You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2K கிட்ஸ் விரைவாக தலைமை பொறுப்புகளுக்கு வந்துவிடுவது எப்படி?
- எழுதியவர், பயல் புயான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கார்ப்பரேட் உலகில் ஜென் Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பணியாளர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்த ஜென் Z மற்றும் மில்லினியல் (Millennial) தலைமுறையினர் மிக வேகமாக தலைமைப் பொறுப்புகளுக்கு வருகின்றனர்.
மக்களில் 1980களின் முற்பகுதியில் துவங்கி 1990களின் பிற்பகுதி வரை பிறந்தவர்கள் மில்லினியல் அல்லது Y தலைமுறையினர் என அழைக்கப்படுகின்றனர். இந்தக் காலக்கட்டத்தில் பிறந்தவர்களின் வயது தற்போது 25 முதல் 40 வரை இருக்கும். இந்த தலைமுறையினருக்குப் பிறகு பிறந்தவர்களை Z தலைமுறையினர் என்று அழைக்கப்படுவர்.
கார்ப்பரேட் உலகில் இளம் தலைமுறையினர் வேகமாக தலைமைப் பொறுப்புகளுக்கு வரும் அதேவேளையில், அந்தப் பொறுப்புகளைக் கையாளும் திறன் அவர்களுக்கு இருக்கிறதா என்பது பேசு பொருளாக உள்ளது.
முப்பது வயதான நிஷ்தா யோகேஷ் என்பவர் ஹுனார் ஆன்லைன் கேர்சஸ் (Hunar Online Courses) என்ற நிறுவனத்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கினார். அந்த நிறுவனத்தில் பெண்கள் வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆவதற்கான பயிற்சி வகுப்பு ஆன்லைனில் அளிக்கப்படுகிறது. நிஷ்தா, சுமார் 150 பேரை அந்த நிறுவனத்தில் வழி நடத்துகிறார்.
ஆனால், 30 வயதான நிஷ்தாவை மற்றவர்களிடம் இருந்து எது வித்தியாசப்படுத்துகிறது என்றால், அது அவரின் வயதுதான். ஆம், பெரும்பாலான முதன்மை தலைமை அதிகாரிகளின் வயதைவிட, நிஷ்தாவின் வயது மிகவும் குறைவு.
“நான் என்னுடைய 18 வயதில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறேன். அதற்குப் பிறகுதான் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். ஒவ்வொரு நாளும் நிறுவனத்தில் நான் எடுக்கும் புதிய முடிவுகள் என் தலைமைப் பண்பு மீது எனக்கு அதிக நம்பிக்கையைத் தருகிறது,” என்கிறார் நிஷ்தா.
என்ன சொல்கிறார்கள் இளம் தலைமுறையினர்?
பொதுவாக கார்ப்பரேட் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கும், தனியாக நிறுவனம் தொடங்குவதற்கும் பல ஆண்டுகள் அனுபவம் தேவை எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
ஆனால், இந்தக் கருத்துக்கு தற்போதைய தலைமுறையினர் சவால் விடுகின்றனர். மில்லினியல் தலைமுறையினரும், Z தலைமுறையினரும் தலைமைப் பொறுப்புகளுக்கு வரத் துவங்கியுள்ளனர். அவர்களில் அதிகம் பேர் தனியாக தங்களது சொந்த நிறுவனத்தைத் தொடங்குகின்றனர்.
இந்த தலைமுறையினர் புதிய தோற்றத்தில் புது வகையான பணிச் சூழலை உருவாக்கி, புதிய சிந்தனையுடன் வருகிறார்கள்.
இந்த தலைமுறையின் இளைஞர்கள் தலைமைப் பொறுப்புகளை தங்களின் சொந்த பாணியில் கையாள்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே இந்த தலைமுறையினர் தலைமைப் பொறுப்புகளுக்கு தயாரா என்ற கேள்வியும் எழுகிறது.
இளம் தலைமுறையினர் தலைமைப் பொறுப்புக்கு வர முடியுமா ?
ஜுன் 2023இல் மெக்கின்சி & கம்பனி ((Mckinsey & Company) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட முதன்மை செயல் அதிகாரிகளில் 500 பேர் 50 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். இது, 2018இல் நியமிக்கப்பட்ட இளம் தலைமுறையினரைவிட இரண்டு மடங்க அதிகம்.
இந்த ஆய்வின் கணக்குப்படி, முதன்மை தலைமை அதிகாரிகளின் சராசரி வயது 54 ஆக உள்ளது. ஆனால், பல்வேறு தரவுகளும் இளைஞர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வருகிறார்கள் என்பதைக் குறிக்கின்றது.
கடந்த 2021இல் எர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 45% பேர் தங்களது சொந்த நிறுவனத்தை தொடங்குவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், பல நிர்வாகத்துறை சார்ந்த வல்லுநர்கள் இளமையாக இருப்பவர்கள் திறமையான தலைவராகவும் வரலாம் என்று நம்புகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, இளமையாக உள்ள யாருக்கும், ஒரு நிறுவனம் எப்படி இயங்குகிறது, நிறுவனத்தை நடத்துவதற்கான நிதி எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது, எப்படி பணம் சம்பாதிப்பது உள்ளிட்டவை புரிந்துகொள்ள கடினமாக இருக்கும்.
ஆனால், கார்ப்பரேட் உலகில் பல்வேறு நிறுவனங்களில் 40 ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டு இயக்குநராகப் பணியாற்றி, தற்போது பீப்புள் A2Z கம்பெனி (People A2Z Company) நிறுவனத்தின் இயக்குநராக உள்ள தீபக் பரரா, இளம் தலைமுறையினரிடம் அதிக ஆற்றல் இருப்பதாக நம்புகிறார். அதே நேரம், இளம் தலைமுறையினர் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், என்கிறார் அவர்.
“இந்த தலைமுறையினருக்கு பொறுமையே இல்லை. இவர்களுக்கு உடனடியாக முடிவு தெரியவேண்டும். ஆனால், வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லை. நிறைய விஷயங்களுக்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும்.
சில நேரங்களில் அவர்கள் பணியாற்றும் குழுவில் சில கசப்பான உண்மைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். செலவுகளைச் சுருக்கும் போதும், நிதிப் பற்றாக்குறையின்போதும் அதைக் கையாளும் அனுபவம் இளம் தலைமுறையினரிடம் இல்லை. இந்த மாதிரியான சூழலில் பொறுமைதான் மிகப் பெரிய சொத்து,” என்கிறார் தீபக்.
தொழில்நுட்பத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளதுதான் இந்த தலைமுறையினரின் மிகச் சிறந்த விஷயம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். ஆனால், அதனுடன் தனிப்பட்ட தொடர்பு இல்லை என்றும் கூறுகிறார்கள்.
"எங்களுக்கு எவ்வளவு தெரியாது என்று எங்களுக்குத் தெரியும்"
இதுகுறித்து மனிதவள நிபுணர் தீபக் பரரா பேசுகையில், “எங்கள் தலைமுறையினர் வேலைக்குச் செல்வதை ஒரு சேவையாகப் பார்த்தார்கள். ஆனால், இன்றைய தலைமுறையினர் தங்களை ஒரு தொழில்முனைவோராகப் பார்க்கிறார்கள். அவர்கள் தங்களின் வேலைகளுக்குப் பொறுப்பேற்கிறார்கள்.
இந்த தலைமுறை தொழில்நுட்பத்தில் வல்லவர்களாக இருக்கிறார்கள். மக்களிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களை எப்படி சந்திக்க வேண்டும், சமூக ஊடகங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து நன்றாகப் புரிந்துகொண்டுள்ளார்கள்,” என்கிறார்.
பல்வேறு ஆய்வுகளின்படி, கூட்டு முயற்சி என்கிற உணர்வு இளம் தலைமுறையினரிடம் மிக வலுவாக உள்ளது. அவர்கள் அனைவரையும் தங்களுடன் இணைத்துக்கொள்கிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மையை தங்களது வெற்றி மந்திரமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், Y மற்றும் Z தலைமுறையினரின் பண்புகள் குறித்துப் பேசிய ஹுனார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிஷ்தா, “கார்ப்பரேட் இந்தியா மற்றும் இளம் இந்தியாவின் தலைமைத்துவ பாணி, ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை.”
“எங்களுடைய பாணி மிகவும் சாதாரணமாகவ் ஏ நட்பாக இருப்பது. நாங்கள் பணியாற்றும் குழுவின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள முயல்வோம்.
அதேவேளையில், யாரிடம் ஒரு வேலையை ஒப்படைத்து செய்து முடிப்பது என்றும் புரிந்துகொள்வோம். உங்களுக்கு எதிரே உள்ளவருக்கு என்ன வேண்டும், அவர் எப்படி வளர முடியும் எனப் புரிந்துகொண்டு பணியாற்றினால், அந்த நபர் இரவு பகலாக நமக்காக வேலை பார்ப்பார். இளம் வயதில் தலைமைப் பொறுப்புக்கு வருபவருக்கு தனக்கு எவ்வளவு தெரியாது என்பது நன்றாகத் தெரியும்,” என்றார்.
மேலும் பேசிய அவர், நான் சொல்கிறேன், நீ கேள் என்ற மனப்பான்மைக்கு மாறாக, இளம் வயதில் தலைமைப் பொறுப்புக்கு வருபவருக்கு புரிந்துகொள்ளும் மனநிலை இருப்பதாகக் கூறினார்.
“ஆங்கிலத்தில் இதை ‘எம்பத்தட்டிக் லீடர்ஷிப்’ (Empathetic Leadership) என்பார்கள்.”
“நான் எனது சொந்த தொழிலைத் தொடங்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும்”
தலைமைப் பண்புக்கு வரும் இளம் தலைமுறையினர் தங்களுக்கு பாரம்பரியமாக தேவைப்படும் தலைமைப் பண்புகள் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு தன்னம்பிக்கையோடும் துணிச்சலோடும் முன்னேறிச் செல்கிறார்கள்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், 29 வயதான த்ரிஷ்னித் அரோரா தனது ‘டெக் செக்யூரிட்டி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் 29 வயதான த்ரிஷ்னித் அரோரா, தனது 30 வயதிற்குள் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இணைந்து சுமார் 100 பேரை வழிநடத்துகிறார்.
தனது பயணம் குறித்துப் பேசிய த்ரிஷ்னித், “நான் குழந்தையாக இருக்கும்போதே, நான் வேலை செய்யத் தொடங்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். முதலில் எங்கள் வீட்டிற்கு கணிணி வந்தது, பின் இன்டர்நெட் வந்தது, பின் தொழில்நுட்பம் வளர்ந்து உலகம் பெரிதானது.”
மேலும் பேசிய அவர், “ஆரம்பத்தில் நான் செய்வது பொழுதுபோக்கிற்கானது என்றும், அதை நான் முழு நேரத் தொழிலாக கொள்ளவில்லை என்றும் மக்கள் நினைத்தனர். நான் அவர்களுக்கு அப்போது மிகவும் குழந்தைத்தனமாகத் தெரிந்தேன். ஆனால், காலம் மாறியது. அதே நபர்கள் என்னிடம் திரும்ப வரத் தொடங்கினர், என்னிடம் பேசத் தொடங்கினர்,” என்றார்.
“ஆனால், பத்து வருட கடின உழைப்பிற்குப் பிறகு, எங்கள் இணைய பாதுகாப்பு தயாரிப்பான ESOFஐ அமெரிக்கா அரசாங்கம் வாங்கத் தொடங்கிய பிறகு, நாங்கள் பின் வாங்கவில்லை,” என்றார்.
தலைமைப் பயிற்சித் துறையில் பணியாற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, இளம் தலைமுறையினரின் சிறந்த விஷயம் என்றால் அவர்கள் உடனடியான கருத்து மற்றும் விரைவாக முடிவுகளை நம்புகிறார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு வரும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சந்தையின் தேவைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள முயல்கிறார்கள்.
முந்தைய தலைமுறையினரிடம் இருந்து இளைய தலைமுறையினர் என்ன கற்றுக்கொள்ளலாம்?
தீபக் பராராவின் கூற்றுப்படி, தலைமைப் பொறுப்புக்கு வரும் இளம் தலைமுறையினரின் உற்சாகத்தை சரியான திசையில் வழிகாட்ட வேண்டியது பேபி பூமர்ஸ் அல்லது Y தலைமுறையினர் என்றழைக்கப்படும் முந்தைய தலைமுறையினரின் பொறுப்பு.
முந்தைய தலைமுறையினரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது குறித்துப் பேசும், நிஷ்தா, “பெரிய நிறுவனங்கள், பெரிய குழுக்களை எப்படி கையாள்வது என்பது குறித்து நமது முந்தைய தலைமுறையினரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அங்கு அனைத்து நபர்களிமும் தனிப்பட்ட தொடர்புகளை வைத்திருப்பதற்கு நேரம் இருக்காது. இதை நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.”
மேலும் பேசிய அவர், “எங்களின் முந்தைய தலைமுறையினரிடம் நிறைய தேக்க நிலை இருந்தது. ஆனால், இது எங்கள் தலைமுறையில் இல்லை என்று நினைக்கிறேன்.
இரண்டாவதாக, தனி மனித தொடர்புகள் மற்றும் ஒரு உறவை ஏற்படுத்துவது போன்றவற்றை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது, நாங்கள் பெரும்பாலும் யாரையும் ஒரு முறைகூட நேரில் பார்த்தில்லை. ஆனால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். இது எங்களுக்கு நஷ்டம். பணியாற்றுபவர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதை முந்தைய தலைமுறையிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
எந்த துறையில் அதிக இளம் தலைமுறையினர் இருக்கிறார்கள் ?
நிபுணர்களின் கூற்றுப்படி, தகவல் தொழில்நட்பத் துறை, விற்பனைத் துறை, சமூக ஊடகங்கள் சார்ந்த துறை, ஊடக மேலாண்மை, வங்கித் துறை, முதலீட்டு வங்கி ஆகிய துறைகளில்தான் இளம் தலைமுறையினர் அதிகம் காணப்படுகின்றனர்.
இந்த தலைமுறையினர் சவாலான வேலைகளைச் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், அதே உள்கட்டமைப்பு சார்ந்த துறைகள், உற்பத்தி, மின்சராம் ஆகிய துறைகளில் இளைய தலைமுறையினர் உயர் பதவிகளில் அதிகம் காண முடிவதில்லை.
தலைமைப்பண்பு குறித்துப் பேசிய தீபக், “ஒரு தலைவர் என்பவரும் வேலை செய்பவர். அவர் எப்போது முன்னிருந்து வழிநடத்த வேண்டும், எப்போது நடுவில் நிற்க வேண்டும், எப்போது பின்னால் செல்ல வேண்டும், எப்போது தன்னைத் தற்காத்து கொள்ள தன் அணியை விட்டு வெளியேற வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். உங்கள் குழுவை நீங்கள் ஊக்கப்படுத்தினால், அவர்கள் உங்களுக்காக 200 சதவீதம் சிறப்பாகச் செயல்படுவார்கள்,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்