மாவீரன் விமர்சனம்: நாயகன் சிவகார்த்திகேயனுக்கு கேட்ட 'அசரீரி' ரசிகர்களுக்கு கேட்கிறதா?

மாவீரனாக ரசிகர்களை கவர்ந்தாரா சிவகார்த்திகேயன் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Shanthi Talkies/Twitter

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அதிதி, மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.

’மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற நிலையில், இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனும், தனது முந்தைய படமான ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்வியைக் குறிப்பிட்டு, “இந்த முறை மிஸ்ஸே ஆகாது” எனத் தெரிவித்தார்.

மாவீரனாக ரசிகர்களை கவர்ந்தாரா சிவகார்த்திகேயன் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Shanthi Talkies

மாவீரன் திரைக்கதை எப்படி?

‘மாவீரன்’ திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு சமரசத்துடன் வாழும் ஒருவனின் வாழ்க்கையை எங்கிருந்தோ கேட்கும் ‘அசரீரீ ஒலி’ மாற்றியமைத்து மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்க வைத்தால் அதுவே ‘மாவீரன்’ ஒன்லைன் எனக் குறிப்பிட்டு இந்து தமிழ் திசை விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

கார்ட்டூனிஸ்ட்டான சத்யா (சிவகார்த்திகேயன்) தனது அம்மா, தங்கையுடன் குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். திடீரென ஒருநாள் அரசு சார்பில் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறச் சொல்லி அறிவிப்பு வருகிறது.

மேலும், அந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதாகக் கூறி, அடுக்குமாடி குடியிருப்புக்கு இடமாற்றம் செய்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று மோசமான நிலையில் இருப்பதை எதிர்த்து முறையிடும் தன் தாயிடம் ‘அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கோம்மா’ என சமரசம் செய்கிறார் பயந்த சுபாவம் கொண்ட சத்யா.

இதன் நீட்சியாக தனது குடும்பத்துக்கு மற்றொரு பாதிப்பு நேரும்போதும்கூட, அதையும் தட்டிக்கேட்க முடியாமல் தன்னையே நொந்துகொள்ளும் அவர் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது நேரும் விபத்தில் அவர் வரைந்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் குரல் ஒன்று அசரீரீயாய் ஒலிக்கிறது.

அந்தக் குரல் கோழையான சத்யாவை எப்படி ‘மாவீரன்’ஆக மாற்றுகிறது என்பதே படத்தின் திரைக்கதை என இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும், “பெருநகர விரிவாக்கம், வளர்ச்சி என்ற பெயரில் குடிசைப் பகுதி மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தி அவர்களுக்கு அந்நியமான புறநகர் பகுதிகளுக்குத் தூக்கி அடிக்கும் அரசின் அவலப்போக்கை கருவாக எடுத்து அதை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின்.

‘மண்டேலா’ படத்தைப் போல இந்தப் படத்திலும் அவரது சமூகப் பொறுப்பு கவனிக்க வைக்கிறது. தான் எடுத்துக்கொண்ட கருவை ஃபேன்டஸி ஆக்‌ஷன் டிராமாவாக மாற்ற எழுதியிருக்கும் முற்பகுதி திரைக்கதை ரசிக்க வைக்கிறது,” என்று இந்து தமிழ் விமர்சனம் கூறுகிறது.

மாவீரனாக ரசிகர்களை கவர்ந்தாரா சிவகார்த்திகேயன் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Shanthi Talkies/Twitter

நாயகனுக்கு பில்டப் அதிகமா?

கதைக்களத்தின் சுவாரஸ்யத்திற்கு மிக முக்கியமான காரணம் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கான படிப்படியான உருமாற்றமும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரும். கூடவே யோகி பாபுவின் டைமிங் காமெடிகள் நிறைய இடங்களில் கைகொடுப்பது படத்திற்கு பலம் என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, “அமைச்சரான மிஷ்கினை சாமானியனான சிவகார்த்திகேயன் தனது அப்பாவித்தனங்களுடன் எதிர்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

அதுவரை பயந்த சுபாவம் கொண்ட நாயகன் கதாபாத்திரத்தை மாவீரனாக மாற்றி மக்களுக்கான பிரச்னைகளுக்கு துணை நிற்க வைக்கும் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் ஏகப்பட்ட சமரசம் செய்திருக்கிறார் இயக்குநர்.

தேவையற்ற சண்டைக்காட்சிகளால் நாயகனுக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் வில்லன் கதாபாத்திரத்தை பலவீனப்படுத்துகிறது. குறிப்பாக ‘மீட்பர்’, ‘தியாகி’ என்ற அடைப்புகளுக்குள் நாயகனை அடைத்து புனிதப்படுத்த வைக்கப்பட்டுள்ள ‘க்ளிஷே’ க்ளைமாக்ஸ் பார்த்து புளித்தவை,” என்று இந்து தமிழ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

அதைப் பின்தொடர்ந்து வரும் சில காட்சிகள் தேவையற்றவையாகவே கருதலாம் ஆகியவை படத்தின் பலவீனங்களாக இந்து தமிழ் திசை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவீரனாக ரசிகர்களை கவர்ந்தாரா சிவகார்த்திகேயன் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Shanthi Talkies/Twitter

அழுத்தமான கதை, வித்தியாசமான திரைக்கதை

விளிம்பு நிலை மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்ததற்கு சிவகார்த்திகேயனை பாராட்டலாம் எனக் குறிப்பிட்டுள்ள அதன் விமர்சனம், தனது வழக்கமான காதல், ரொமான்ஸ், இளைஞர்களைக் கவரும் ஜாலியான ‘டான்’ கதாபாத்திரங்களில் இருந்து விலகி கன்டென்டை நோக்கி நகரும் அவரது முதிர்ச்சி கவனிக்க வைப்பதாக பாராட்டியுள்ளது.

“அடித்தட்டு மக்களில் ஒருவராக எதார்த்த நடிப்பில் கவனம் பெறுகிறார் சரிதா. அரசியல்வாதியாக பொருந்திப் போகும் மிஷ்கின் கோவப்பட்டு கத்தும் இடங்களில் ‘சவரக்கத்தி’ பட கதாபாத்திரத்தை பிரதிபலிக்காமல் இல்லை. அசால்ட்டாக டைமிங்கில் ஸ்கோர் செய்யும் யோகிபாபுவை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதேநேரம் சுனில் கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டுள்ளது. தங்கையாக மோனிஷா நடிப்பில் குறைவைக்கவில்லை.”

பிற்பகுதியில் வரும் லைட்டிங் செட் அப், சிவாவுக்கும் மிஷ்கினுக்குமான லோ ஆங்கிள் ஷாட், அடுக்குமாடி குடியிருப்பை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் என விது அய்யனாவின் ஒளிப்பதிவு கவனிக்க வைப்பதாகவும் இந்து தமிழ் பாராட்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக அழுத்தமான கதையை வித்தியாசமான திரைக்கதையுடன் அணுக முயன்று ‘மாவீரன்’ சில சமரசங்களுக்குள் சிக்கிக்கொண்டதால், படத்தின் முற்பகுதி போல பிற்பகுதியில் போதிய பாய்ச்சலை நிகழ்த்தவில்லை எனவும் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் ஒரு மிக நீளமான ஃபேண்டஸி எண்டர்டெயினரில் ஜொலிப்பதாக குறிப்பிட்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா ‘மாவீரன்’ பட விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது.

மாவீரனாக ரசிகர்களை கவர்ந்தாரா சிவகார்த்திகேயன் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Shanthi Talkies/Twitter

மேலும், ‘மாவீரன்’ திரைப்படம் இயக்குநரின் முதல் படமான மண்டேலாவை போலவே, நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த பிரச்னைகளை முன்வைப்பதாகவும், வழக்கமான கதைக்களத்தைக் கொண்டிந்தாலும் அதன் கற்பனைக் கூறுகள் படத்தை உயிரோட்டத்துடன் நகர்த்துவதாகவும் அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யோகி பாபுவின் காமெடி எப்படி?

மாவீரன் மேலோட்டமாக கமர்ஷியல் டெம்ப்ளேட்டுக்குள் எடுக்கப்பட்ட என்டர்டெய்னர் போல உணர்ந்தாலும், ஆரம்பத்தில், மடோன் அஷ்வின் என்ற ஒரு திறமையான இயக்குநரின் படைப்பில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.

மாவீரன் படத்தின் முதல் பாதியை கூர்மையாகவும் நகைச்சுவையாகவும் சமூக வர்ணனையுடனும் உருவாக்கியிருக்கும் இயக்குநர், ஒவ்வொரு முறையும் நம்மை சிரிக்க வைக்கும் பொழுதுபோக்கு தருணங்களுடன் முதல் பாதி வேகமாக நகர்ந்தாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு சோர்வை ஏற்படுத்தும் வகையில் மாறுகிறது என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி விமர்சனத்தில், ‘மண்டேலா’ படத்தின் மூலம் ஒரு வாக்கு, தேர்தலில் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதைப் புரிதலோடு காட்சிப்படுத்திய மடோன் அஸ்வின், மாவீரன் மூலம் சமூக பிரச்னையை கையில் எடுத்து வெற்றி கண்டுள்ளார் என்று பாராட்டியுள்ளது.

கமர்ஷியல் படமாக இருந்தாலும், இத்தனை அடியாட்களை ஹீரோ சண்டையிட்டு வெல்ல முடியாது என்கிற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு ஃபேண்டசியை பயன்படுத்தி புத்தசாலித்தனமாக கதையை நகர்த்திவிட்டதாகவும் தினமணி குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக “படத்தின் முதல் பாதியில் யோகி பாபு வரும் காட்சிகளில் பலத்த சிரிப்புச் சத்தம் கேட்கும் படியான நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வடநாட்டு பணியாளராக யோகிபாபு வரும் காட்சியில் இயக்குநரின் நகைச்சுவை உணர்வு சரியாக கடத்தப்பட்டு இருப்பதாகவும்” விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும், “படத்தின் வெற்றியை இரண்டாம் பாதிகளே நிர்ணயிக்கும் என்பதால் முதல்பாதியில் கொடுத்த கவனத்தை இயக்குநர் இரண்டாம் பாதியிலும் கொடுத்திருக்கலாம். சில நல்ல காட்சிகள் திரைக்கதை தேக்கத்தால் வலுவை இழப்பது சிறிய பின்னடைவை ஏற்படுத்துவாக” விமர்சனத்தில் எழுதப்பட்டுள்ளது.

மாவீரனாக ரசிகர்களை கவர்ந்தாரா சிவகார்த்திகேயன் - சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், Shanthi Talkies/Twitter

மாவீரனாக வென்றிருக்கிறாரா சிவகார்த்திகேயன்?

இந்தக் கேள்விக்கு க்ளைமேக்ஸ் முடிந்ததும் வந்த கைத்தட்டல்களில் பதில் இருக்கிறது என தினமணி தனது விமர்சனத்தில் பதிவு செய்திருக்கிறது.

இந்தியா டுடே விமர்சனத்தில், சூப்பர் ஹீரோ சக்திகள் கொண்ட ஒரு மனிதனுக்கு மாறாக ஹீரோ கோழையாக நடிப்பது சுவாரஸ்யமானது.

மேலும், “அந்த கதாபாத்திரத்தை அலட்சியமாக சித்தரிப்பதில் சிவகார்த்திகேயனைவிட சிறந்தவர் யார்? சத்யா சாத்தியமான எல்லா வழிகளிலும் குறைபாடுடையவர். அவனுடைய அம்மா தைரியமானவள், ஆனால், அவனுடைய அம்மாவும் தங்கையும் எந்தவிதமான மோதலும் இன்றி நிம்மதியான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதே அவன் விருப்பம். ஆனால், அன்றாட வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கும்போது என்ன நடக்கும் என்பது படத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளது.

மடோன் அஷ்வினின் பலம், அவர் எப்படி சமூக பிர்சனைகளை நகைச்சுவையுடன் இணைத்துள்ளார் என்பதில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபுவின் உருக்கமான நடிப்புக்கு நன்றி எனவும் 'மாவீரன்' படத்தில் அது சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: