You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்லோவாக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது யார்? - என்ன நடந்தது?
ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தற்போது அவர் 'உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை' என்று துணைப் பிரதமர் துமாஸ் தாரபா தெரிவித்துள்ளார்.
பிபிசியிடம் பேசிய துமாஸ் தாரபா ஃபிகோவின் அறுவை சிகிச்சை 'நன்றாக' முடிந்திருப்பதாகவும், 'இறுதியில் அவர் உயிர் பிழைப்பார் என்று தான் நம்புவதாகவும்,' தெரிவித்தார்.
முன்னர், தாக்குதலில் படுகாயமடைந்த ஃபிகோ 'உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக' ஸ்லோவாக்கியாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை (மே 15) மாலை ஸ்லோவாக்கியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கலினாக், பிரதமர் ஃபிகோ மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சையில் இருந்ததாகவும், அவரது நிலைமை 'மோசமாக' இருப்பதாகவும் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரது அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதி உட்பட அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை 'ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்' என்று கூறியுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் இந்தத் தாக்குதலைக் கண்டித்திருக்கிறார்.
என்ன நடந்தது?
உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180கி.மீ. தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது".
ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகள், ஒரு நபர் துப்பாக்கியை உயர்த்தி, பிரதமர் ஃபிகோவை நோக்கி ஐந்து முறை சுடுவதைக் காட்டின. அதன்பின் பிரதமர் ஃபிகோவின் மெய்க்காப்பாளர்கள் அந்த நபரை அடக்கினர். ஃபிகோவின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமரை அவரது காரில் ஏற்றச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது.
அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், 'துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்' என்றும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் ஃபிகோ ஹெலிகாப்டர் மூலம் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து ஹண்ட்லோவாவின் கிழக்கே உள்ள பான்ஸ்கா பைஸ்ட்ரிகாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்," என்றார்.
பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால், அப்போது, பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.
முன்னர் பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தச் செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
யார் இந்த ராபர்ட் ஃபிகோ?
கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ.
இடதுசாரி ஸ்மெர்-எஸ்.எஸ்.டி கட்சிக்குத் தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
2018-இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
"தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்,” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார்.
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன.
ஒருவர் கைது
ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் ஒரு நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
அவர் யார்? அவர்தான் பிரதமரை துப்பாக்கியால் சுட்டாரா? பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட என்ன காரணம்? என்பன போன்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
புதன்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஸ்லோவக்கியா உள்துறை மந்திரி மாதுஸ் சுதாஜ் எஸ்தோக், பிரதமர் ஃபிகோ வயிற்றில் சுடப்பட்டதாகக் கூறினார்.
"ஆரம்பகட்டத் தகவல்கள் இது அரசியல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றன," என்று அவர் கூறினார்.
சந்தேகத்திற்குரிய நபர் 71 வயதான எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் என உறுதிப்படுத்தப்படாத உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
சந்தேக நபரைக் குறிக்கும் வகையில் ஸ்லோவாக் ஊடகங்களில் ஒரு வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் காட்சிகளில், அரசாங்கக் கொள்கை மற்றும் அரச ஊடகங்கள் மீதான அரசின் நிலைப்பாட்டுடன் தான் உடன்படவில்லை என்று அந்த நபர் கூறுகிறார். அந்த வீடியோவில் இருப்பவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட நபரா என்றோ, அல்லது எந்த சூழ்நிலையில் அக்காட்சிகள் எடுக்கப்பட்டந என்றோ பிபிசி-க்குத் தெரியவில்லை.
உலகத் தலைவர்கள் கண்டனம்
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான தாக்குதலை உலக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். இந்த கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் ஃபிகோ விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஸ்லோவாக் குடியரசின் மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது," என்று தெரிவித்திருக்கிறார்.
ஸ்லோவாக்கியா அதிபர் சுசானா சாப்புட்டவா, இந்த தாக்குதலை 'மிருகத்தனமானது மற்றும் இரக்கமற்றது' என விமர்சித்துள்ளார்.
“நான் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான சூழ்நிலையில், தாக்குதலில் இருந்து மீண்டு வர ராபர்ட் ஃபிகோவுக்கு கூடுதல் வலிமை கிடைக்க வேண்டுகிறேன்,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஃபிகோ மீதான இந்த மோசமான தாக்குதலை தான் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.
ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியைக் கேட்டு தான் 'ஆழ்ந்த அதிர்ச்சியில்' இருப்பதாகக் கூறியுள்ளார்.
செக் குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, இந்தச் சம்பவம் "அதிர்ச்சியூட்டுவதாகவும்”, ஃபிகோ விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கூறுகையில், "எனது நண்பரான பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடந்திருக்கும் இந்தக் கொடூரமான தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்," என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அனைவரும் ஃபிகோ மற்றும் அவரது குடும்பத்தாரையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
யுக்ரேன் அதிபர் கண்டனம்
யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை 'பயங்கரமானது' என்று கூறியுள்ளார்.
எந்த ஒரு நாட்டிலும், எந்த வடிவத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)