நூறு நாள் கடந்து நீடிக்கும் போர்: யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் உறுதி
காஸாவில் இனப் படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், யாராலும் தங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெற்றி பெறும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தி சுமார் 240 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஹமாஸை அழிக்கப் போவதாக கூறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. அப்போதிருந்து இதுவரை காஸாவில் 23,750-க்கும் அதிகமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப் படுகொலையில் ஈடுபடுகிறதா என்பது குறித்து விசாரிக்க வலியுறுத்தி சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா வழக்கு தொடர்ந்தது. இனப் படுகொலை தொடர்பான 1948ஆம் ஆண்டு உடன்படிக்கையை இஸ்ரேல் மீறுவதாக தென் ஆப்ரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, இஸ்ரேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கலித் ரகுவான் (Galit Raguan), ராணுவ நோக்கங்களுக்கு இடையூறாக ஹமாஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளே இந்த பாதிப்புகளுக்கு காரணம். இதை இனப்படுகொலைக்கான ஆதாரமாக கருத முடியாது என குறிப்பிட்டார்.
முழு விவரம் காணொளியில்...

பட மூலாதாரம், Getty Images
(பிப்ரவரி 16 திருத்தம்: அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டதாக இந்தக் கட்டுரையில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது 1,200 க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன், கூடுதலாக காயங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்போது காயங்களால் இறந்தவர்களையும் சேர்த்து சுமார் 1,200 இறப்புகள் எனக் குறிக்கும் வகையில் கட்டுரை திருத்தப்பட்டுள்ளது. எனினும் இது இறுதியான எண்ணிக்கை அல்ல என்று இஸ்ரேல் கூறுகிறது.)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



