ஃபெஞ்சல் புயல்: கரையைக் கடக்கத் தொடங்கியது - தற்போதைய நிலவரம் என்ன?

பட மூலாதாரம், IMD
புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து வருவதால், கிழக்குக் கடற்கரை சாலை மாமல்லபுரம் பகுதியில் சூறாவளிக் காற்று வீசுகிறது. புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசுகிறது.
"ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5:30 மணி அளவில் கரையைக் கடக்கத் துவங்கியதாக," சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்தது.
முன்னதாக, சென்னையிலிருந்து தெற்கே 90 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 60 கி.மீ தூரத்திலும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ள புயல் 6 மணிநேரத்தில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புயல் கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதாகவும், கடலுக்கு அருகில் மேகங்கள் இல்லாமல் காணப்படுவதாகவும், புதுச்சேரியில் கனமழை இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- ஃபெஞ்சல் புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மக்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் என்ன?
- சொர்க்கவாசல் விமர்சனம்: சிறைக் கைதியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பு கவனம் பெற்றதா?
- மணிப்பூர்: வன்முறையால் பற்றி எரியும் மாநிலத்தில் தற்போதைய நிலவரம் என்ன? - பிபிசி கள ஆய்வு
- ஃபெஞ்சல் புயல்: வட தமிழகம், புதுச்சேரியில் சிவப்பு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?

எங்கெல்லாம் புயலின் தாக்கம் இருக்கும்?

பட மூலாதாரம், IMD.GOV.IN
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 7 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இன்று (30-11-2024) இரவு 10 மணி வரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிகன மழை இருக்கும் எனத் தெரிவித்திருந்தது.
மேலும், சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும், அதோடு, ஈரோடு, கரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
விமான நிலைய சேவைகள் தற்காலிக நிறுத்தம்
இந்தப் புயலால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தின் நாளை காலை (1.12.2024) 4 மணிவரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் எழும்பூர், சுந்தரம் பாயின்ட், பழவந்தாங்கல், ரங்கராஜபுரம், திருவொற்றியூர் அஜாக்ஸ் உள்பட 6 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

ராஜா முத்தையா சாலை, மில்லர்ஸ் ரோடு, அண்ணா மேம்பலத்தின் இணைப்புச் சாலை ஆகிய பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்தது.
சென்னை, வேளச்சேரி விஜயநகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது குறுக்குத் தெருவில் 47 வயதான சக்திவேல் என்பவர் இன்று (30.11.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார். சக்திவேல் மறைவுக்கு இரங்கள் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு மின்சார வாரியம் சார்பாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

புயல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது என்ன?
முன்னதாக புயல் ஏற்பாடுகள் குறித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தொடர்ந்து 2-3 நாட்களாக மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு அது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது," என்று தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களைத் தொடர்புகொண்டு நிவாரணப் பணிகள், முகாம்கள் பற்றித் தொடர்ந்து மேற்பார்வை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

"நிவாரணம் ஏதும் வரவில்லை"
இந்த நிலையில், “இங்கு கனமழை பெய்து வருகிறது, எந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவோ, நிவாரண உதவியோ, அரசு அதிகரியோ இங்கு வரவில்லை. ஒரு வாரமாக மீன் பிடிக்கச் செல்லவில்லை, எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பத்திருக்கிறது”, என்று மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது?
ஃபெஞ்சல் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும் ஒரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முன்னேற்பாடுகள் நிலவரம் என்ன?
புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைக் தவிர்த்துப் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஜே.சி.பி இயந்திரங்களும் 806 படகுகளும் மோட்டார் பம்புகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைப்பகுதிகள் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்துள்ளதாக, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நேற்று தெரிவித்திருந்தது.
சென்னை சேப்பாக்கத்தில் செயல்படும் மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில் வெள்ளியன்று (நவம்பர் 29) அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.
நேற்று, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“கடந்த 4 நாட்களாக புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரையிலும் சுமார் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை முதல் அனைத்து மீனவர்களுக்கும் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது”, என்று புதுச்சேரி மூத்த காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் மழை எப்போது வரை தொடரும்?
நாளை (01-12-2024) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது, என தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அறிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













