மதுரை எய்ம்ஸ் கட்ட நிதி உண்டா? மத்திய பட்ஜெட் பற்றி மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

ஸ்டாலின்

"தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய திட்டம் எதையும் அளிக்காத இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது" என்றும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கூட நிதி ஒதுக்காதது வேதனை அளிப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசின் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றன.

இந்த பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றமளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

"2023-24-ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் வரவு - செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

நிதிநிலை அறிக்கையில் “தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம்”, “இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு”, “மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லாக் கடன்”, “கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது” போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்களாக இருப்பது ஆறுதல் என்றாலும், தனிநபர் வருமான வரி மாற்றங்கள் வெறும் புதிய முறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்களை, பழைய முறைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

மாநிலங்களுக்கு முழு பயன் தராது

ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவதைக் குறைந்தது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கோரிக்கை ஏற்கப்படாததும், தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களை மட்டுமே குறிவைத்து வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்படுவதும் மத்திய நிதிநிலை அறிக்கை அனைத்து மாநிலத்திற்குமானது என்பதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.

மாநிலங்களுக்கு மூலதனக் கடன் வழங்குவதற்குப் பல்வேறு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களுக்கு முழுப் பயனும் வராது. இது, மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பதால், எந்த ஒரு நிபந்தனையுமின்றி, மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் வழிவகை செய்ய வேண்டுமே தவிர, இப்படி பல நிபந்தனைகளை விதித்துப் பயனைத் தடுப்பது முறையாகாது. மேலும், இத்திட்டத்தில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கப் பழைய பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.

நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டிற்கு UIDF என்ற புதிய நிதியை உருவாக்கியிருந்தாலும், இதற்கான 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் ஒதுக்கீடு 48,000 கோடி ரூபாயிலிருந்து 79,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு வீட்டின் கட்டுமான விலையை உயர்த்தாவிட்டால், மாநிலங்களுக்கு அது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்தின்கீழ், உயர்ந்து வரும் விலைவாசிக்கு ஏற்ப தனது பங்கை உயர்த்திட வேண்டும்.

ஸ்டாலின்

ஒன்றிய அரசின் திட்டங்கள் Results based financing (பயன் அடிப்படையிலான நிதி) என்ற ஒரு புதிய வழிமுறைப்படி செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமாக மாநிலங்களுக்கு வரவேண்டிய உரிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்காக ஒரு கருவியாக இது பயன்படுத்தப்படும் மிகப்பெரிய ஆபத்து இதில் இருக்கிறது. ஆகவே, இத்திட்டத்தை மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பின்னர், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி ஆதாரங்களை மறுப்பதற்கு வாய்ப்பில்லாத வகையில் மாற்றிச் செயல்படுத்திட வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், இத்திட்டங்களுக்காக தனி நிதி ஒதுக்கீடு செய்யாதது வருந்தத்தக்கது. கோவிட் பெருந்தொற்றிலிருந்து நம் நாடு மீண்டு வரும் இச்சூழலில், ஒன்றிய அரசின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போயிருக்கிறது. இது ஒன்றிய அரசின் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.

மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்திற்கு எந்த வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த ஒன்றிய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியிருக்கிறார்.

இந்த பட்ஜெட்டில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் பொருளாதார தேக்கநிலை, வேலையிழப்பை எதிர்கொள்ளும் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

"இயற்கை விவசாயத்திற்கு ஊக்குவிப்பு, 20 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு, தோட்டக் கலைத் துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கின்றன. ஆனால், இவை வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடக்கூடாது. இந்தத் திட்டங்கள் எளிதில் விவசாயிகளைச் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

புதிதாக ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகளைத் துவங்குவது போன்றவை பாராட்டத்தக்கவை.

மூத்த குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்பு ரயில்வே கட்டண சலுகையை திரும்ப வழங்காதது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்வதைத் தடுக்க செயல்திட்டம் இல்லாதது, நேரடி வேலைவாய்ப்பை கொண்டுவருவதற்கான அறிவிப்பு இல்லாதது, தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் இல்லாதது ஆகியவை ஏமாற்றமளிக்கின்றன" என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

இந்த நிதி அறிக்கை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது சிபிஎம். "கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் புரியும் பட்ஜெட்" என இதனை விமர்சித்துள்ளது.

ஸ்டாலின்

"இந்தியா பட்டினிக் குறியீட்டில் அண்டை நாடுகளை விட மோசமான நிலையில் இருப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டிலும் மிக மோசமாக இருப்பதை கணக்கில் கொண்டு கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கும், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நகர்ப்புறத்திற்கும் வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை விரிவுப்படுத்தியிருக்க வேண்டும்

இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு மானியம் கடந்த ஆண்டை விட குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று மதிய உணவு திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 800 கோடியும், கிராமப்புற மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டின் உண்மையான செலவை விட ரூ. 5,000 கோடி குறைவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் அதை மேம்படுத்திட கூடுதலான தொகை ஒதுக்குவதற்கு பதிலாக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து மிகச் சொற்பமான தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது. பண வீக்கத்தை கணக்கில் கொண்டால் இந்த தொகை கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் அடிப்படை தேவையான உணவுப் பொருள், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் வரியை ரத்து செய்திட வேண்டும் எனவும், சில முக்கிய பொருட்களின் ஜிஎஸ்டி-யை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருந்தது.

மேலும் அரசுக்கு இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் பெரும் செல்வந்தர்களுக்கு சொத்து வரியையும் மற்றும் வாரிசு சொத்து வரியையும் விதிக்க வேண்டும் எனவும், பெருநிறுவன வரியை அதிகரிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில் அவற்றைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது மத்திய பாஜக அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது என்பதற்கான அடையாளமாகும்" என சிபிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: