"கோட்டாபய ராஜபக்ஷவின் 'ஒரே நாடு ஒரே சட்டம்'; தமிழ் இனப் படுகொலையின் இன்னுமொரு பரிமாணம்": விக்னேஷ்வரன்

பட மூலாதாரம், Getty Images
சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே, ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உருவாக்கியுள்ள 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் ஜனாதிபதி செயலணியின் குறிக்கோளாகும் என, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஷ்வரன் தெரித்துள்ளார்.
"தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே இந்தச் செயலணி" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் செயலணியொன்றை நேற்று முன்தினம் உருவாக்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ; அதற்குத் தலைவராக சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்துள்ளமை பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையினுள் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதலும் இந்த செயலணியின் பிரதான பணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயலணியில் 09 சிங்களவர்களும், 04 முஸ்லிம்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.
இந்த செயலணி குறித்து விக்னேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்படி விடயங்களை - அவர் குறிப்பிட்டுள்ளார்.
"குற்றவாளிகளுக்கு உயர் பதவிகள் வழக்கும் கோட்டாபய ராஜபக்ஷ"

குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை இந்த ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியுள்ளமை தனக்கு வியப்பைத் ஏற்படுத்தவில்லை, எனக் குறிப்பிட்டுள்ள விக்னேஷ்வரன், "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு குற்றவாளிகளை இதுவரை தனது அதிகாரங்களைப் பாவித்து சிறைகளில் இருந்து வெளிக்கொண்டு வந்து மன்னிப்பு அளித்துள்ளார்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு உதாரணமாக இரண்டு நீதிமன்றங்களால் கொலைக் குற்றவாளியாக காணப்பட்ட ராணுவ சார்ஜன்ட் மற்றும் கொலை குற்றவாளியாக காணப்பட்ட துமிந்த சில்வா ஆகிய இரண்டு மரண தண்டனைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமையை தனது அறிக்கையில் விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் கரன்ணாகொட என்ற முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுக்கள் கைவாங்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமையினையும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"போர்க்காலத்தின் போது பல குற்றங்களைப் புரிந்த ராணுவ அதிகாரிகள், ஓய்வு பெற்ற பின், அவர்களுக்கு அரசாங்க உயர் பதவிகளை ஜனாதிபதி கொடுத்துள்ளார்".
"ஆகவே குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை, தற்போது ஜனாதிபதி செயலணிக்கு தலைவராக்கியமை எனக்கு வியப்பைத் தரவில்லை" என்றும் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்த சட்டத்தை கொண்டு வரும் திட்டம்
"வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு என்று 'தேச வழமை' என்ற ஒரு சட்டம், டச்சுக் காலத்தில் இருந்து சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது."

பட மூலாதாரம், Getty Images
´ஒரு நாடு ஒரு சட்டம்´ என்று கூறும் பொழுது தற்போது வலுவில் இருக்கும் 'றோம டச்சுச் சட்டம்', 'ஆங்கிலச் சட்டம்', 'கண்டியச் சட்டம்', 'தேசவழமைச் சட்டம்', 'முஸ்லிம் சட்டம்' ஆகியவற்றைப் புறக்கணித்து இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாகக் கணித்து, ஒற்றைச் சட்டத்தைக் கொண்டு வரவே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
´ஒரு நாடு ஒரு சட்டம்´ என்று கூறும் பொழுது - இந்த நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சிங்கள மாகாணங்களுடன் சேர்த்து, அவை சிங்கள பௌத்தத்துக்குள் அடங்கியவை என்று எடுத்துக் காட்டவே, இந்த இன ரீதியான செயலணி உருவாக்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகின்றேன்".
கண்டியத் திருமணங்களில் 'பின்ன', 'தீக' என்ற இரு விதமான திருமணங்கள் இருக்கின்றன. ஒன்றில் கணவனுடன் போய் மனைவி வாழ்வது மற்றையது மனைவியின் வீட்டுக்குச் சென்று கணவன் வாழ்வது.
"இவையெல்லாம் பாரம்பரியமாக கண்டிய மக்கள் ஏற்றுக்கொண்ட திருமண முறைகள். இவற்றையெல்லாம் 'ருகுணரட்ட'வில் (தென் மாகாணம்) இருந்து வரும் கோட்டாபய மாற்றியமைக்க இருக்கின்றாரா?"
"கண்டிய மக்களின் தலைவர்களுடன் கண்டிய சட்டத்தை நீக்கப் போவதாகக் கூறி அவர்களின் சம்மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளாரா? முஸ்லிம் மக்களுடன் இதுபற்றிப் பேசி 'முஸ்லிம் சட்டத்தை'க் கைவிட முஸ்லிம் மக்கள் ஆயத்தமா என்று அவர்களுடன் கலந்துரையாடியிருக்கின்றாரா? தமிழ்ப் பேசும் மக்கள் என்ற முறையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கும் அவர்களுக்குரிய சட்டத்தை மாற்றுவதோ தொடர்ந்து வைத்திருப்பதோ என்பது அவர்களின் பொறுப்பு. அது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பல்ல."

பட மூலாதாரம், Getty Images
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். 1833ல் வெள்ளையர்கள் (பிரித்தானியர்) இலங்கை முழுவதையும் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் வரையில், வட கிழக்கு தமிழ் அரசர்களாலும் தமிழ் சிற்றரசர்களாலும் ஆளப்பட்டு வந்தன."
"தமிழ் மொழியே அவர்களின் மொழியாகவும் இருந்தது. கண்டிய மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனும் இன்னும் சில கண்டியத் தலைவர்களும் பிரித்தானியர்களுடன் 1815ல் செய்து கொண்ட உடன்படிக்கையில் தமிழிலேயே கையெழுத்து இட்டார்கள்."
"இவ்வாறு தமிழுக்கும் தமிழருக்கும் என ஒரு அடையாளம் இலங்கையில் பண்டைக்காலம் தொட்டு இருந்து வருகையில், 'ஒரு நாடு ஒரு சட்டம்' என்பதின் அர்த்தம் என்ன? இலங்கை ஒரு நாடு அல்ல. அது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மலையக மக்கள் மேலும் பல சிறிய இன மக்கள் வாழும் நாடு. அதுவும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர். அரேபியாவில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் வந்து கிழக்கு மாகாணத்தில் குடியேறிய பின், தமிழ் மொழியையே அவர்கள் தம் தாய் மொழியாக ஏற்றுக் கொண்டார்கள்."
"இவ்வாறு இருக்கையில் இலங்கையானது ஒரு நாடாக இல்லாது பல நாடுகளைக் கொண்டிருக்கும் போது, ஜனாதிபதி எவ்வாறு 'ஒரு நாடு' பற்றி அறிவிக்கலாம்? ஐந்து சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது, இந் நாட்டில் எவ்வாறு ஒரு சட்டத்தை அமல்படுத்த எண்ணலாம்?" என்று சி.வி. விக்னேஷ்வரன் கேள்வி எழுப்புகிறார்.
"அதுவும் இவை யாவற்றையும் சிறையில் இருந்து வந்த ஒரு குற்றவாளியைத் தலைவராகக் கொண்ட ஒரு செயலணியைக் கொண்டு எவ்வாறு நடைமுறைப்படுத்த இருக்கின்றார்? தேரருக்கு எந்தளவுக்கு சரித்திரம் தெரியும், சட்டம் தெரியும்? "ஜனாதிபதியின் போக்கு ஒன்றையே வலியுறுத்துகின்றது. இந்த நாடு சிங்கள, பௌத்த நாடு என்றும், அதன் அடிப்படையில் இந்த நாட்டை ஒரு நாடாக அடையாளப்படுத்த வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள்."
"சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே - இந்த செயலணியின் குறிக்கோளாகும். தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே இந்தச் செயலணி.
சகல இன மக்களும் இவ்வாறான தான்தோன்றித்தனமான சிங்கள பௌத்த வெறி கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு". என, விக்னேஷ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












