொதுவாக விமானத்தில் விமானிகள் அமரும் பகுதியை 'ஃப்ளைட் டெக்’ அல்லது ’காக்பிட்’ (cockpit) என்று சொல்வார்கள். விபத்து நடந்த போது விமானத்தின் காக்பிட் பகுதி ஒரு கன்டெய்னரில் மோதி விமானத்தில் இருந்து தனியாக பிரிந்தது
கன்டெய்னரில் மோதி இருந்த விமானத்தின் காக்பிட் பகுதியை தீப்பிழம்புகள் நெருங்கி கொண்டிருந்த போது, சரியான நேரத்தில் மீட்புக்குழுவினர் விமானியை காப்பாற்றிவிட்டனர். இல்லையெனில் காக்பிட் பகுதியும் முழுமையாக தீக்கிரையாகி இருக்கும். அதற்குள் விமானி காயங்களுடன் மீட்கப்பட்டார் என்று மீட்புக் குழுவினர் பிபிசியிடன் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முகத்தில் ரத்தம் வழிய மீட்கப்பட்ட விமானி
“விமானி சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டார். நாங்கள் ஜன்னலை உடைத்து உடனடியாக அவரை வெளியே இழுத்தோம்” என்று நேபாள காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் தம்பர் பிஷ்வகர்மா கூறினார்.
"அவர் மீட்கப்பட்டபோது அவரது முகம் முழுவதும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது, ஆனால் அவர் பேசக்கூடிய நிலையில் இருந்தார். சற்றும் தாமதிக்காமல் நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்," என்று அவர் விவரித்தார்.
நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பத்ரி பாண்டே, விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையின் கிழக்குப் பகுதியில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு திடீரென வலது புறம் திரும்பியதாக கூறினார்
சிசிடிவி காட்சிகள் விமான நிலையத்தின் ஒரு பகுதி முழுவதும் தீப்பிழம்பில் எரிந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
"விமானம் விமான நிலையத்தின் விளிம்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில் மோதியது. பின்னர், அது நிலைத்தடுமாறி கீழே விழுந்தது," என்று பாண்டே விளக்கினார்.
"எவ்வாறாயினும், விமானத்தின் காக்பிட் பகுதி மட்டும் கன்டெய்னருக்குள் சிக்கிக்கொண்டது. அதனால்தான் கேப்டன் உயிர் பிழைத்தார்." என்றார்.

நேபாள ராணுவம் வெளியிட்ட அறிக்கை
“விமானத்தின் மற்ற பகுதி அருகில் இருந்த மண்மேட்டில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் காக்பிட் பகுதியை தவிர விமானத்தின் அனைத்து பாகங்களும் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது" என்று பாண்டே விவரித்தார்.
நேபாள ராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, ''விமானி விபத்து நடந்த ஐந்து நிமிடங்களில் மீட்கப்பட்டார். மிகவும் பதற்றத்தில் இருந்தார். ஆனால் சுயநினைவை இழக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ராணுவ ஆம்புலன்ஸ் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் மீனா தாபா கூறுகையில், அவருக்கு தலை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
"அவரது உடலின் ஏற்பட்டிருந்த அதிகபடியான காயங்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். தற்போது அவர் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்" என்று தாபா கூறினார்.
புதன்கிழமை மாலை, நேபாள பிரதமர் கேபி சர்மா மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு விமானியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட ஆய்வின் விமானம் தவறான திசையில் பறந்தது தெரியவந்துள்ளதாக திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
"விமானம் புறப்பட்டவுடன், அது வலதுபுறம் திரும்பியது, ஆனால், இடது புறம் திரும்பி இருக்க வேண்டும்," என்று நிராவ்லா கூறினார்.
நேபாள் மீதான விமர்சனம்

இதற்கு முன்னர் நடந்த விமான விபத்துக்களால் நேபாளம் மோசமான வான் பாதுகாப்புக்காக பலமுறை விமர்சிக்கப்பட்டது.
ஜனவரி 2023 இல், எட்டி ஏர்லைன்ஸ் விபத்தில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர், பின்னர் அதன் விமானிகள் தவறுதலாக மின்சாரத்தை துண்டித்ததாகக் கூறப்பட்டது.
நேபாளத்தில் 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டு விமான நிலையத்தை நெருங்கும் போது விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 167 பேரும் கொல்லப்பட்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












