கனடாவில் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களை குறைக்க திட்டம் – இந்தியர்களை எப்படி பாதிக்கும்?

கனடா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் குறைவான ஊதியம் பெறும், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா, வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையைச் சமாளிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதால், வீட்டு வசதி, சுகாதார போன்ற பொதுச் சேவைகளில் அந்நாடு சவால்களைச் சந்திப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சியில் சுமார் 97% குடியேற்றம் பங்கு வகித்ததாக கனேடிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கனடாவில் பயின்று அங்கு ஐ.டி., துறையில் வேலை பார்த்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, “இங்கு இப்போது தொழிலாளர் சந்தை மிக மோசமான நிலையில் இருக்கிறது. சராசரியான சம்பளத்தில் ஒரு சாதாரண வேலை வேண்டுமென்றாலே அதற்கு அதிகமான சிபாரிசுகள் தேவைப்படுகின்றன,” என்கிறார்.

மேலும் ,"வெளிநாட்டினர் மட்டுமின்றி கனேடியர்களும் வேலை கிடைப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வேலையின்மை விகிதம் இங்கு அதிகமாக உள்ளது. இதற்கு இங்குள்ள கனேடியர்கள் குடியேற்றங்களைக் காரணமாகக் கூறுகின்றனர்.

"என்னதான் குடியேற்றப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கனேடிய மக்களின் ஆதரவு அரசுக்கு முக்கியம். ஆகையால் இந்த நிலைமையைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ட்ரூடோ அரசுக்கு ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கனடா, இந்தியா

பட மூலாதாரம், X

கனடாவில் அதிகரிக்கும் வேலையின்மை

ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது அரசாங்கமும் சேவைகள் அல்லது வீட்டு வசதியை மேம்படுத்தாமல் குடியேற்றத்தை அதிகரிப்பதாக விமர்சிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், கனடாவின் வேலையின்மை விகிதம் கடந்த இரண்டு மாதங்களில் 6.4% அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 14 லட்சம் மக்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, தொழிலாளர் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திட்டத்தை மாற்றியமைப்பதாகக் கூறினார்.

“ஒரு நல்ல வேலையைக் கண்டுபிடிக்கப் போராடும் கனேடியர்களுக்கு இது நியாயம் செய்யவில்லை. தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் இது நியாயம் செய்யவில்லை. அவர்களில் சிலர் தவறாக நடத்தப்பட்டு, சுரண்டப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

கனடா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவிட் காலகட்டத்தில் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தின்கீழ் அதிகளவிலான பணியாளர்களை கனடா அனுமதித்தது

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம்

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் என்பது கனடாவில் இருக்கும் முதலாளிகள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களை வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு அமர்த்துவதற்கான ஒரு திட்டம்.

இதுகுறித்து விளக்கிய கனடிய குடியேற்றம் தொடர்பான CANext நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞருமான நடராஜன் ஸ்ரீராம், “ஓர் உணவகத்தின் முதலாளிக்கு சமையல் வல்லுநர்கள் ஐந்து பேர் தேவையெனில், அதற்கான ஒப்புதல்களைப் பெற்று அவர் வெளிநாடுகளில் இருந்து அவர்களைப் பணிக்கு அமர்த்த முடியும். அதற்கு இந்தத் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் உதவுகிறது,” என்கிறார்.

இந்தத் திட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் வெளிநாட்டு மாணவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறும் நடராஜன், “கனடாவில் தற்போது நிகழும் வேலையின்மை பிரச்னை, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதியில் நிலவும் போதாமை காரணமாக இந்த முடிவு அவசியமாகிறது,” என்று கூறுகிறார்.

கோவிட் காலகட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் அதிகளவிலான பணியாளர்களை கனடா அனுமதித்தது. ஆனால், அதன் விளைவாக ஏற்பட்ட சமூகச் சமநிலையின்மையின் விளைவுகளை அந்நாடு தற்போது எதிர்கொண்டு வருவதால் இந்த மாற்றம் அவசியமாவதாகவும் அவர் விவரித்தார்.

கனடா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுகாதாரம், கட்டுமானம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கனடா செல்லும் இந்தியர்களை இது எப்படி பாதிக்கும்?

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு செல்பவர்கள் பல்வேறு திட்டங்களின்கீழ் செல்கிறார்கள். கல்வி பயில்வதற்காக, நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட வேலைக்காக என்று பல்வேறு திட்டங்கள் அதற்காக அங்கு உள்ளதாகக் கூறுகிறார் நடராஜன் ஸ்ரீராம்.

அவற்றில், இந்தத் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தின் கீழ் வருபவர்கள், “எந்த வேலைக்காக வருகிறார்களோ அந்த வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அடுத்த ஓரிரு மாதங்களில் தங்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்,” என்கிறார்.

ஆகையால், அதைச் சாதகமாக எடுத்துக்கொள்ளும் முதலாளிகளால், இந்தத் திட்டத்தின் கீழ் வருவோர் பெரியளவிலான சுரண்டலை எதிர்கொள்வதாகவும் பல்வேறு கொடுமைகளை அனுபவிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மாற்றம் அத்தகைய கொடுமைகளையும் சுரண்டல்களையும் தடுக்க வழி செய்யும் என்றும் நடராஜன் கருதுகிறார்.

இந்தத் திட்டத்தின்கீழ் கனடாவுக்கு வர முயலும் இந்தியர்களில் பெரும்பாலானோர் அதற்காகப் பணம் கொடுத்து ஏமாறுவது அதிகம் நடப்பதாகக் கூறும் அவர், அத்தகைய நடவடிக்கைகள் இனி குறையும் என்றும் நம்புகிறார்.

இதைத் தாண்டி, கல்விக்காகக் கனடா செல்லும் இந்தியர்களை இது எவ்விதத்திலும் பாதிக்காது என்கிறார் அவர். அதேவேளையில், நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கையையும் கனடா குறைத்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அதற்காக கனடா வர முயல்வோரிலும் குறைந்த ஊதியம் பெறும், திறன் குறைந்த பணியாளர்களையே இது பாதிக்கும் என்றும் கூறினார்.

“இந்த மாற்றம் திறனற்ற, குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்காக வருவோரின் எண்ணிக்கையைத்தான் குறைத்துள்ளது,” என்கிறார்.

அதேவேளையில், சுகாதாரம், கட்டுமானம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்தத் துறைகளில் வேலை செய்ய கனடா வரும் இந்தியர்களை இது பாதிக்காது என்றும் கூறினார் குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞர் நடராஜன் ஸ்ரீராம்.

கனடா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா செல்ல முயல்பவர்கள் என்ன செய்யவேண்டும்?

உணவுப் பாதுகாப்பு, விவசாய வேலைகள், கட்டுமானம், சுகாதாரம் ஆகியவை தவிர்த்து, வேலையின்மை விகிதம் 6% அல்லது அதைவிட அதிகமாக இருக்கும் பகுதிகளில் இந்த மாற்றங்கள் பொருந்தும்.

கனடாவில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, “அங்கு வேலையின்மை பிரச்னை இருக்கும் மாகாணங்கள் தவிர்த்து இதற்கான தேவை இருக்கும் வேறு மாகாணங்களைக் கண்டறிந்து அங்கு முயற்சி செய்யலாம்” என்று கூறினர்.

அதை ஆமோதிக்கும் வகையில் பேசிய நடராஜன் ஸ்ரீராம் “கனடாவில் எந்தெந்த பகுதிகளில் 6% அல்லது அதற்கும் அதிகமாக வேலையின்மை பிரச்னை நிலவுகிறதோ, அங்கு மட்டுமே இந்த மாற்றங்கள் பொருந்தும்,” என்று விளக்கினார்.

ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டம் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். ஆனால், ஏற்கெனவே கனடாவில் வேலை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களை இது பாதிக்காது.

அதேவேளையில், அவர்களுக்கான கால அவகாசம் முடியும்போது, அது நீட்டிக்கப்படுவதில் இந்தப் புதிய மாற்றம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றங்கள் செப்டம்பர் 26 முதல் அமலுக்கு வரும்.

மேலும், கனடாவில் இனி வரும் நாட்களில் இத்தகைய மாற்றங்களை அதிகமாக எதிர்பார்க்கலாம் என்று கூறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார், “கனடா வர முயல்பவர்களுக்கு முன்பு போல் எளிதாக இருக்காது,” என்றார்.

அதேவேளையில், அத்தகைய மாற்றங்கள் கல்விக்காக கனடா வருபவர்களை எந்த வகையிலும் பாதிக்காது என்றும், நிரந்தர குடியுரிமை பெற முயல்வோருக்குத்தான் சவால்கள் இருக்கும் என்றும் தான் கருதுவதாக ராம்குமார் தெரிவித்தார்.

கனடா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீப ஆண்டுகளில் விவசாயம் முதல் கட்டுமானம் வரையிலான தொழில்களில் முதலாளிகளால் இந்தத் திட்டத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது

'நவீன அடிமைத்தனம்' என்று விமர்சித்த ஐ.நா. அறிக்கை

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் கனடாவில் உள்ள முதலாளிகள் தகுதியான கனேடியர்கள் கிடைக்காதபோது, தற்காலிகப் பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது.

இந்தத் திட்டம் தொழிலாளர் நல வழக்கறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் ஐ.நா., இந்த மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது 'தற்கால அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக' கூறியது.

பிரிட்டனில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் சட்டப் பேராசிரியரான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா, “துஷ்பிரயோகம், தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெறுவது போன்ற புகார்கள்,” தனக்கு வந்ததாகக் கூறினார்.

சமீப ஆண்டுகளில் விவசாயம் முதல் கட்டுமானம் வரையிலான தொழில்களில் முதலாளிகளால் இந்தத் திட்டத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு தொழிலாளர் பற்றாக்குறை உள்ள தொழில்களுக்கு உதவும் திட்டத்தின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது இந்த நிலை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கனேடிய அமைப்பின்படி, 2023-இல், 183,820 தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் அனுமதிகள் வழங்கப்பட்டன. இது கடந்த 2019-இல் வழங்கப்பட்டதைவிட 88% அதிகம்.

கடந்த திங்கள் கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், 'கனடாவில் திறமையான தொழிலாளர்களைப் பணியமர்த்துவதைத் தவிர்த்து, சுரண்டுவதற்காக' இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தியதாக வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கனேடிய அமைப்பு முதலாளிகளை விமர்சித்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)