தமிழர்களை கொன்ற, காணாமல் ஆக்கியவர் பாதுகாப்பு செயலாளராக நியமனம் என குற்றச்சாட்டு

கமல் குணரத்ன

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, கமல் குணரத்ன

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன-வை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

1987ம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இரண்டாவது லென்டினனாக இணைந்த கமல் குணரத்ன-வுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி யுத்த செயற்படுகளில் முழு மூச்சாக செயற்பட்டு பாதுகாப்பு பிரிவில் பெரிதும் புகழ்பெற்ற இவருக்கு லெப்டினன்ட் கர்ணல் பதவி வழங்கப்பட்டதோடு, 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் இருந்த மாங்குளம் முகாமை கைப்பற்றியபோது மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

அந்த காலகட்டத்தில் தற்போதைய புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவுடன் மிக நெருக்கமான உறவை கமல் குணரத்ன கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்திச் செல்லும் வகையில் 53ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.

பொறுப்பேற்கும் கமல் குணரத்ன
படக்குறிப்பு, பொறுப்பேற்கும் கமல் குணரத்ன

2009ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்ய பெரிய பிரயத்தனம் செய்துள்ளார் கமல் குணரத்ன.

யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் கமல் குணரத்ன பிரேசிலுக்கான இலங்கையின் பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டார்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் நாடு திரும்பிய அவர், ஒளி மற்றும் வியத்மக போன்ற கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பாதைக்கு வித்திடும் செயலமர்வுகள், மாநாடுகளை நடத்தி வந்திருந்தார்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை ராணுவத்தின் மீதான யுத்தக் குற்ற கறையை நீக்க ''நந்திக்கடலுக்கான பாதை" என்ற புத்தகத்தை எழுதி அதனூடாக குற்றச்சாட்டுக்களை கமல் குணரத்ன நிராகரித்தார்.

இலங்கையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட நூல்களில் ''நந்திக்கடலுக்கான பாதை" என்ற புத்தகமும் ஒன்றாகும்.

கோட்டாபய

மீண்டும் அண்மையில் “கோட்டாபய” என்ற நூலினை வெளியிட்ட அவர், ராணுவத்தை கோட்டாபய ஏன் விட்டுச் சென்றார் என்ற சர்ச்சைக்கு பதில் வழங்கியிருந்தார்.

கோட்டாபய ராணுவத்தில் சேவையில் இருந்தபோது அவரது குடும்பம் அமெரிக்கா சென்றது. ராணுவ வீரர் ஒருவர் களத்தில் இருக்கும்போது அடிக்கடி விடுமுறை எடுக்க முடியாது. அதேபோல குடும்ப பிரச்சினைகளை சமாளிக்கவும் வேண்டும் என்ற அழுத்தத்திற்கு மத்தியில்தான் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றார்.

மாறாக, பயந்து படையை விட்டு ஓடவில்லை என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச உண்மைக்கான மற்றும் நீதிக்கான திட்டம் பதில்

கருணா மற்றும் கமல் குணரத்ன

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, கருணா மற்றும் கமல் குணரத்ன

ராணுவத்தின் 53ஆவது படையணி ராணுவத்தின் உயிர்நாடி என 2009ஆம் ஆண்டு கமல் குணரத்ன தெரிவித்திருந்ததாக சர்வதேச உண்மைக்கான மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அரச சார்பற்ற நிறுவனம் தெரிவிக்கின்றது.

ட்விட்டர் தளத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆணையிறவு முதல் முள்ளிவாய்க்கால் வரையில் தமிழர்கள் புதிய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னத்திடமே சரணடைந்திருந்ததாகவும், அந்த தருணத்திலேயே தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் அல்லது காணாமல் போயிருந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையை மேற்கோள்காட்டி அந்த அமைப்பு குறிப்பிட்டுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :