You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் அந்த இணைப்புக்கு உரியவரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மின் நுகர்வோருக்கு அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு பல்வேறு விதங்களில் தமிழ்நாடு அரசு மானியங்களை வழங்கி வருகிறது.
வீட்டு நுகர்வோரைப் பொறுத்தவரை, முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது. இதுபோன்ற சலுகைகளையும் மானியத்தையும் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் கூறியது.
இதற்கான அரசாணை கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இது நுகர்வோரின் உரிமையைப் பாதிப்பதால் இதனை ரத்துசெய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான எம்.எல். ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஒருவர் தனது ஆதாரை ஒரு வீட்டுக்கு மட்டுமே இணைக்க முடியும் என்றும், வாடகைக்கு குடியிருப்போரின் ஆதார் எண்ணை, மிண் இணைப்பு எண்ணோடு இணைத்தால், அவர்கள் காலி செய்த பிறகு புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் எண்ணை மாற்றிப் பதிவுசெய்வதில் சிக்கல் வரும் என்று கூறியிருந்தார். மேலும், ஆதார் எண்ணுக்குப் பதிலாக பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய அறிவிப்பு எதையும் மின் வாரியம் வெளியிடவில்லை. சட்டத்தில் விதிகள் ஏதும் இல்லாத நிலையில், ஆதார் எண்ணை இணைக்கா விட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டுமென எம்.எல். ரவி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதில் ஆஜராகி வாதிட்ட எம்.எல். ரவி தரப்பு, "மின் இணைப்பு எண்ணை வீட்டு உரிமையாளரின் ஆதார் எண்ணுடன் மட்டுமே இணைத்தால் அரசு அளிக்கும் மானியம் வீட்டின் உரிமையாளருக்கே கிடைக்கும்; வாடகைக்கு குடியிருப்போருக்குக் கிடைக்காது. மேலும், இது போலச் செய்வதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் பெறவில்லை. ஆகவே, இந்த உத்தரவு செல்லாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், "தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தை வாடகைதாரர்கள் பெறுகிறார்களா அல்லது உரிமையாளர்கள் பெறுகிறார்களா என்பது உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை. மேலும், இதுபோல செய்வதற்கு சட்டரீதியான அனைத்து உத்தரவுகளும் பெறப்பட்டிருக்கின்றன" என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு அடிப்படை ஆதாரங்கள் ஏதுமற்ற நிலையில் தொடரப்பட்டிருப்பதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்