இலங்கை தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வளவு சாத்தியம்?

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?
படக்குறிப்பு, தமிழ் கட்சிகள்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பல்வேறு குழப்பங்களுக்கிடையே இலங்கையின் 2024-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தேதி இன்று (வெள்ளி, ஜூலை 26) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேஷ வர்த்தமானியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழர் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தமிழ் தரப்பிற்கு இடையிலேயே மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதை முன்னிலைப்படுத்தி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு இடையில் உடன்படிக்கையொன்று ஜூலை 22-ஆம் தேதி கைச்சாத்திடப்பட்டது.

மொத்தம் 9 புரிந்துணவர்களை ஏற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள், யாழ்ப்பாணத்தில் இந்த உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியன இணைந்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன.

இந்த உடன்படிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?
படக்குறிப்பு, ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் ஸ்ரீகாந்தா

'தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு'

புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளவை கீழ்வருமாறு:

1. தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இந்த உடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு 'தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு' என அழைக்கப்படும்.

2. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் 'தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு' எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.

3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான விஷயங்கள், பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக் குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும்.

4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும்.

5. தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?
படக்குறிப்பு, ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் சி.வி.விக்னேஸ்வரன்

'தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகள்'

6. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது பொது வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்படுபவருடனும், அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும் அந்தக் கட்சியுடனும் அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

7. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகிய இரு தரப்பும் ஒரு பொதுக் கட்டமைப்பாக செயற்படுபவர்கள் என்னும் அடிப்படையில் கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்றும் இணக்கம் இதற்கான காணப்படுகின்றது.

8. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உடன்பாடுள்ள ஏனைய கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பொதுக் கட்டமைப்புடன் இணைந்து பயணிக்க முன்வரும்போது, அவர்களை உள்வாங்கிக் கொள்வதென்றும் இணக்கம் காணப்படுகின்றது.

9. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றும் குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக் கொள்கின்றனர்.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

பட மூலாதாரம், RANJAN ARUN PRASADH

படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்

'தமிழர் நலனுக்கான முன்னெடுப்பு'

இதேவேளை, கொள்கை ரீதியாக ஒன்றுப்பட்டு செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புக்களுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே முதன்மை கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிடுகின்றார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கருத்து தெரிவித்தார்.

''ஆத்மார்த்தமாக அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் சூழ்நிலைகளை அனுசரித்தவாறு எமது இனத்தின் சமத்துவ வாழ்வுக்கான பயணத்தை நாம் எல்லோரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்ற கால கடமை எம் ஒவ்வொருவருடைய கரங்களிலும் தரப்பட்டுள்ளது,” என்றார்.

"ஈழத் தமிழீனத்தின் விடுதலைக்கு நீதி வேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களை அபிலாஷை வெளிப்பாடுகளை சிங்கள் தேசம் எப்போது புரிந்துக்கொள்ள முயற்சிக்கின்றதோ? அப்போது தான் அர்த்தம் மிகுந்த இலங்கையை கட்டியெழுப்ப முடியும்,” என்றார்.

‘தமிழர்களின் மூன்று முக்கியப் பிரச்னைகள்’

மேலும் பேசிய அவர், "அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பையும், இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயற்பாடுகளை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை,” என்றார்.

"அடிப்படை விருப்புக்களை கோருகின்ற எமது அரசியல் உரிமை மீது போர் தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை, தமிழ் தேசியம் என்ற ஒரு குடையின் கீழ் நின்று கூட்டாக எதிர்க்கும் முயற்சியை உருவாக்குவதில் தமிழினம் இன்று பெரும் தோல்வியை சந்தித்திருக்கின்றது.

"ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்னைகள் எது என்ற கேள்வியை எங்களது இளைய தலைமுறையை நோக்கி எழுப்பினால், நிலப்பறிப்பு, காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்கின்ற மூன்று நிலைகளுமே அவர்களால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

"ஆனால், அந்த மூன்று பிரச்னைகளும் இனவிடுதலைக்கான களத்தை திறக்கவில்லை என்ற பொது புரிதல் எங்களிடத்தில் இல்லை.

"கொள்கை ரீதியாக ஒன்றுப்பட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேச கட்டமைப்புக்களுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்போம் என்பதே எங்கள் ஒவ்வொருவருடைய முதன்மை கடமை என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்," என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

பட மூலாதாரம், RANJAN ARUN PRASADH

படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா

இலங்கை தமிழரசுக் கட்சி ஏன் கைச்சாத்திடவில்லை?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் முக்கிய கட்சியாக கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவை தொடர்புக் கொண்டு வினவியது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த விஷயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானமொன்று எட்டப்படும் என அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. சம்பந்தன் ஐயாவின் மறைவு காரணமாக எமது மத்திய செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முடிவதற்கு முன்னர் கூட வேண்டியிருக்கும். ஒற்றுமையை மையமாக வைத்து நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளேன்," என இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

முதல் தடவையாக தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர்

இலங்கையில் 1978-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக இதுவரை 8 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் 1982-ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், இந்த தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார்.

1982-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியிருந்தார்.

இதன்படி, சுயேட்சை வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டியிட்டதுடன், இறுதியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சுப்ரமணியம் குணரத்னம் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

இலங்கையில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்கள் சுயேட்சையாக களமிறங்கியிருந்த நிலையில், பொது வேட்பாளராக இன்று வரை எவரும் களமிறக்கப்படவில்லை.

இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அந்த பொது வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

பட மூலாதாரம், RANJAN ARUN PRASADH

படக்குறிப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்

தமிழ் பொது வேட்பாளருக்கு தெற்கில் ஆதரவு உண்டா?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் முயற்சியிலேயே தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுகின்ற நிலையில், தென் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை.

இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு பொறுத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

''என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஒரு தமிழர் வேட்பாளர் ஜனாதிபதியாவது என்றால், முதலில் வேட்பாளரை நாங்களே நிறுத்த வேண்டும். ஆனாலும், இலங்கையில் தமிழ் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியகூறு இல்லை என்கின்ற பட்சத்தில் அடுத்த கட்டமாக யார் ஜனாதிபதியாக போகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்கி, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தான் காலத்திற்கு பொறுத்தமானது என நான் நம்புகின்றேன்,” என்றார்.

"எனினும், கட்சியின் நிலைப்பாடு என்று பார்க்கும் போது, நான் கட்சியின் தலைவராக இருந்தாலும், கட்சியின் தேசிய சபையில் எடுக்கும் முடிவை மாத்திரமே அறிவிக்க முடியும். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் கட்சியின் தேசிய சபை இதுவரை முடிவெடுக்கவில்லை," என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

பட மூலாதாரம், PRABHAGANESHAN

படக்குறிப்பு, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன்

தென்னிலங்கை தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.

''தமிழ் பொது வேட்பாளர் விஷயத்தில் மூன்று விஷயங்கள் காணப்படுகின்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குத் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு வராது. வடக்கு, கிழக்கு மக்களுக்கும் பெரும்பாலும் அந்த விடயத்தில் உடன்பாடு இல்லை. சிங்கள வேட்பாளருடன் தான் போக வேண்டும்,” என்றார்.

"தென்னிலங்கையிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறங்குவதை நாம் பிழை எனச் சொல்லவில்லை. ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிட் முடியும். தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதன் ஊடாக, தமது பேரம் பேசும் சக்தியை தமிழர்கள் இழக்கின்றார்கள். அதைவிட சிங்கள வேட்பாளர்களிடம் சென்று பேரம் பேசி எதையாவது சாதித்தால் அது நல்லது என நினைக்கின்றேன்," என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், தென்னிலங்கையிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிக்கின்றமை காண முடிகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மாத்திரமே தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திவருகின்றன.

ஆனால், இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், தமிழர் ஒருவர் ஜனதிபதியாக தெரிவாவத்றகான சாத்தியம் மிகமிகக் குறைவு என மலையகத் தமிழ்க் கட்சியினர் கருதுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)