தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு - நாடாளுமன்றத்திற்கு வெளியே எம்பிக்கள் போராட்டம்

பட மூலாதாரம், HANDOUT
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வின் முதல் நாளான நேற்றே, தேசிய கல்விக் கொள்கை பிரச்சனையால் விவாதங்களுடன் தொடங்கியது.
தமிழ்நாடு எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கும் போது, தமிழ்நாடு எம்பிக்களை நோக்கி ஒரு வார்த்தையால் குறிப்பிட்ட பிரதான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.
இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவையை ஒத்தி வைக்க நேர்ந்தது.
அமர்வின் இரண்டாவது நாளான இன்று, நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது "இந்தியை ஏற்க மாட்டோம்" "மும்மொழியை ஏற்க மாட்டோம்" என்று கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
போராட்டத்தின் நடுவே செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. வைகோ, மத்திய அமைச்சரின் பேச்சால், மக்களின் மனம் புண்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், "அமைச்சர் தமது பேச்சை திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறினார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்" எனவும் வைகோ வலியுறுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, அமைச்சருக்கு எதிராக திமுக சார்பில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாகவும், இதனை அவைத்தலைவர் ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.
கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கான நிதியை நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை எனக் கூறினார். மத்திய அரசின் முடிவு வெறும் அரசியல் முடிவு அல்ல எனவும், இதனால் தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, தங்களின் கட்சி திமுகவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கூறினார். மத்திய அமைச்சர் பயன்படுத்திய வார்த்தை , மக்களை தாழ்த்தக் கூடியது எனவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தர்மேந்திர பிரதான் என்ன பேசினார்?
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்ற நிலையில் 2 ஆவது அமர்வு, மார்ச் 10 ஆம் தேதி தொடங்கியது.
நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
''பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ 2,000 கோடி நிதி, பிற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தச் செயல், பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. சட்டத்தால் கட்டாயமாக்கப்படாத ஒரு கொள்கையை பின்பற்றாததால், எந்த ஒரு மாநிலமும் இதுபோல் நிதி இழப்பை சந்திக்காது என்ற வாக்குறுதியை ஒன்றிய அரசு அளிக்குமா?'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
- தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதி ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியதா?
- பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர தமிழ்நாடு அரசு முடிவு - புதிய கல்வி கொள்கைக்கு திமுக எதிர்ப்பு என்ன ஆகும்?
- சென்னையில் ரூ.6 கோடி மோசடி: சினிமா பிரபலம் பெயரில் ஏ.ஐ மூலம் மோசடி நடப்பது எப்படி?
- இந்தியாவில் விபத்துகளில் தினசரி பலியாகும் 45 குழந்தைகள் - வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எப்படி?

'தமிழ்நாடு யு டர்ன் அடித்துவிட்டது' - மத்திய அமைச்சர்
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் தமிழ்நாடு அரசோடு விவாதங்களை நடத்தி இருக்கிறோம். அப்போது, பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தமிழக அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. தமிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். தற்போது கேள்வி எழுப்பி இருக்கும் எம்பியும் என்னை சந்தித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுவிட்டு சென்ற அவர்கள் பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்னை செய்கிறார்கள்" என்றார்.
"இன்று மார்ச் 10. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. மாநில அரசு மீண்டும் எங்களோடு பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது." என்று பேசினார்.
மேலும்,"அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை, நேர்மையாக இல்லை, ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை.'' மேலும் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு, அவர்கள் அப்படி நடந்துக்கொள்ளவில்லை என்றார் தர்மேந்திர பிரதான்
'' அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்." என தெரிவித்தார்.
மேலும், "பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்" என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உரையின்போது எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பிக்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
'தேசிய கல்விக் கொள்கையை திமுக ஒப்புக் கொள்ளவில்லை' - கனிமொழி

பட மூலாதாரம், PTI
அவை மீண்டும் கூடிய போது பேசிய திமுக எம் பி கனிமொழி, மத்திய கல்வி அமைச்சர் தமிழக எம்.பி.க்களை, தமிழக அரசை ஒரு வார்த்தையை குறிப்பிட்டு விமர்சனம் செய்ததாக கூறினார்.
"நாங்கள் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்த போது, தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது, அதிலுள்ள மும்மொழி கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தோம். தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக திமுக கூறவில்லை" என்று கனிமொழி பேசினார்.
அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தான் அந்த வார்த்தைகளை கூறியிருக்கக் கூடாது என்றார். "எனது வார்த்தைகள் காயப்படுத்தும் வகையில் இருந்திருந்தால் நான் அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.
"எனினும் முக்கியமான விசயம் இதுதான். தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், கனிமொழி தலைமையில் மாநில கல்வி அமைச்சருடன் வந்து என்னை சந்தித்தனர். அப்போது அவர்கள் இந்த திட்டத்தில் கையெழுத்திட ஒப்புக்கொள்வதாக தெரிவித்தனர்" என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசினார்.
உடனே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். தொடர்ந்து பேசிய அமைச்சர், "நீங்கள் அமைதியாக இருங்கள். உண்மையை கேட்பதற்கான தைரியம் உங்களுக்கு வேண்டும்" என்று கூறிவிட்டு "எனக்கு கிடைத்த தகவல்படி தமிழக முதல்வர் இத்திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அதற்குள் ஏதோ சில உள்விவகாரம் எழுந்தது, தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்" என்றார்.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிப்பிட்டு பேசிய வார்த்தையை கண்டித்து பதிவிட்டுள்ளார்.
"தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தரமேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்", என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்", என்றும் அவர் அந்த அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
"புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்து அனுப்பிய பிஎம் ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?", என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி அன்று எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டு இருந்தார்.

பட மூலாதாரம், ANI
"நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்", என்று தரமேந்திர பிரதானிடம் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் தரமேந்திர பிரதான் பேசிய கருத்தினை எதிர்த்து சென்னையில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் கண்டன போராட்டங்களை நடத்தினர்.

பட மூலாதாரம், HANDOUT
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












