ஆப்ரிக்க நாடுகளை கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனா - என்ன சாதிக்க விரும்புகிறது?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், ஜெர்மி ஹோவெல்
- பதவி, பிபிசி உலக சேவை
சீனா கடந்த இருபது ஆண்டுகளாக, ஆப்பிரிக்கா உடனான வர்த்தகத்தை பெருமளவில் அதிகரித்துள்ளது. அந்த கண்டம் முழுவதும் சாலைகள், ரயில் பாதை மற்றும் துறைமுகங்கள் கட்டுவதற்கு பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது.
இது சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (FOCAC) வாயிலாக செயல்படுத்தப்பட்டது. FOCAC என்பது ஆப்பிரிக்க நாடுகளும் சீனாவும் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதைத் தீர்மானிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாநாடு.
இந்த ஆண்டுக்கான கூட்டம் பெய்ஜிங்கில் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. சீனப் அதிபர் ஷி ஜின்பிங் இந்த மாநாட்டில் உரையாற்றுகிறார்.
சமீபத்தில், சீனா தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டது. இப்போது அதன் உயர் தொழில்நுட்பம் மற்றும் ‘பசுமை பொருளாதாரம்’ தயாரிப்புகளை ஆப்பிரிக்காவிற்கு வழங்குகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
2005 - 2022 வரையிலான சீனா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான வர்த்தகத்தின் அளவைக் காட்டும் விளக்கப்படம்
கடந்த இருபது ஆண்டுகளில், சீனா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், ஆப்பிரிக்க நாடுகளில் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் மாறியுள்ளது. அத்துடன் ஆப்பிரிக்காவிற்கு அதிகளவு கடன்களையும் வழங்கியுள்ளது.
சீனா 2022இல் ஆப்பிரிக்க நாடுகளுடன் 250 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் செய்தது (தரவுகளில் இருக்கும் சமீபத்திய முழு ஆண்டு). பெரும்பாலும் எண்ணெய் மற்றும் கனிமங்கள் போன்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்தது. பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தது.
2022இல் சீனா ஆப்பிரிக்க பொருளாதாரங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்தது, முக்கியமாக புதிய போக்குவரத்து இணைப்புகள், ஆற்றல் வசதிகளை உருவாக்க மற்றும் சுரங்கங்களை உருவாக்க முதலீடு செய்தது.
இந்தத் திட்டங்களின் மூலம் 2022 இல் சீன நிறுவனங்கள் கிட்டத்தட்ட 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்தன.
உலகப் பொருளாதார மன்றத்தின் கூற்றுபடி ஆப்பிரிக்காவில் இப்போது 3,000 சீன வணிகங்கள் செயல்படுகின்றன.
ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்காக சீனா கடனளித்தது. தற்போது சீனாவுக்கு அவற்றின் செலுத்தப்படாத கடன் மதிப்பு 134 பில்லியன் டாலர்கள். இது ஆப்பிரிக்க நாடுகள் உலகின் பிற நாடுகள்/அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களில் சுமார் 20% தொகை ஆகும்.
இருப்பினும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கும் கடன் மற்றும் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்வதில் சமீபகாலமாக மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால், பல ஆப்பிரிக்க அரசுகள் தங்கள் நாடுகளில் சீனாவால் கட்டமைக்கப்பட்ட உள்கட்டமைப்புக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பிரிவின் (SOAS) பேராசிரியர் ஸ்டீவ் சாங் கூறுகிறார்.
"ஆப்பிரிக்காவில் மேற்கத்திய நாடுகளும் உலக வங்கியும் நிதி அளிக்காத ரயில்வே போன்ற திட்டங்களுக்கு கடன் கொடுப்பதில் சீனா மகிழ்ச்சியடைகிறது, ஏனெனில் உலக வங்கி போன்றவற்றிற்கு வணிக நோக்கம் இல்லை" என்று அவர் கூறுகிறார்.
"பல ஆப்பிரிக்க நாடுகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அந்த திட்டங்களிலிருந்து போதுமான நிதியை பெறவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளன." என்கிறார்.
"இன்று, ஆப்பிரிக்காவை பொறுத்தவரையில் சீனக் கடன் வழங்குநர்கள் மிகவும் நுட்பமாக செயல்படுகின்றனர்" என்று லண்டனை தளமாகக் கொண்ட வெளிநாட்டு விவகாரங்களின் சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸின் முனைவர் அலெக்ஸ் வைன்ஸ் கூறுகிறார், மேலும் "அவர்கள் அதிகளவிலான கடன் சார்ந்த திட்டங்களைத் தேடுகின்றனர்." என்கிறார்.
சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றுக்கான பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்குவதில் இருந்து சீனா தனது கவனத்தை மாற்றி, அதற்கு 4ஜி மற்றும் 5ஜி தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகள், விண்வெளி செயற்கை கோள்கள், சோலார் பேனல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
"ஆப்பிரிக்க சந்தையில் மின்சார வாகனங்களை திணிப்பதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனா தனது புதிய, அதிநவீன பசுமை தொழில் நுட்பங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல இது ஒரு வழியாகும்." என்கிறார் டாக்டர் வைன்ஸ்.
சீனாவுடன் வர்த்தகம் -ஆப்பிரிக்காவிற்கு உதவியதா?
1999-ஆம் ஆண்டு முதல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது ‘வெளியில் செல்வது’ உத்தியை அறிமுகப்படுத்தியதில் இருந்து சீனா ஆப்பிரிக்க நாடுகளுடன் முக்கிய வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தத் தொடங்கியது.
சீனா -ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (FOCAC) அதன் முதல் கூட்டத்தை 2003இல் நடத்தியது. தற்போது இந்த மன்றம் சீனா மற்றும் 53 ஆப்பிரிக்க நாடுகளுக்கான கூட்டாண்மை தளமாக உள்ளது.
முனைவர் வைன்ஸின் கூற்றுப்படி, சீனாவின் முதல் இலக்கு ஆப்பிரிக்காவிலிருந்து முடிந்தவரை அதிகமான மூலப்பொருட்களை வாங்குவதாகும், எனவே அது உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை பெறும்.
"உள்கட்டமைப்பை கட்டுவதற்கும், அதற்குப் பதிலாக எண்ணெய் விநியோகத்தை பெறுவதற்கும் சீனா அங்கோலாவுக்கு அதிக அளவு பணத்தைக் கடனாக வழங்கியது," என்று அவர் கூறுகிறார்.
“இந்தத் திட்டங்கள் சீன மக்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்தன. ஒரு கட்டத்தில், அங்கோலாவில் 170,000 சீனத் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.” என்றும் அவர் கூறுகிறார்.
ஆப்பிரிக்காவில் சீனாவின் செல்வாக்கு
ஆப்ரிக்க நாடுகளை கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனா
இருப்பினும், ஆப்பிரிக்காவில் சீனா நிறைவு செய்துள்ள கட்டுமானத் திட்டங்கள் உள்ளூர் மக்களுக்கு மிகக் குறைவான நன்மைகளையே வழங்கியுள்ளன என்றும், அது அவர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியுள்ளது என்றும் பேராசிரியர் சாங் கூறுகிறார்.
"சீன நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த தொழிலாளர்களைக் கொண்டு வருகின்றன, மேலும் உள்ளூர் மக்களுக்கு வேலைகளை வழங்குவதில்லை," என்று அவர் கூறுகிறார்.
"அதே சமயம் கடுமையான பணிச்சூழலுடன் உள்ளூர் தொழிலாளர்களை வேலைகளில் அமர்த்துகிறார்கள் என்ற உணர்வும் மக்கள் மத்தியில் உள்ளது." என்கிறார்.
2013ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் வர்த்தகத்திற்கான நெட்வொர்க்கை மேம்படுத்த சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியைத் (Belt and Road Initiative) தொடங்கியபோது, ஆப்பிரிக்க நாடுகளுக்கான கடன்கள் அதிகரித்தன. 2016இல் மட்டும் 28 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா கடனாக வழங்கியது.
சீனா ஆப்பிரிக்காவை கொள்ளையடிக்கும் விதத்தில் கடன் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசாங்கங்களை பெரும் தொகையை கடனாகப் பெற வற்புறுத்துகிறது, பின்னர் அவர்கள் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களைத் தொடங்கும் போது அவர்களிடம் சலுகைகளை கோருகிறது என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
சாத்தம் ஹவுஸின் புள்ளிவிவரங்களின்படி, சீனாவிற்கு அங்கோலா $18 பில்லியன், ஜாம்பியா $10 பில்லியன் மற்றும் கென்யா $6 பில்லியன் கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. இவர்கள் அனைவரும் இந்தத் தொகைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
பெரும்பாலும், சீனா ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடன் கொடுத்து, மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் வாயிலாக தொகையை திரும்ப பெறுகின்றது. இந்த ஒப்பந்தங்கள் காங்கோ போன்ற நாடுகளில் உள்ள பல கனிம சுரங்கங்களின் கட்டுப்பாட்டைப் பெற சீனாவுக்கு உதவியது.
கனிம சுரங்கங்கள் போன்ற வளங்களை வைத்து கடன்களை பெறுவதை அரசாங்கங்கள் தவிர்க்க வேண்டும் என்று ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கியின் தலைவர் அக்கின்வுமி அடெசினா, அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
"இந்த வகையான கடன்கள் ஆபத்தானவை, ஏனென்றால் உங்கள் வளங்களை சரியாக மதிப்பிட முடியாது" என்று அவர் கூறினார்.
மேலும், "நிலத்தடியில் கனிமங்கள் அல்லது எண்ணெய் இருந்தால், நீண்ட கால ஒப்பந்தத்திற்கான விலையை எப்படி நிர்ணயம் செய்வீர்கள்? இது ஒரு சவால்.” என்றார்.
இருப்பினும், முனைவர் வைன்ஸ் கூறுகையில், “சீனா கடன் மூலம் பொறி வைக்கும் ராஜதந்திரத்தை கையில் எடுத்திருக்கிறது என்பது உண்மை அல்ல” என்றார்.
"பலவீனமான அரசைக் கையாளும் போது சீனா சில சமயங்களில் கொள்ளையடிக்கும் விதத்தில் செயல்படுகிறது, ஆனால் வலுவான அரசாங்கங்கள் அதிக கடன்களை பெறாமல் அதனுடன் வர்த்தகம் செய்ய முடியும்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சீனா என்ன சாதிக்க விரும்புகிறது?
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் முனைவர் ஷெர்லி ஜீ யூ கருத்துப்படி, புதன்கிழமை பெய்ஜிங்கில் தொடங்கும் FOCAC மாநாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் எந்தவொரு உலக சக்திக்கும் இடையிலான கூட்டாண்மைக்கான மிகவும் விரிவான, நன்கு நிறுவப்பட்ட தளம் என்று கூறுகிறார்.
ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும், இது புதிய நோக்கங்களையும் முன்னுரிமைகளையும் அமைக்கிறது.
"ஆப்பிரிக்காவின் வெளிப்புற கூட்டாளியாக சீனாவை சிறப்பாக ஈடுபடுத்துவதற்கான ஒரு உத்தி இது" என்று அவர் கூறுகிறார்.
"இந்த நூற்றாண்டு இறுதியில், உலக மக்கள் தொகையில் 40% பேர் ஆப்பிரிக்காவில் வசிப்பார்கள். உலகின் பொருளாதார எதிர்காலத்திற்கு ஆப்பிரிக்கா தாயகமாக உள்ளது என்பது வெளிப்படையான உண்மை" என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், ஆப்பிரிக்காவில் சீனாவின் நலன்கள் வணிகம் சார்ந்தது மட்டுமல்ல, அரசியல் சார்ந்தவையும் கூட என்று முனைவர் வைன்ஸ் கூறுகிறார்.
"ஐ.நா.வில் 50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன, தாய்வானை ஒரு நாடாக அங்கீகரிப்பதை ரத்து செய்ய இந்த ஆப்பிரிக்க நாடுகளிடம் சீனா அணுகியுள்ளது." என்று அவர் கூறுகிறார்.
"ஆப்பிரிக்காவிலிருந்து சீனா என்ன விரும்புகிறது என்பதற்கான தெளிவான பிம்பத்தை நாங்கள் இப்போது காண்கிறோம்" என்று பேராசிரியர் சாங் கூறுகிறார்.
"இது தெற்குலகின் வெற்றியாளராக மாற விரும்புகிறது, மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளில் செல்வாக்கை உருவாக்க அந்த நிலையைப் பயன்படுத்துகிறது. ஆப்பிரிக்க நாடுகள் தனது ‘ஆதரவாளர்களாக’ இருக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது.” என்கிறார்.
மேலும், “சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (FOCAC) சமமாக நடத்தப்படும் மாநாடு அல்ல” என்று அவர் கூறுகிறார்.
"அதிகார மட்டத்தில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. சீனாவுடன் ஒத்துப்போகும் நாடுகள் வரவேற்கப்படும். சீனாவின் எதிர்காலத் திட்டங்களுக்கு உடன்பட மாட்டோம் என்று அவர்கள் யாரும் சொல்ல மாட்டார்கள்.” என்று பேராசிரியர் சாங் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












