அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விறுவிறுவென பாய்ந்த மாடுபிடி வீரர்களை சுத்தவிடும் காளைகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று காலை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்றைய போட்டியில் 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் அருண் விஜய் வந்துள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு அருகில் மேடையில் அமர்ந்திருந்த அவர், ஜல்லிக்கட்டை தான் நேரில் பார்ப்பது இதுதான் முதல் முறை என்றும், தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளுடன் இதை நடத்தி வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுமார் எட்டு சுற்றுகள் வரை இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 75 வீரர்கள் பங்கேற்பார்கள். ஒரு சுற்றில் காளையை அடக்கி வெற்றி பெறும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்குத் தகுதி பெறுவர்.

மூன்றாவது சுற்று வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கான முதலுதவி வழங்க ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்திலேயே மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களும் தயாராக உள்ளன. இதுவரை ஒருவருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

இதுவரை நடைபெற்ற சுற்றுகளில் எட்டு காளைகளை அடக்கி, அபிசித்தர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்தப் போட்டியில் வி.கே.சசிகலாவின் காளையும் பங்கேற்றது. அந்தக் காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், நாணயம், உள்ளிட்ட பரிசுகளை அமைச்சர் உதயநிதி வழங்கி வருகிறார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்த பின்பே களத்திற்குள் இறங்க அனுமதிக்கப்படுவர்.

அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மருத்துவ காரணங்களுக்காக ஏழு மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அரசு வழங்கிய டோக்கன்கள் உள்ள ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமே களத்திற்குள் அவிழ்க்க அனுமதிக்கப்படும்.

அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்பையோ, வாலையோ பிடிக்கக்கூடாது. பிடித்தால் வீரருக்கு எச்சரிக்கை அளிக்கப்படும், அதையும் மீறி அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வீரர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை வெற்றி பெற்றதா அல்லது மாடுபிடி வீரர் வெற்றி பெற்றாரா என்பது குறித்து கமிட்டியினர்தான் முடிவு செய்வார்கள். அதேபோல், நீதிமன்றம் அறிவித்துள்ளதன்படி சாதிப் பெயர்களைக் குறிப்பிடுவது கிடையாது என்கிறார், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜன்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் பேரில், ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை அதன் உரிமையாளரின் சாதிப் பெயரை குறிப்பிட்டு அவிழ்க்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விதிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என இந்த ஆண்டின் மூன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் கடைப்பிடிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்து வருவதாக விழா பொறுப்பான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)