'தலைக்கு மேல் ஏவுகணைகள், ட்ரோன்கள்'- இரான் தாக்குதலால் மாலுமிகளின் நிலை எப்படி இருக்கிறது?

 தாய்லாந்து சரக்குக் கப்பல்

பட மூலாதாரம், Royal Thai Navy

படக்குறிப்பு, மார்ச் 11 அன்று ஓமனுக்கு வடக்கே 11 கடல் மைல் தொலைவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தாய்லாந்து சரக்குக் கப்பல் தீப்பிடித்தது (கோப்புப் படம்)
    • எழுதியவர், முகமது ஜுபைர் கான்
    • பதவி, பிபிசி செய்திகள் உருது
    • எழுதியவர், ஏய் தூ சான்
    • பதவி, பிபிசி நியூஸ் பர்மிஸ்
    • எழுதியவர், ஹியோஜங் கிம்
    • பதவி, பிபிசி நியூஸ் கொரியன்
    • எழுதியவர், ஆண்ட்ரூ வெப் & கிரேஸ் த்சோய்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக இரான் மிரட்டல் விடுத்ததை அடுத்து, வளைகுடா பகுதியில் எண்ணெய் டாங்கர்கள் மற்றும் சரக்குக் கப்பல்களில் சிக்கித் தவிக்கும் பல மாலுமிகளுக்கு ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் அன்றாடக் காட்சிகளாக மாறிவிட்டன.

சமீப நாட்களாக வளைகுடா பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக இரான் அச்சுறுத்தியுள்ளது.

இந்த நீரிணை எரிசக்தி விநியோகம் மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கான மிக முக்கியமான பாதையாகும். திடீரென வெடித்த இந்தப் போர், பல கப்பல்களையும் அவற்றின் மாலுமிகளையும் கடலில் தவிக்க விட்டுள்ளது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளிலும் வான்வெளியிலும் தாக்குதல்கள் நடப்பதைக் கவனித்து வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்தப் பகுதியை விட்டு வெளியேற முடியாமல் நிற்கும் எண்ணெய் டாங்கர் ஒன்றில் இருக்கும் பாகிஸ்தானிய மாலுமியான அமீர் கூறுகையில், "இரானிய ட்ரோன்களும் ஏவுகணைகளும் குறைந்த உயரத்தில் பறப்பதை நான் பார்த்திருக்கிறேன். போர் விமானங்களின் சத்தமும் எனக்குக் கேட்கிறது, ஆனால் அவை எந்த நாட்டுக்குச் சொந்தமானவை என்பதை எங்களால் அடையாளம் காண முடியவில்லை," என்கிறார்.

ஏதாவது ஒரு ட்ரோனோ அல்லது ஏவுகணையோ நடுவழியில் சுட்டு வீழ்த்தப்பட்டு, அது தனது கப்பல் மீது விழுந்துவிடுமோ என்ற எண்ணம் அவரை மிகவும் பயமுறுத்துகிறது.

மியான்மரைச் சேர்ந்த மாலுமியான ஹெய்ன், ஒவ்வொரு நாளும் மோதல்களைக் காண்கிறார்.

"இன்று காலை கூட, நாங்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது இரண்டு போர் விமானங்கள் ஒன்றையொன்று நோக்கிச் சுட்டன. இதிலிருந்து தப்பிக்க கப்பலில் குறிப்பிட்ட ஒளிந்து கொள்ளும் இடங்கள் எதுவும் இல்லை, நாங்கள் உடனடியாக உள்ளே ஓட வேண்டியிருந்தது," என்று அவர் கூறுகிறார்.

மாலுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பைக் கருதி, அமீர் மற்றும் ஹெய்ன் என பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

மியான்மரைச் சேர்ந்த மாலுமியான ஹெய்ன், ஒவ்வொரு நாளும் மோதல்களைக் காண்கிறார். "இன்று காலை கூட, நாங்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது இரண்டு போர் விமானங்கள் ஒன்றையொன்று நோக்கிச் சுட்டன. இதிலிருந்து தப்பிக்க கப்பலில் குறிப்பிட்ட ஒளிந்து கொள்ளும் இடங்கள் எதுவும் இல்லை, நாங்கள் உடனடியாக உள்ளே ஓட வேண்டியிருந்தது," என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Sailor provided to BBC News

படக்குறிப்பு, ஒரு மாலுமி அனுப்பிய இந்தப் புகைப்படம் இரானிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்து எரிவதைக் காட்டுகிறது.

மத்திய கிழக்கில் கப்பல்களில் எத்தனை மாலுமிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான துல்லியமான புள்ளிவிவரங்களைப் பெறுவது கடினம் என்றாலும், சுமார் 20,000 பேர் இருக்கலாம் என்று வங்கதேச மெர்ச்சண்ட் மரைன் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் அனம் சவுத்ரி மதிப்பிடுகிறார்.

சிலர் கடலிலும், சிலர் துறைமுகங்களிலும் சிக்கியுள்ளனர். ஆனால், இதில் எது அதிக ஆபத்தான நிலை என்பதை மதிப்பிடுவது கடினம் என்று அவர் கூறுகிறார்.

"துறைமுகத்திற்குள் இருப்பது பாதுகாப்பானது என்று மக்கள் நினைக்கலாம், ஆனால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போது குண்டுவீச்சுக்கு உள்ளான கப்பல்களும் உண்டு," என்று அவர் விளக்குகிறார்.

மத்திய கிழக்கில் கப்பல்களில் எத்தனை மாலுமிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான துல்லியமான புள்ளிவிவரங்களைப் பெறுவது கடினம் என்றாலும், சுமார் 20,000 பேர் இருக்கலாம் என்று வங்கதேச மெர்ச்சண்ட் மரைன் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் அனம் சவுத்ரி மதிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Sailor provided to BBC News

படக்குறிப்பு, ஒரு மாலுமி வழங்கிய இந்தப் படம் தெற்கு இரானில் புகை எழுவதாகக் காட்டுகிறது.

இதுவரை நடந்த போரில் குறைந்தது ஏழு கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக அவரது அமைப்பு கண்டறிந்துள்ளது.

மார்ச் 1 அன்று, பலாவ் குடியரசில் பதிவு செய்யப்பட்ட 'ஸ்கைலார்க்' என்ற எண்ணெய் டாங்கர் கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் கொல்லப்பட்டதாக அவர் கூறுகிறார்.

இந்தத் தாக்குதலில் தப்பிய மாலுமிகள் "அதிர்ச்சியில்" உறைந்துள்ளதாக கேப்டன் சவுத்ரி தெரிவித்தார். தாக்குதலின் போது இன்ஜின் அறையில் தீ பிடித்ததால், பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

மற்ற மாலுமிகளும் இதையே ஆமோதிக்கின்றனர்.

எண்ணெய் டாங்கர் கப்பல்களை இயக்கும் கேப்டன் எம். மன்சூர் சயீத் பிபிசி நியூஸிடம் பேசுகையில், தாக்குதலைத் தவிர்ப்பதைப் பொறுத்தவரை துறைமுகத்தில் இருப்பதற்கும் கடலில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தான் நம்புவதாகக் கூறினார்.

"அவர்கள் எனது கப்பலைக் குறிவைக்க விரும்பினால், நிச்சயம் குறிவைப்பார்கள்," என்கிறார் மன்சூர் சயீத்.

ஆனால், பொதுவாகப் பெரிய கப்பல்கள் கடற்கரையிலிருந்து தொலைவில் இருப்பது பாதுகாப்பானதாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

"கடுமையான வானிலை நிலவும் போது நாங்கள் எப்போதும் திறந்த வெளிக்கடலை நோக்கியே செல்வோம். அங்குதான் கப்பலைத் தடையின்றி இயக்கத் தேவையான ஆழமும் நீரும் இருக்கும். துறைமுகங்களிலும் குறுகிய நீர்நிலைகளிலும், வானிலை மாற்றங்களால் கப்பல் தரை தட்டவோ அல்லது சுவர்களில் மோதவோ வாய்ப்புள்ளது," என்கிறார் மன்சூர் சயீத்.

தகவல்களைப் பெறுவதில் சிரமங்கள்

இந்த அபாயகரமான சூழல், மாலுமிகளின் குடும்பத்தினரை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இரான் அதிகாரிகள் அங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு இணையம் மற்றும் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துள்ளதால், மாலுமிகள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலைப் பெறுவது அவர்களது குடும்பத்தினருக்கு கடினமாக உள்ளது.

அவ்வப்போது இணைப்புகள் கிடைத்தாலும், அது எப்போது கிடைக்கும் என்று தெரியாததோடு, மிகக் குறுகிய காலத்திற்கே நீடிக்கிறது.

அலி அப்பாஸின் மகன், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஓர் இரானியத் துறைமுகத்தில் உள்ள கப்பலில் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தனது மகனுடன் பேசியபோது, அவர் ஒரு ஏவுகணைத் தாக்குதல் பற்றித் தெரிவித்தார்.

அதில் அவரது மகன் தப்பினார், ஆனால் ஓர் இந்திய மாலுமி காயமடைந்தார்.

"இதை நான் எனது மனைவியிடமிருந்தும் மருமகளிடமிருந்தும் மறைத்துவிட்டேன்," என்று அலி அப்பாஸ் கண்ணீருடன் கூறுகிறார்.

செவ்வாய்க்கிழமை இரவு, அந்தத் துறைமுகத்தின் மீது மீண்டும் ஒரு கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பிறகு அலியால் தனது மகனிடம் பேச முடியவில்லை.

"கடவுள் புண்ணியத்தில் எனக்கு யாராவது உதவுங்கள்," என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி கூறுகிறார்.

தனது மகன் இன்னும் உயிருடனும் நலமுடனும் இருப்பார் என்றும், தகவல் தொடர்பு சாதனம் பழுதடைந்ததுதான் பேசுவதற்குத் தடையாக இருக்கும் என்றும் அலி நம்புகிறார்.

செயற்கைக்கோள் வழிசெலுத்தல் முறையில் உள்ள குழப்பங்கள்

தென் கொரியா மற்றும் மியான்மரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ஒரு கப்பலுக்கு சியோ-ஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கேப்டனாக உள்ளார்.

செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்புமுறை துண்டிக்கப்படுவதால் கூடுதல் அபாயங்கள் ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.

"போர் தொடங்கியதிலிருந்து, ஜிபிஎஸ் குறுக்கீடுகள் அவ்வப்போது ஏற்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில நாட்களில் இது மிகவும் மோசமாகியுள்ளது," என்று சியோ-ஜுன் கூறுகிறார்.

அவர்களது கப்பல் துபைக்குள் நுழைந்தபோது, மாலுமிகள் ஜிபிஎஸ் வசதி இல்லாமலேயே கப்பலைச் செலுத்த வேண்டியிருந்தது.

மேலும், "அதை ஒரு கொரியப் பழமொழி 'ஒரு பார்வையற்றவர் கதவு கைப்பிடியைத் தடவித் தேடுவதைப் போன்றது' என்று விவரிக்கிறது." என அவர் குறிப்பிடுகிறார்.

அவர்களது கப்பல் துபாய்க்குள் நுழைந்தபோது, மாலுமிகள் ஜிபிஎஸ் வசதி இல்லாமலேயே கப்பலைச் செலுத்த வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மார்ச் 9 அன்று ஓமனின் மஸ்கட்டில் டாங்கர்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன (கோப்புப் படம்).

குறைவாக உள்ள பொருட்கள்

தங்கள் பாதுகாப்பைப் பற்றிய கவலை ஒருபுறமிருக்க, தண்ணீர் மற்றும் உணவு விரைவில் தீர்ந்துவிடும் என்று பல மாலுமிகள் அஞ்சுகின்றனர்.

சியோ-ஜுனின் கப்பலில் 15 நாட்களுக்குத் தேவையான புதிய உணவுகள் உள்ளன. ஆனால் குடிநீர் ஒரு கவலையாக மாறியுள்ளது.

"கடல்நீரை நன்னீராக்குவதன் மூலம் கப்பலில் நன்னீரை உற்பத்தி செய்ய முடியும்.ஆனால் நாங்கள் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் இருந்தால் அது கடினமாகிவிடும்," என்று அவர் கூறுகிறார்.

"கப்பலில் தேவையான பொருட்களை ஏற்றி ஏற்கெனவே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன," என்று பாகிஸ்தானிய மாலுமி மசூத் கூறுகிறார்.

போருக்கு முன்பு, தனது கப்பலில் பஃபே முறை உணவு வழங்கப்பட்டதாகவும், பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் முட்டை போன்ற புதிய உணவுகளையும் தண்ணீரையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஹெய்ன் குறிப்பிட்டார்.

ஆனால் இப்போது ஹெய்னின் கப்பலில் பங்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு நாளொன்றுக்கு நான்கு சிறிய இறைச்சித் துண்டுகள் மற்றும் ஒரு கிண்ணம் வறுத்த காய்கறிகள் மட்டுமே உணவாக வழங்கப்படுகின்றன. அவர்களின் இருப்பு ஒரு மாதத்திற்கு மட்டுமே வரும், மேலும் கப்பலின் நன்னீர் உற்பத்தி இயந்திரங்களும் இயங்கவில்லை.

"இங்கு எங்கள் வாழ்க்கை மிகவும் மோசமானதாக உள்ளது. எங்களிடம் மிகக் குறைந்த எரிபொருள் மற்றும் உணவு தான் உள்ளது," என்கிறார் மற்றொரு பாகிஸ்தானிய மாலுமியான ஜீஷன்.

"இந்தச் சூழலில் யாராலும் மகிழ்ச்சியாகவோ அல்லது நிம்மதியாகவோ இருக்க முடியாது" என்று கூறும் அமீர், "அன்றாட வழக்கமான வேலைகளில் மும்முரமாக இருக்கிறோம். ஒத்திகைகள், பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் பயிற்சிகளை மேற்கொள்கிறோம்."

அந்தக் கப்பலில் மூத்த பொறியாளராகப் பணிபுரியும் ஹெய்னும் இதை ஆமோதிக்கிறார்.

"நான் என்னை நம்பிக்கையிழக்க அனுமதிப்பதில்லை, ஏனென்றால் மற்ற 20 மியான்மர் பணியாளர்களுக்கு நான் பொறுப்பாளராக இருக்கிறேன்," என்கிறார் ஹெய்ன்.

சூழல் இன்னும் மோசமடைந்தால் தப்பிப்பதற்கான ஒரு அவசரத் திட்டத்தையும் அவர் தயார் செய்துள்ளார்.

"ஏதாவது நடந்தால் எப்படி ஓட வேண்டும், எங்கிருந்து குதிக்க வேண்டும் மற்றும் எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று எனது குழுவிடம் கூறியுள்ளேன்," என்றும் ஹெய்ன் குறிப்பிட்டார்.

சூழல் இன்னும் மோசமடைந்தால் தப்பிப்பதற்கான ஒரு அவசரத் திட்டத்தையும் அவர் தயார் செய்துள்ளார். "ஏதாவது நடந்தால் எப்படி ஓட வேண்டும், எங்கிருந்து குதிக்க வேண்டும் மற்றும் எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்று எனது குழுவிடம் கூறியுள்ளேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Sailor provided to BBC News

படக்குறிப்பு, ஒரு மாலுமி அனுப்பிய மற்றொரு புகைப்படம் மார்ச் மாத தொடக்கத்தில் இரானிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தீப்பிடித்து எரிவதைக் காட்டுகிறது.

காப்பீட்டு வரம்புகள்

கப்பல்கள் பாதுகாப்பான துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, மாலுமிகள் நிலத்தை அடைந்தாலும் கூட, அவர்கள் வீட்டிற்குச் செல்லவோ அல்லது அந்தப் பகுதியை விட்டு வெளியேறவோ எளிதான வழி இல்லாமல் போகலாம்.

கப்பலில் சிக்கியிருக்கும் தனது மகனைப் போல, பல மாலுமிகள் "வெளியேற அனுமதிக்கப்படவில்லை" என்று ஹம்ஸா கூறுகிறார். ஏனெனில், அவர்களின் கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்டுகள்) அந்தந்த நிறுவனங்களிடம் உள்ளன.

அதே நேரத்தில், பயந்துபோய் தங்கள் ஒப்பந்தக் காலத்தை முடிக்காமல் கப்பலை விட்டு வெளியேறும் மாலுமிகள், எதிர்காலத்தில் வேலை தேடுவதில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். ஏனெனில் கப்பல் நிறுவனங்கள் அவர்களைக் கருப்புப் பட்டியலில் வைக்க வாய்ப்புள்ளது.

நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நல்லதே நடக்கும் என்று நம்பி, அனைத்து மாலுமிகளின் பாதுகாப்பிற்காகவும் என்னால் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடிகிறது என்கிறார் அமீர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், கப்பல் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க வற்புறுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

நிதி நெருக்கடிகள் பாதுகாப்பை மீறக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார். ஏதேனும் ஒரு கப்பல் ட்ரோன் அல்லது ஏவுகணையால் தாக்கப்பட்டால், அதற்கான விலையாக மாலுமிகள் தான் உயிரை இழக்க நேரிடும்.

ஆனால் சரக்குகள் மற்றும் கப்பல்களுக்குக் காப்பீடு மூலம் இழப்பீடு பெற்றுவிடலாம் என்று கூறும் அவர், "மனித உயிரை எந்தக் காப்பீட்டாலும் ஈடுசெய்ய முடியாது," என்கிறார்.

மேலும், இந்தப் போர் கடல்சார் வணிகத் துறையை கணிசமாக மாற்றும் என்று அவர் நம்புகிறார்.

"இந்தப் போரின் பாணியும் நோக்கமும் கடந்த சில ஆண்டுகளில் நாம் கண்டதை விட மிகவும் வித்தியாசமானது. இந்தப் போர் பாரசீக வளைகுடா வர்த்தகத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தங்களுக்குச் சம்பந்தமில்லாத நிகழ்வுகளில் மாலுமிகள் சிக்கிக் கொண்டுள்ளதாக கேப்டன் சவுத்ரி கருதுகிறார்.

"கப்பல்களை தாக்கக் கூடாது. நீங்கள் ஒரு கப்பலைப் தாக்கும்போது, அப்பாவி மக்களான மாலுமிகளையும் பாதிப்புக்குள்ளாக்குகிறீர்கள்," என்று கூறுகிறார் சவுத்ரி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு