கான் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியர்

பட மூலாதாரம், Getty Images
பிரான்ஸில் நடைபெறும் 2024 கான் திரைப்பட விழாவில், சனிக்கிழமை (26.05.2024) இந்தியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக மாறியது. இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின் 'ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்' என்ற திரைப்படம் கான் திரைப்பட விழாவின் இரண்டாவது பெரிய விருதான ஜூரி விருது அல்லது கிராண்ட் பிரிக்ஸ் எனும் விருதையும் வென்றுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில், வேறெந்த இந்திய திரைப்படமும் விழாவின் முக்கியப் பிரிவில் திரையிடப்பட்டு விருதை வென்றதில்லை.
கான் திரைப்பட விழாவில் பாயல் கபாடியாவின் படம் முடிந்ததும், பார்வையாளர்கள் 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டினர். கேரளாவில் இருந்து வந்து மும்பையில் வசிக்கும் செவிலியர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்த திரைப்படம்.
இந்த விருதின் மூலம், 38 வயதான பாயல் கபாடியா, பிரான்சிஸ் ஃபோர்ட் கபேலெ, யோர்கோஸ் லாந்திமோஸ், அலி அப்பாஸ், ஜேக்ஸ் ஆடியார்ட் மற்றும் ஜியா சாங்கே போன்ற இயக்குநர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.
இயக்குநர் பாயல் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
கான் திரைப்பட விழாவில் விருதைப் பெற்ற பிறகு, பாயல் புன்னகையுடன், “இதை என்னால் நம்ப முடியவில்லை, என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இங்கு இருப்பதை மிகவும் பெருமையாக உணர்கிறேன்," என்று கூறினார்.
திரைப்பட விழாவின்போது பேசிய பாயல், “இந்த விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கனவு நனவானது போல் இருந்தது, இந்த விருது எனது கற்பனைக்கும் அப்பாற்பட்டது,” என்றார்.
விழா மேடையில் இருந்து பேசிய பாயல், “இந்த நிகழ்வில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து ஓர் இந்தியப் படம் விருது வெல்வதற்காக மீண்டும் 30 ஆண்டுகள் நாம் காத்திருக்கக் கூடாது” என்றார்.
'ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்' என்பது மூன்று வெவ்வேறு பெண்களுக்கு இடையிலான நட்பின் கதை. மேலும் இந்த படத்தில் பல இடங்களில் இந்தப் பெண் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பது போல் தெரிகிறது.
இதைப் பற்றி பாயல் கபாடியா கூறுகையில், “இந்தப் படம் மூன்று வித்தியாசமான பெண்களுடைய நட்பின் கதை, மேலும் பெரும்பாலும் பெண்கள் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பதைத்தான் பார்க்கிறோம்."
"நமது சமூகம் இப்படி வடிவமைக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் என்னைப் பொறுத்தவரை நட்பு என்பது மிக முக்கியமான உறவு. நட்பு மூலம் ஒருவருக்கொருவர் வலுவான ஒற்றுமை, சம உரிமை மற்றும் பச்சாதாபத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்," என்றார்.
விருது வழங்கும் விழாவின்போது பாயல் கபாடியா படத்தின் நடிகைகளை மேடைக்கு அழைத்து, “இவர்கள் இல்லாமல் இந்தப் படம் உருவாகியிருக்குமா என்று தெரியவில்லை, இந்த மூன்று பெண்களும் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறார்கள்."
"ஒரு குடும்பம் போல இருந்து, இந்தப் படத்தை தங்கள் விருப்பப்படி உருவாக்கினார்கள்,” என்ற கபாடியா, “நான் மிகவும் பதற்றமாக இருக்கிறேன், அதனால்தான் என்ன பேசுவது என்பதை எழுதிக் கொண்டு வந்துள்ளேன்,” என்று கூறினார்.
பாயலின் திரைப் பயணம்

மும்பையில் பிறந்த பாயல் கபாடியா, கலைஞர் நளினி மலானியின் மகள். பாயல் ஆந்திராவில் உள்ள ரிஷி வேலி பள்ளியில் பயின்றார், பின்னர் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதார பட்டம் பெற்றார். சோபியா கல்லூரியில் ஓராண்டு முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
திரைப்படங்களில் அவருக்கு இருந்த ஆர்வம் அவரை புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரிக்கு (FTTI) அழைத்துச் சென்றது, அங்கிருந்துதான் அவர் திரைப்பட இயக்கத்தைக் கற்றுக்கொண்டார்.
கபாடியாவின் முதல் ஆவணப்படமான 'எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்' 2021இல் கான் திரைப்பட விழாவில் ‘கோல்டன் ஐ’ விருதை வென்றது. 2015இல் புனே திரைப்படக் கல்லூரியில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
இதுதவிர 'ஆஃப்டர்னூன் க்ளவுட்ஸ்’, ‘தி லாஸ்ட் மேங்கோ பிஃபோர் தி மான்சூன்', 'வாட் இஸ் தி சம்மர் சேயிங்' போன்ற படங்களையும் பாயல் கபாடியா உருவாக்கியுள்ளார்.
2015 திரைப்படக் கல்லூரி ஆர்ப்பாட்டத்தில் பாயல்

பட மூலாதாரம், AFP
கடந்த 2022இல் வெளியான பாயல் கபாடியாவின் முதல் ஆவணப்படம் புனே திரைப்படக் கல்லூரியின் மாணவர்களின் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. 2015இல் நடந்த இந்தப் போராட்டங்களின் போது, திரைப்பட கல்லூரியின் மாணவராக இருந்தார் பாயல் கபாடியா. அப்போது கல்லூரி நிர்வாகம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
நான்கு மாதங்களாக நடந்த இந்தப் போராட்டங்களில் பாயல் கபாடியா ஒரு முக்கிய முகமாக இருந்தார். இதனால் அவருக்கான உதவித் தொகையையும் நிர்வாகம் தர மறுத்தது.
அப்போது இந்தப் போராட்டங்கள் குறித்துப் பேசிய பாயல் கபாடியா, “போராட்டங்களுக்கு மாணவர்கள் பொறுப்பேற்க முடியாது. ஏனென்றால் இதை வேடிக்கைக்காக அவர்கள் செய்யவில்லை. அதற்கு கடின உழைப்பும் மன உறுதியும் தேவை," என்று கூறியிருந்தார்.
மேலும், "முந்தைய அரசுகளும் புனே திரைப்படக் கல்லூரி தொடர்பாகப் பல பெரிய தவறுகளைச் செய்துள்ளன, அவர்கள் கல்வியாளர்களின் கையில் கல்லூரியின் நிர்வாகத்தைக் கொடுக்கவில்லை, மாறாக சினிமா பற்றித் தெரியாதவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர்," என்று கூறியிருந்தார்.
புனே திரைப்படக் கல்லூரியின் மாணவராக பாயல் கபாடியா இருந்தபோது, ”இந்தக் கல்லூரியின் மாணவர்கள் சர்வதேச தரத்தில், கலைக்குப் பங்களிக்கும் விதத்தில் திரைப்படங்களை உருவாக்குகிறார்கள்,” என்றும் கூறியிருந்தார்.
பாலிவுட்டில் இருந்து வரும் பாராட்டுகள்

கான் திரைப்பட விழாவில் பாயலுக்கு கிடைத்த வெற்றியை பாலிவுட்டும் கொண்டாடுகிறது. அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ரிச்சா சத்தா, “வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது. இந்தச் செய்தியைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. பாயல் கபாடியா, ரன்பீர் தாஸ், கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன், சாயா கதம் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துகள்,” என்று கூறியுள்ளார்.
மேலும், "சுதந்திரமான திரைப்படம் எடுப்பது என்பது எந்தக் காலகட்டத்திலும் மிகவும் கடினமான ஒரு பணி, இப்போது மேலும் அது ஒடுக்கப்படுகிறது. இத்தகைய நிலையில் கிராண்ட் பிரிக்ஸ் வெல்வது என்பது என்னை அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது," என்றும் ரிச்சா சத்தா கூறியுள்ளார்.
பாயல் கபாடியா ஒரு பேட்டியில், “இந்தப் படத்தைத் தயாரிக்க எனக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டது. ஒரு படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான பணி,” என்று கூறியிருந்தார்.
“இது ஒன்றும் மிகப்பெரிய திரைப்படம் இல்லை, கான் திரைப்பட விழா வரை இந்தப் படம் செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தச் செய்தி குறித்துத் தெரிந்ததும், மிகவும் உற்சாகமாகவும் பதற்றமாகவும் உணர்ந்தேன்."
"கான் விழாவிற்குச் செல்வதன் மூலமாக இந்தப் படத்திற்குக் கிடைக்க வேண்டிய கவனம் கிடைக்கும் என்பதை நினைத்து மகிழ்ந்தேன்,” என்று கூறியிருந்தார் பாயல் கபாடியா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












