தெலுங்கு 'வாரிசு' விமர்சனம் : ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

விஜய் - வாரிசு விமர்சனம்

பட மூலாதாரம், SRI VENKATESWARA CREATIONS

பொங்கலை முன்னிட்டு தமிழில் வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் 2 நாட்களுக்குப் பிறகு, சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் ஜன.14-ம் தேதி வெளியானது. நாகார்ஜூனா, கிருஷ்ணா நடிப்பில் வாரசுடு என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் உள்ள நிலையில், அதே பெயரில் விஜய் நடிப்பில் புதிய படத்தை இயக்குநர் வம்சி பைடிபல்லி துணிச்சலாக வெளியிட்டுள்ளார்.

வாரசுடு படம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்ததா?

தெலுங்கில் 3 முன்னணி நாளிதழ்கள் வெளியிட்டுள்ள வாரசுடு விமர்சனத்தைப் பார்ப்போம். ஈநாடு, ஆந்திரா ஜோதி, சாக்ஷி ஆகிய நாளிதழ்கள் தங்களது விமர்சனத்தில் பல கதைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஈநாடு நாளிதழ் விமர்சனம்

வாரசுடு கதை தெலுங்கு ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்று ஈநாடு நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. வழக்கமான கதையையே படமாக்கும் வம்சி பைடிபல்லியுடன் படம் செய்ய விஜய் ஒப்புக் கொண்டிருப்பதாக அந்த நாளிதழ் எழுதியுள்ளது. இந்த படத்தில் உள்ள பல காட்சிகள், ஏற்கனவே பல படங்களில் பார்த்தவை என்றாலும், அந்த காட்சிகளில் விஜயை பார்ப்பதற்கு புதிதாக உள்ளது.

படத்தின் மேக்கிங் பிரமாண்டமாக இருந்தாலும் அது ரசிகர்கள் அல்லாத, மற்றவர்களை கவருமா என்பது சந்தேகமே. விஜயின் ஹீரோயிசமும், நடனமும் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், இந்த படம் பழைய படங்களை உங்களுக்கு நினைவூட்டலாம். நடிகர் விஜயின் தோற்றமும், ரசிகர் பட்டாளமுமே படத்திற்கு பெரிய பலம். விஜயின் ஆடைத் தேர்வுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை படத்தின் கதைக்கு இயக்குநர் கொடுத்திருக்க வேண்டும். சில காட்சிகளிலும், பாடல்களிலும் மட்டுமே ராஷ்மிகா வந்து போகிறார்.

ஆந்திரா ஜோதி நாளிதழ் விமர்சனம்

வாரிசு, நடிகர் விஜய்

பட மூலாதாரம், TWITTER/SVC_OFFICIAL

ஆந்திரா ஜோதி நாளிதழும் கிட்டத்தட்ட அதேபோன்றதொரு விமர்சனத்தையே வெளியிட்டுள்ளது. தமிழில் முதல் படத்தை, அதுவும் விஜய் போன்ற பெரிய நட்சத்திரத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற வம்சி பைடிபல்லி இன்னும் சிறப்பான கதையை தேர்வு செய்திருக்கலாம். ஆனால், பல தெலுங்கு படங்களின் கதைகளை சேர்த்து, கலவையாக்கி வாரசுடு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இந்த கதையை எங்கோ பார்த்தது போலவே உணர்கிறார்கள். விதிவிலக்காக, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல காட்சிகள் இருக்கின்றன. இந்த படத்தில் கதையோ, பொருளோ இல்லை. கதை சொல்லப்பட்ட விதமும் விறுவிறுப்பாக இல்லை.

சாக்ஷி நாளிதழ் விமர்சனம்

வாரசுடு படம் குறித்து சாக்ஷி நாளிதழ் சில நேர்மறை விமர்சனங்களை முன்வைத்துள்ளது. வழக்கமான கதையாக இருந்தாலும், திரையில் படம் மிகவும் கலர்புல்லாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள நேசத்தையும், உறவையும் புதிய கோணத்தில் இயக்குநர் சொல்லியுள்ளார். சீரியஸான காட்சிகளில் கூட நகைச்சுவை பட இயக்குநர் வெற்றிகரமாக கையாண்டுள்ளார். படத்தில் புதுமை இல்லாததால் வெகுஜன மக்களை இந்த படம் கவராமலும் போகலாம். விஜயின் சண்டைக் காட்சிகளும், நடனமும் பார்வையாளர்களை ரசிக்க வைத்தாலும், ராஷ்மிகா குறிப்பிட்ட சில காட்சிகளுக்கே பயன்படுத்தப்பட்டிருப்பதாக சாக்ஷி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. படத்திற்கு தமனின் இசை பலம் சேர்த்திருக்கிறது.

தமிழ் விமர்சனங்கள் கூறுவது என்ன?

இந்தப் படத்தை விஜய்யின் ரசிகர்கள் ரசிக்கலாம். மற்றவர்கள் அதே அளவு ரசிக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.

"படத்தின் மிகப் பெரிய பிரச்னை, அதன் மையக்கதை. விஜய்க்கும் சரத்குமாருக்கும் இடையிலான பிரச்னையை காட்டியிருக்கும் விதம் அழுத்தமில்லாமல் இருப்பதுதான். அதேபோல வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் பலவீனமான எழுத்து சுவாரஸ்யமில்லாமல் கடக்கிறது. படத்தின் தொடக்கத்தில் ‘சூர்யவம்சம்’ காட்சிகள் நினைவுக்குவர, அதற்குப் பிறகு ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ எட்டிப் பார்க்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைப் பார்க்கும் உணர்வும் எழாமலில்லை.

காரணம், அந்தப் படத்தின் கேங்க்ஸடருக்கு பதிலாக கார்ப்பரேட் தொழிலை பின்புலமாக வைத்தால் ‘வாரிசு’ கதை ஒட்டிவிடுகிறது. அப்பா - மகன்கள், அண்ணன் தம்பிகளுக்கிடையிலான சென்டிமென்ட் காட்சிகள் மூட்டையில் திணிக்கும் துணியைப் போல பிதுங்கி புடைத்திருக்கிறது. கணிக்கக்கூடிய கதையுடன் காட்சிகளாகவும் எளிதில் கணிக்க முடிவதால் சுவாரஸ்யம், விறுவிறுப்புக்கு வறட்சி நிலவுகிறது. தேவையில்லாத இடங்களில் பாடல்களும், சண்டைக் காட்சிகளும், போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் வாக்குப் பதிவு என கூறி வைக்கப்பட்ட காட்சி ஒன்றும் சோதிக்கிறது. விஜய் நடித்த முந்தைய படங்களின் வசனங்களை வேறு வகையில் சொல்லவைத்திருப்பது சில இடங்களில் கைகொடுக்கிறது. ஆனால், பல இடங்களில் ‘கிரிஞ்ச்’ ஆகியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்புத் தோற்றம் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் அதீத செயற்கை ஆக்‌ஷன் காட்சிகள் தெலுங்கு படங்களை நினைவூட்டுகின்றன" என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம். 

மேலும், விஜய் போன்ற பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை குற்றவாளியாக்கி, எளிய மக்களை, மாணவிகளை கடத்துபவர்களாக காட்டும் காட்சிகள் அறம் சார்ந்த பிழை என்றும் சுட்டிக்காட்டுகிறது இந்து தமிழ் திசை. உப்புசப்பில்லாத கதைக்களத்துடன், வழக்கமான சினிமாவாக எஞ்சியிருக்கிறது வாரிசு என விமர்சித்துள்ளது புதிய தலைமுறை இணையதளம். 

"படத்தின் மிகப் பெரிய போதாமை, படத்தின் திரைக்கதையில் இருக்கிறது. குடும்பப் பாசம், பனிப்போர் தொடர்பான கதை என்றாலும் அதில் எவ்வித உப்புச்சப்பில்லாமல், எதற்கெனத் தெரியாமல் மோதிக்கொள்ளும் அண்ணன் - தம்பி பஞ்சாயத்து போரடிக்க வைக்கிறது. எதிர்மறை கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்படவில்லை. விஜய் போன்ற ஸ்டாருடன் போட்டிபோடும் அளவுக்கு இல்லையென்றாலும் சுமாரான சண்டைக்குக்கூட லாயக்கில்லாத அளவுக்கு மேம்போக்காக கதாபாத்திரங்கள் எழுதப்பட்டிருப்பதால் எப்படியும் எந்தப் பாதிப்பும் வந்துவிடாது என நமக்குத் தெரிந்துவிடுகிறது.இதுபோன்ற பிசினஸ் சம்பந்தப்பட்ட களத்தில் ஹீரோவுக்கு வரும் சவால்களை இன்னும் மிஸ்டர் பாரத் காலத்திலிருந்தே யோசித்துக் கொண்டிருப்பது படு போர். கதையளவில் புதிதாக எதுவும் வழங்காத மிக மிக வழக்கமான ஒரு சினிமா," என விமர்சித்துள்ளது புதிய தலைமுறை இணையதளம்.

வாரிசு திரைப்படம்

பட மூலாதாரம், VARISU - OFFICIAL TRAILER

தினமணி நாளிதழின் இணைய தளமும் திரைக்கதை மிக மேலோட்டமாக இருப்பதாகக் கூறியிருக்கிறது."இந்தப் படத்தின், திரைக்கதைக்குத் தேவையான சிக்கல்கள் பெரும்பாலும் குடும்பத்தைச் சுற்றியே வருவதால், படத்துக்கு ஒரு வில்லன் கதாபாத்திரம் தேவை என்பதற்காக எழுதப்பட்டதைப்போல இருக்கிறது ஜெயபிரகாஷாக வரும் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம். இருந்தபோதிலும், வாரிசு திரைப்படத்தை எடுப்பதற்கான நோக்கத்தை மிகச் சரியாக செய்திருக்கிறார் வம்சி. 

மையக் கருவான தாயின் பார்வையில் குடும்பத்தைப் பார்க்கும் உணர்வுகள், எல்லாம் இருந்தும் அனைத்தையும் இழந்ததைப் போல தவிக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஒரு தந்தை / தொழிலதிபர் உணர்வுகள் மிகச் சரியாகக் கடத்தப்பட்டிருக்கிறது. தவறியிருந்தால் படமே தடம்புரண்டிருக்கும். வம்சியின் இரண்டாவது நோக்கம் விஜய் ரசிகர்கள். ரசிகர்களுக்கும் சரியான விருந்தைப் படைத்திருக்கிறார் வம்சி. குறிப்பாக இரண்டாவது பாதியில் “மூன்று பிளாக்பஸ்டர் கதையைச் சொல்லி” என விஜய் பேசுவதும், அந்தக் காட்சியே போதும், வம்சி மனதில் விஜய் ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை உணர.

 படம் முழுக்க தனியொருவராக தூக்கி சுமக்கிறார் விஜய் என்றால் மிகையாகாது. நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல்கள் என முதல் பாதியில் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய். இரண்டாவது பாதியிலிருந்து, விசில் பறப்பதற்கான காட்சிகளிலும் விஜய் மிரட்டியிருக்கிறார். நடனம், கேலி - கிண்டல், சண்டை என மேலே சொன்னதைப்போல படத்தின் திரைக்கதையைத் தனியாளாக சுமந்திருக்கிறார் விஜய். ஆனால், திரைக்கதையைப் பொருத்தவரை, மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்ட உணர்வைத் தருகிறது" என்கிறது தினமணி இணையதளம்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

பொங்கல் வசூல் என்ன சொல்கிறது?

பொங்கலுக்கு ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் முதல் 7 நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இது மட்டுமின்றி, வாரிசு திரைப்படத்தில் ஓ.டி.டி. விற்பனையும், தொலைக்காட்சி உரிமம், பாடல்களுக்கான உரிமம் என மற்ற தளங்களின் விற்பனையை சேர்க்கும்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: