அதானி மீது குற்றச்சாட்டு - வெள்ளை மாளிகை கூறியது என்ன?

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நடாலி ஷெர்மேன்
    • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்காவில் இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றவியல் வழக்கு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான 62 வயதான கௌதம் அதானிக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், “இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) மற்றும் நீதித்துறை இரண்டும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக தகவல்களை வழங்க முடியும்” என தெரிவித்தார்.

கௌதம் அதானிக்கு எதிரான இக்குற்றச்சாட்டுகள், இந்தியா - அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையிலான உறவை பாதிக்குமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தியா-அமெரிக்கா உறவு மிகவும் வலுவான அடித்தளத்தைக் கொண்டது என அவர் பதிலளித்தார்.

துறைமுகம், விமான நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என நீண்டிருக்கும் அதானி குழுமத்தின் பங்குகள் இதைத்தொடர்ந்து இன்று காலையில் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது.

குற்றப் பத்திரிகையில், 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படும் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்திற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அதானியும் அவரது மூத்த நிர்வாகிகளும் இந்திய அதிகாரிகளுக்குப் பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இதை சட்டரீதியாக எதிர்கொள்வதாகவும் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

இதைத் தொடர்ந்து, வியாழனன்று காலையில், அதானி குழும பங்குகள் 10 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன. தனது சந்தை மூலதனத்தில் சுமார் 30 பில்லியன் டாலர்களை அதானி குழுமம் இழந்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு, உயர்மட்ட நிறுவனம் ஒன்று அதானி குழுமம் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது. அதிலிருந்து, அதானி நிறுவனம் அமெரிக்காவில் கண்காணிப்பின்கீழ் இருந்து வந்தது.

அந்த நிறுவனத்தின் கூற்றுகளை கௌதம் அதானி முற்றிலுமாக மறுத்தார். ஆனால், அந்த அறிக்கை வெளியான பிறகு, அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் சரிந்தன.

இந்த லஞ்ச விசாரணை பல மாதங்களாகவே நடந்து வருகின்றன. அமெரிக்காவில் 2022ஆம் ஆண்டில் இந்த விசாரணையைத் தொடங்கியதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அதானி குழும அதிகாரிகள், அமெரிக்க நிறுவனங்கள் உள்படப் பல தரப்பிடம் இருந்து கடனாகவும் பத்திரங்கள் மூலமாகவும் மூன்று பில்லியன் டாலர் நிதி திரட்டியதாக அந்தக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

கௌதம் அதானி மீது அமெரிக்காவில் லஞ்ச வழக்கு

பட மூலாதாரம், Getty Images

மேலும் அதற்காக, தவறாக வழிநடத்தக்கூடிய அறிக்கைகளைப் பயன்படுத்தியதாகவும், இதன்கீழ் திரட்டப்பட்ட பணம் லஞ்ச எதிர்ப்பு கொள்கையை மீறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் அரசு வழக்கறிஞர் (US Attorney) பிரையன் பீஸ், “குற்றச்சாட்டுகளின்படி, பிரதிவாதிகள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டமிட்டனர்.

மேலும், அவர்கள் அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனம் திரட்ட முயன்றபோது, தங்களது லஞ்சம் தரும் திட்டத்தைப் பற்றிப் பொய் கூறியுள்ளார்கள்,” என்று தெரிவித்தார்.

அதோடு, தனது அலுவலகம் சர்வதேச சந்தைகளில் இருந்து ஊழலை ஒழிப்பதில் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார் பிரையன் பீஸ். இதுதவிர, “நமது நிதிச் சந்தைகளின் நம்பகத்தன்மையைப் பணயம் வைத்து லாபம் பார்க்க விரும்புவோரிடம் இருந்து முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த லஞ்சம் கொடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பல சந்தர்ப்பங்களில் அதானியே அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதானி குழுமம் கூறுவது என்ன?

கௌதம் அதானி மீது அமெரிக்காவில் லஞ்ச வழக்கு

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க நீதித்துறை கூறுவதைப் போல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதிதான்" என்று மேற்கோள் காட்டியுள்ள அதானி குழுமம், இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், "தாங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தைப் பின்பற்றுவதில் எப்போதும் உறுதியாக உள்ளதாகவும்" தங்கள் பங்குகளை வைத்திருப்பவர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு "அதானி குழுமம் அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்கியிருப்பதாக உறுதியளிப்பதாகவும்" அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் முதலீடு செய்ய உறுதியளித்த அதானி

பிரதமர் நரேந்திர மோதியின் நெருங்கிய நண்பராக கௌதம் அதானி கருதப்படுகிறார். அதானி தனது அரசியல் தொடர்புகளின் மூலம் பயனடைவதாக நீண்டகாலமாக அவர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இருப்பினும், அதானி இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறார்.

அமெரிக்க அரசு வழக்கறிஞர் பதவிகள் அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்படுகின்றன. அமெரிக்க நீதித்துறையை மாற்றியமைப்பதாக உறுதியளித்து, வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

கடந்த வாரம் டிரம்பின் தேர்தல் வெற்றிக்குத் தனது சமூக ஊடக பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகவும் கௌதம் அதானி உறுதியளித்திருந்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)